Sunday, December 27, 2009

சாலை பாதுகாப்பு வார விழா!

சாலை பாதுகாப்பு வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது! வரும் ஜனவரி மாதத்துக்கான விழா ஏற்பாடுகள் இப்போதே களை கட்ட துவங்கி விட்டது.

அந்த ஒரு வாரம் மட்டும் (!) சாலை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, வர்ணங்கள் பூசுவது, அறிவிப்பு பலகைகள் வைப்பது, பிரச்சார இயக்கம் நடத்துவது, துண்டு அறிக்கைகள் கொடுப்பது, பேரணி நடத்துவது, விழிப்புணர்வு செய்திகள் கொடுப்பது என்று காவல் துறை பரபரப்பாக இருக்கும்.  அந்த வாரம் முடிந்தவுடன் அவ்வளவு தான்.  நாடு சுபிட்சமாக ஆகிவிடும் என்கிற நம்பிக்கையில் தங்கள் இயல்பான வேலையை செய்ய சென்று விடுகிறார்கள்.

அதிகரித்து வரும் விபத்துக்களுக்கான காரணிகள் என்ன??  நான்குவழிப்பாதையும் நடுவில் காங்கரீட் தடுப்பு சுவரும் அமைத்தும் கூட அதிகமான விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது??

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை எதிர் எதிர் மோதல்களோ, திருப்பங்களிலான மோதல்களோ கிடையாது.

பெரும்பாலான வாகனங்கள், வண்டியின் முன்பும் பின்பும் அவசியமான விளக்குகளை இயங்க செய்வதில்லை.  திரும்பும்போதும், நிறுத்தும்போதும் சைகையாக காட்டப்படவேண்டிய பல விளக்குகள் இயக்கப்படுவதில்லை.  இதனால் தான் பின்னே வருகிற வண்டிகள் மோதுவது ஏற்படுகிறது. 

அப்படியானால் அந்த வண்டிகளுக்கான தர சான்றிதழ்களை தருகின்ற போக்குவரத்து துறை அதிகாரிகளோ, அந்த வாகனம் இயங்கும்போது சாலையில் அவற்றை கண்காணிக்கிற கடமையும் அதிகாரமும் உள்ள போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளோ எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்??

நகரங்களை பொறுத்தவரை முன் முகப்பு விளக்குகளின் பங்கு விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று!  கண்கூசும் முகப்பு விளக்குகள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன, எனினும் எல்லா வாகனங்களும் ஒளிர் விளக்குகளுடனேயே விரைகின்றன.  இந்த விளக்குகளால் சென்னை போன்ற நெரிசலான நகரங்களில் குறுக்கே வரும் இரு சக்கர வாகனங்களோ, சாவகாசமாக சாலையை கடக்கும் பாதசாரிகளோ கண்ணுக்கு தெரிவதே இல்லை.

போதா குறைக்கு சாலைகளின் தரம் வேறு சந்தி சிரிக்கிறது!  ஒரே ஒரு கிலோமீட்டருக்கேனும் ஒட்டோ, குழியோ, மேடோ, சதுப்போ இல்லாத ஒரு சாலையும் சென்னையில் இல்லை.  இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு நன்கு தெரியும், கைப்பிடி அதிராத ஒரு பயணமும் சென்னையில் சாத்தியம் இல்லை என்று. அந்த லட்சணத்தில் இருக்கிறது சென்னையின் சாலைகளின் தரம். புதிதாக கட்டப்பட்ட பாலங்களில் கூட சமமான பரப்பில் சமதள சாலைகள் இல்லை என்பதன் வருத்தம் இரு சக்கர வாகன ஓட்டிகளால் மட்டுமே உணரப்படுகிறது!

எல்லா சாலைகளிலும் போதுமான வெளிச்சமும், சாலைகளின் ஓரத்தில் சாலை விதி சங்கேத குறிகளும் கட்டாயமாக வைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது விதி.  இப்படியான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக தமிழக அரசு தனியான ஒரு சட்டத்தையே போட்டு இருக்கிறது.  இதற்காக தனி நிதியத்தை ஏற்படுத்தி அந்த நிதியை கொண்டு 27 வகையான சாலை மேம்பாட்டு வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது சட்டம்.  எத்தனையோ சட்டங்களை போலவே இந்த சட்டமும் ஏட்டளவில் மட்டும் தான் இருக்கிறது.  சாலை குறிப்புக்களோ, தடுப்புக்களோ, முறையான போக்குவரத்துக்கான வசதிகளோ இது வரையும் செய்து கொடுக்கப்படவே இல்லை.  எனினும் செலவுகள் செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது, எதற்காக என்றே தெரியாமல்.  பல
 பல சிக்னல்கள் சென்னை நகரில் வேலை செய்வதே இல்லை என்பது நகரா வாசிகள் அனைவரும் அறிந்த ரகசியம்.  அதை பராமரிப்பு செய்வதற்கான ஒப்பந்தமும் செலவும் செய்தும் இது வரை பயனில்லை.

சாலைகளில் வாகனங்களை ஓட்டுவோர் முறையான வழிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஒட்டாமல் இருப்பதும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம்.  சட்டென்று திரும்புவது, திடீரென்று நிறுத்துவது, போதிய எச்சரிக்கை விளக்குகளை உமிழ விடாதது போன்ற காரணிகளால் பிற வாகனங்கள் மோதலுக்கு உள்ளாகிறது.

நகரங்களில் வாகன சோதனை நடத்தும் காவலர்கள் ஆவணங்களை சரிபார்ப்பதோடு நின்று விடாமல், வாகனங்களின் / வாகன ஓட்டிகளின் இத்தகைய முறையற்ற தன்மைகளையும் தணிக்கை செய்வதும், அதற்கான கடுமையான நடவடிக்கைகளுமே ஒழுங்கான வாகன போக்குவரத்துக்கு வழி செய்யும்.

இரு சக்கர வாகன விபத்துக்களுக்கான காரணிகளை தவிர்க்க முனையாமல், குறைக்காமல், விபத்து ஏற்பட்டால் மரணம் சம்பவிக்காமல் இருப்பதற்கான ஹெல்மெட்டை கட்டாயம் செய்திருக்கிறது நீதிமன்றம்.  விபத்தை தவிர்ப்பது தான் முக்கியமே தவிர விபத்தில் மரணத்தை தவிர்ப்பது அல்ல!  இது எந்த செவியிலும் நுழையவேயில்லை. (ஹெல்மெட் பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுத  அவசியம் ஏற்பட்டு இருக்கிறது... எனவே, விரைவில்!)

எத்தனையோ சட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்ட காவல் துறை நண்பர்கள் போக்குவரத்து சட்டங்களையும் அலட்சியம் செய்வதால் தான் இத்தனை மரணங்கள் வாகன விபத்துக்களில் ஏற்ப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  எனவே சற்றேனும் மனிதாபிமானம் கொண்டு இந்த ஒரு சட்டத்தையாவது கடுமையாக அமல்படுத்த முனையவேண்டும்.

முன்னறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது வாகன தணிக்கையும், அதில் சிக்கும் தவறு செய்வோருக்கு தக்க நடவடிக்கையும் எடுப்பது தான், வாகன போக்குவரத்தில் ஒழுக்கத்தையும் சுமுகமான சூழலையும் கொண்டு வரும்.

மனிதம் காப்பார்களா மரியாதைக்குரிய காவலர்கள்??

No comments:

Post a Comment

Printfriendly