Thursday, December 24, 2009

எம்.ஜி.ஆர் - ஒரு சகாப்தம்!


டிசம்பர் 23, 1987.

கிரிஸ்துமசுக்கான அதீத ஏற்பாடுகளுக்காக கோவையில் சில நண்பர்களுடன் இரவின் பெரும் பகுதியை கழித்துவிட்டு வந்து உறங்கினேன்!

மறுநாள் காலை இன்னும் சில வேலைகள் இருந்தது... ஆல் இந்தியா ரேடியோவின் அதிகாலை செய்தியில் அமிலம் தெளித்து வந்து விழுந்தது விசும்பலான வார்த்தைகள்!

"தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்!"

நம்ப முடியவில்லை!  எம்.ஜி.ஆருக்கு கூட மரணம் வருமா?? நினைத்து பார்க்கவே முடியவில்லை!  என்ன செய்வது என்றும் தெரியவில்லை!  குடும்பத்தில் ஒருவர் இறந்து போனதுபோன்ற ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டோம்!

காலை பத்து மணிக்கு சென்னைக்கு இலவசமாக ஒரு ரயில் இயக்கப்படுவதாக அறிந்து அவசரம் அவசரமாக கோவை ரயில் நிலையம் சென்றோம்... ஆனால் அதற்குள்  ரயில் முழுமையாக நிறைந்து பிதுங்கி விட்டிருந்தது!

அந்த கோமகனின் இறுதி சடங்கை காணமுடியாமலேயே கடந்து போனது காலம்!

எம்.ஜி.ஆர்!

இந்த மூன்றெழுத்தின் சக்தி அளப்பரியது!  ஒவ்வொரு குடும்பத்திலும் அவரால் பயன் பெற்றவர்கள் என்று (நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அவரது சட்டங்கள் மூலமாகவோ, நல திட்டங்கள் மூலமாகவோ) ஒருவரேனும் இருப்பார்கள்.

அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தபோது, சென்னை எண்ணூரில், ஒளிவிளக்கு திரைப்படத்தின் பாடலை உச்ச ஸ்தானியில் ஒலிக்கவிட்டு, தங்களை தாங்களே எரித்து கொண்டு இறந்தவர்களை தூர நின்று பார்க்க நேர்ந்திருக்கிறது எனக்கு, என் சிறு வயதில்!

"உன்னுடனே வருகின்றேன், என்னுயிரை தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!"

இறந்து இதோ இருபத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது!  இன்னமும் அவர் இறந்ததை சிலரால் நம்ப முடியவில்லை!  எங்கேயோ உயிருடன் தான் இருக்கிறார்... மாறுவேடத்தில் வாழ்கிறார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருப்போர் பலர்... எம்.ஜி.ஆர் படத்துக்கு பூஜை அறையில் இடம் ஒதுக்கி வழிபாடு மேற்கொள்வோர் பலர்....

எப்படி சம்பாதித்தார் இத்தனை அன்பு?

அவர் மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களின் வலிகளை உணர்ந்தவர், மக்களின் தேவைகளை அவர்களுக்கு தெரியாமலேயே தீர்த்து வைப்பவர்...

ஒரு முறை திருச்சி திமுக மாநாடு! அப்போதெல்லாம் மாநாடு ஐந்து நாட்கள் வரை நடக்கும்!  நுழைவு கட்டணமும் உண்டு!  எல்லா ஊர்களில் இருந்தும் வண்டி வாகனங்களில் மாநாட்டுக்கு வந்து மாநாட்டு பந்தலிலே தங்கி இருப்பார்கள் தொண்டர்கள்!

ஒரு நாள் விடிகாலை, மறுநாள் நிகழ்வு குறித்தான ஆலோசனைக்காக அண்ணா, கருணாநிதி,சம்பத் போன்றோர் மாநாட்டு திடலுக்கு வந்தபோது திடல் அருகே பெரிய அளவிலே சமையல் நடந்து கொண்டு இருந்ததாம்.... விசாரித்தால் வெளியூரில் இருந்து வந்து தங்கி இருக்கும் தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர் தன சொந்த செலவில் உணவு தயார் செய்து கொண்டு இருந்தாராம்.....

அந்த தொண்டர்களுக்கே அப்போது அது தெரியாது!  அவன் பசி பற்றி அவன் உணரும் முன்பே உணர்த்து அதை தீர்க்க முற்பட்டவர் எம்.ஜி.ஆர்!  அந்த குணம் தான் தன்னை பற்றி கவலைப்பட ஒரு தலைவன் இருக்கிறான் என்று எல்லோருக்குள்ளும் நம்பிக்கை தந்தது!

செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தபோழுது, அதனை பார்வையிட்டு செப்பனிட அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சரான காளிமுத்துவை அனுப்பினாராம் எம்.ஜி.ஆர்.  ஆனால் மழையில் வழி தெரியாமல் நீண்ட நேரமாக அங்கே நின்றுகொண்டிருந்த காளிமுத்து, வெகு நேரத்துக்கு பின்னால் யாரோ சிலர் வருவது அறிந்து தெம்பு அடைந்தாராம்.   வந்தது வேறு யாரும் அல்ல... எம்.ஜி.ஆரும் சில அதிகாரிகளும் தானாம்!  அமைச்சரை அனுப்பி விட்ட பிறகும் அதை பற்றியே சிந்தித்துக்கொண்டு, தானே களத்தில் இறங்கிய முதல் அமைச்சர் அவர்...  அவரும், காளிமுத்துவும், அதிகாரிகளும், பொதுமக்களுமாக அந்த நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியை சீர்படுத்த துவங்கினார்கலாம்.. (இது கோவை பாப்பநாயக்கன் பாளையம் பொதுக்கூட்டத்தில் திரு காளிமுத்துவே சொன்னது)

இப்படி அவரை பற்றிய, அவரது மக்கள் நலம் குறித்தான செய்திகள் சில புத்தகங்கள் அளவுக்கு தேறும்!

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் தமிழக அரசியலில் அவர் பெயரை சொல்லாமல் அவருக்கு வேண்டாதவர்கள் கூட பிழைக்க முடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கை வளர்த்து வைத்திருந்தவர் அவர்!

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மாநில வளர்ச்சி, தொழில் துறை மேம்பாடு என்று சகல துறைகளிலும் முற்போக்கான சிந்தனைகளால் தமிழகத்தை வேகமாக முன்னெடுத்து சென்றவர் அவர்!  இன்றைக்கு நாம் எல்லோரும் இந்த அளவுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்றதற்கான முதல் புள்ளியை ஊன்றி வைத்தவரே அவர் தான்! 

மொத்த தமிழகத்தை தன சொந்த வீடாக கருத்தி, அனைவரையும் தனது குடும்பத்தினராக கருதி, அவர்களுக்கான தேவைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தவர் அவர்!

எம்.ஜி.ஆரை பற்றி சொல்லிக்கொண்டே போவதானால் தீரவே theraathu!

வைரமுத்து "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்" நூலில் சொன்னதை போல "உலகத்தில் ஒரே ஒரு சூரியன் தான்; உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான்; உலகத்துக்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்"

இந்த நினைவு நாளிலாவது அவரை நினைவு கூறி நன்றியுடையவனாக முயற்சிக்கிறேன்!!

2 comments:

  1. நல்ல பதிவு.. ஏன் இன்னும் தமிழிஷ்ல, தமிழ்மணத்துல இணைக்கல??

    ReplyDelete
  2. நேர்த்தியாக உள்ளது!

    ReplyDelete

Printfriendly