Tuesday, December 22, 2009

தமிழகமும் ரயில்வே துறையும்!


இன்றைய தினம் தமிழக முதல்வரால் சில புதிய ரயில்கள் தமிழகத்தில் துவக்கி வைக்க பட்டு இருக்கிறது!

நெல்லையில் இருந்து பிலாசபூருக்கு திருவனந்தபுரம் வழியாக வாரந்திர அதி விரைவு ரயில்...

கன்னியாகுமரியில்
 இருந்து ராமேசுவரத்துக்கு மதுரை வழியாக வாரம் மூன்று முறை இயங்கும் அதிவேக விரைவு ரயில்....

ஜம்முதாவியில் இருந்து மதுரை வரை இயங்கி வந்த விரைவு ரயில் நெல்லை வரை வரை நீட்டிப்பு...

சென்னை - மங்களூர் அதிவேக விரைவு ரயில் வாரம் மூன்று முறையில் இருந்து ஆறு முறையாக சேவை விஸ்தரிப்பு...

போன்ற துவக்க நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது!

நெல்லைக்கு முக்கியத்துவம் கிடைப்பதில் மகிழ்ச்சி.. எனினும், அவை கேரளம் வழியாக இயக்கப்படுவதால் தமிழகத்துக்கு என்று எந்த பெரிய நன்மையையும் இருக்கப்போவதில்லை!

கோவையில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதை இரட்டை வழி பாதையாகவும் முழுமையாக மின்வசதியும் செய்யப்பட்டு இருப்பதால் இன்னமும் எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் அந்த வழியாக இயக்கமுடியும்.. மேலும் அது கொங்கன் ரயில்வேயுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால் மிக குறைந்த நேரத்தில் வட இந்திய நகரங்களுக்கு சென்று சேர இயலும்!

சென்னையில் இருந்து விழுப்புரம் வரைக்கும் மின்சார வசதியுடன் இரு வழிப்பாதை இயங்குகிறது... விழுப்புரம் திருச்சி இடையே ஒரு வழிப்பாதை தான்... எனினும் அது மின்வசதி செய்யப்பட்டு இருக்கிறது... இன்னமும் அது முறைப்படி துவக்கி வைக்கப்படவில்லை!  திருச்சி மதுரை இடையே இருவழிப்பாதையும், மின்மயமும் கோரிக்கை அளவிலேயே நின்றுபோய்விட்டது... மதுரை திருவனந்தபுரம் வழிப்பாதை பற்றி எந்த கோரிக்கையும் இல்லை!


(நெல்லை சந்திப்பில் இந்த வித்தியாசமான ரயில் இன்ஜினை பார்த்தேன்!)

இதற்கிடையே, விழுப்புரம் - மயிலாடுதுறை இடையேயான ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தயாராக இருக்கிறது என்றாலும், அந்த பாதை துவக்கி வைக்கப்படவில்லை!  கிழக்கு தமிழகத்தின் ஜீவாதார போக்குவரத்து வசதிக்கு அந்த ரயில் பாதை மிக மிக முக்கியம்!

துவக்க விழாவுக்கு  முக்கிய  பிரமுகர்களின் தேதி கிடைக்காமலேயே தள்ளி போன மக்கள் நல திட்டங்களின் எண்ணிக்கை நம் தமிழகத்தில் மிக மிக அதிகம்...

நாம் இப்போதைக்கு ரயில்வேயை பற்றி மட்டும் புலம்புவோமாக!

கோவை - பழனி - திண்டுக்கல் ரயில்பாதை அகலப்பாதை ஆக்கும் பணிக்காக மூடப்பட்டு இருக்கிறது... பணியின் வேகம் போதுமானதாக இல்லை!  விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் வழித்தடமும் அப்படியே!

விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கம் எல்லா வகையிலும் துவக்கத்துக்கு தயாராக இருந்தும் தேதி கிடைக்கவில்லை!

சேலம் - நாமக்கல் - கரூர்;  கோவை - சத்தி - சாம்ராஜ்நகர்; தருமபுரி - ஹோசூர்; போன்ற புதிய ரயில் திட்டங்கள் கோரிக்கை அளவிலேயே இருக்கின்றன.

(கோவை போத்தனூர் ரயில்வே பணிமனை அருகில் இந்த காட்சி படமாக்கப்பட்டது! எத்தனை காலம் உழைத்ததோ அந்த பழமையான ரயில் இஞ்சின்?)

கோவை நகரத்துக்கும் சென்னையை போலவே மின்சார புறநகர் ரயில் சேவை கோரிக்கையாக இருக்கிறது.. அது வந்தால், கோவை - பாலக்காடு; கோவை - பொள்ளாச்சி; கோவை - மேட்டுப்பாளையம்; கோவை - திருப்பூர் - ஈரோடு போன்ற வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் கோவைக்கு கல்வி / வேலை போன்றவற்றுக்கு வரும் ஆயிரக்கணக்கானோர் பயனடைய முடியும்.... அங்கே ரயில் பாதைகள் போதுமான போக்குவரத்து இன்றி இருப்பதாலும், குறிப்பிட்டுள்ள அந்த வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்து போதுமான அளவில் இல்லாததாலும் ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைப்பதுடன், எல்லோரும் பாதுகாப்பான விரைவான பயணம் செய்யவும் அது ஏதுவாகும்!

இத்தனைக்கும் கோவையில் இருந்து பாலக்காட்டுக்கு 20 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும்; கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும்; கோவையில் இருந்து திருப்பூருக்கும் மேட்டுப்பாளையத்திற்கும் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், இயங்கி வருகிறது.. கூட்டம் தான் குறைந்தபாடில்லை!

பொதுவாகவே தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் மிக மிக மெதுவாக அல்லது அலட்சியமாக நடைபெற்று வருகிறது....காரணம் நம் ஒற்றுமையின்மை! 

கேரளா போன்ற மாநிலங்களில், மாநில வளர்ச்சியை கவனத்தில் வைத்து எல்லா கட்சியினரும் ஒற்றுமையாக குரல் கொடுத்து அனைத்து திட்டங்களையும், புதிய ரயில்களையும் பெற்று கொள்கிறார்கள்!

(திருச்செந்தூர் ரயில் நிலைய நடைபாதை மேடையில் இருந்து கிளிக்கியது)

தமிழகத்தில் விடப்படும் ரயில்களால் தமிழகத்துக்கு பெரிதாக எந்த நன்மையையும் இருப்பதில்லை!

சென்னை - கோவை; சென்னை - மதுரை மார்க்கங்களில் ஒரு காலை நேர விரைவு ரயில் தேவை...  சென்னை - கோவை; சென்னை - திருச்சி; சென்னை - மதுரை மார்க்கங்களில் கூடுதலாக ஒரு இரவு ரயில் தேவை; சென்னை - நாகர்கோவில் மார்க்கத்தில் குறைந்தது இரண்டு ரயில்களாவது தேவை; இப்படி தேவைகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் தமிழகத்தில் இருந்து தேவைக்கான குரல்கொடுப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது!

எப்போது நம் தமிழகத்தை பற்றி சிந்திக்கின்ற நிலை இங்குள்ளோருக்கு உருவாவும்?

No comments:

Post a Comment

Printfriendly