Monday, February 22, 2010

தலை போல வருமா?

இன்னைக்கு தேதிக்கு அரசியல் துறையிலாகட்டும், சினிமா துறையில் ஆகட்டும் ரொம்ப பரபரப்பான விஷயம் முதல்வர் விழாவில் அஜித்தின் பேச்சு தான்!

அது சரியா தவறா என்கிற விவாதம் ஒருபுறம்... அது சரியாகவே இருந்தாலும் அவர் பதிலளிக்க தேர்ந்தெடுத்த களம் சரியா என்பது இன்னொரு புறம் என்று விவாதங்கள் பட்டையை கிளப்புகின்றன.

அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் சினிமா விழாக்களுக்கு சினிமா பிரபலங்களை கட்டாயப்படுத்தி கலந்துகொள்ள வைக்க கூடாது என்பது அஜீத்தின் வேண்டுகோள்.  அதனை அத்தனை பட்டவர்த்தனமாக அந்த மேடையிலேயே போட்டு உடைப்பார் என்று யாருமே நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள்.

சினிமா துறைக்கு முதல்வர் சலுகைகள் கொடுப்பது, அதை காரணம் காட்டி அவருக்கு பாராட்டு விழா எடுப்பது, அந்த விழாவில் இன்னும் சில கோரிக்கைகள் வைப்பது, அதை முதல்வர் நிறைவேற்றுவது, மீண்டும் அதற்கு இன்னொரு பாராட்டு விழா எடுப்பது என்பது இப்போது ஒரு தொடர் வழக்கமாக ஆகிவிட்டது! 

இன்னும் சொல்லப்போனால், ஏதேனும் கோரிக்கையை அரசிடம் வைக்கவேண்டும் என்றால் பாராட்டு விழா எடுக்கவேண்டும் என்கிற நிலை வந்துவிட்டதாக தோன்றுகிறது!  அரசு ஊழியர் சம்மேளனம் கூட சில காலம் முன்பு அவருக்கு பாராட்டு விழா எடுத்து தான் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்!  வணிகர் சங்க பேரவையும் அப்படியே. 

ஆனால் தொடர்ச்சியாக பாராட்டு விழாக்கள் வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளுவது சினிமா துறை தான்.

அப்படியான நிகழ்வுகளுக்கு சினிமா பிரபலங்கள் கட்டாயமாக வருகை தரவேண்டும் என்று வற்புறுத்துவது, அப்படி வராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, தடை விதிப்பது போன்ற மிரட்டல்களால் ஆடி தான் போயிருக்கிறார்கள் எல்லோரும்.  ஆனாலும் என்ன செய்ய?  அப்படி வற்புருத்துவோர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவோ அரசுக்கு வேண்டப்பட்டவர்களாகவோ இருந்து தொலைப்பதால் பகைத்துகொள்ளவும் முடியாமல், சகித்துக்கொள்ளவும் முடியாமல் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டி இருக்கிறது!

இப்படியான நிலையில் தான் வந்து விழுந்திருக்கிறது வெந்த வார்த்தைகள் அஜீத்தின் உள்ளத்தில் இருந்து. 

அவரது கருத்து ஆயிரம் சதம் அங்கீகரிக்கப்படவேண்டியது என்பது எனது கருத்து! 

யாரையும் வற்புறுத்தி ஒரு விழாவில் கலந்துகொள்ள செய்வதோ, ஒருவரை பாராட்ட சொல்லுவதோ, அப்படி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுப்பதோ கண்டிப்புக்குறியது.  அவரவர் தொழிலை அவரவர் பார்க்கையில், அனாவசியமான வற்புறுத்தல்கள் இருக்கக்கூடாது.

மேலும், அரசிடம் ஒரு கோரிக்கை வைத்து அது நிறைவேறும் பட்சத்தில் அதற்கு கட்டாயமாக விழா எடுக்கவேண்டும் என்பதே கேலிக்கூத்து.  தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை என்பதை கூட உணரமுடியாமல், அரசின் செயல்களுக்கு அரசியல் சாயம் பூசி பார்க்கும் கொடுமை தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.  காரணம் இங்கே தான் அரசியலும் சினிமாவும் ஈருடல் ஓருயிராக இணைந்து இருக்கின்றன.

சினிமாவில் கால்வைத்தாலே சிலருக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது.  அவர்கள் அரசியலை தங்கள் சுய நலத்துக்காக வளைக்கும்பொழுது, அரசியல் வாதிகளும் அவர்களை தங்கள் சுய நலத்துக்காக வாளைக்கிரார்கள்.. இதிலென்ன தவறு? என்று கேட்போரும் உண்டு!

அஜீத், இந்த உள்ள குமுறலை பத்திரிகை பேட்டி வாயிலாகவோ, அல்லது முதல்வரை நேரடியாக சந்தித்தோ சொல்லி இருந்திருக்கலாம், விழாவை புறக்கணித்து இருக்கலாம், அதை விடுத்து இப்படி மேடையில் கொட்டி இருக்க தேவையில்லை என்றும் சில கருத்துக்கள் உண்டு!

அஜீத் பேசியது அஜீத்துக்காக மட்டும் அல்ல.  யாராலும் சொல்ல முடியாத அவஸ்த்தையை தான் அஜீத் அங்கே இறக்கி வைத்து இருக்கிறார்!  அதனால் தான் அவர் அதை கொட்டி தீர்த்தபோது கரகோஷம் விண்ணை பிளந்தது!

மேலும், பேட்டி, முதல்வர் சந்திப்பு போன்றவற்றில் அதை சொல்லி இருந்தால் அது மற்றும் ஒரு நிகழ்வாகவே மறைந்து போயிருக்கும். இப்போது இந்த விஷயத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் அப்போது கிடைத்து இருக்குமா என்பதும் சந்தேகமே! 

எனவே, சரியான இடத்தில், சரியான வேளையில், சரியான விஷயத்தை தான் அஜீத் செய்து இருக்கிறார்!

பொதுவாகவே அஜீத் துணிச்சலானவர் என்றும் மனதில் பட்டதை பட்டதுபோலவே பேசுபவர் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்!  அதை இந்த பேச்சின் பொது ஆணித்தரமாக உறுதி படுத்தி இருக்கிறார்!  யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்!

அரசியல் காரணங்களுக்காக வழிந்து குழைந்து பேசி பாராட்டி பேர் வாங்கும் பல புரட்சியாளர்கள், சிகரங்கள் எல்லாம் இருக்கையில் எந்த வித அனுகூலமும் எதிர்பார்க்கமால், பொது நோக்கத்துக்காக குரல் கொடுத்த அஜீத், என் மனதில்  எங்கேயோ உயரத்தில் போய்விட்டார்.

இனியாவது அரசியல் காரணங்களுக்காக சினிமா பிரபலங்களை வற்புறுத்துவது, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துவது, போன்றவை குறையவேண்டும்.. அதைவிட இந்த விழா எடுக்கும் வழக்கம் குறையவேண்டும்.

ஆனால், மாறாக சினிமா பிரபலங்களை அரசியல் பின்புலம் கொண்டோர் மிரட்டுவது, பகிரங்கமாக ஏசுவது போன்றவை தான் இப்போது நடந்து வருகிறது.  இதை எல்லாம் கண்டித்து தடுக்க வேண்டிய முதல்வர், சும்மா இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது! 

Saturday, February 20, 2010

தோழரை காணோம்!

W.R வரதராஜன்... மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் கட்சியின் மிக மிக முக்கியமான தலைவர்.. தமிழகத்தில் மார்க்சிச்டின் முகம்.. கட்சியின் மத்திய குழுவின் பிரதான உறுப்பினர்.. தொழிற்சங்கமான CITU வின் தலைவர்...

அவரை ஒருவாரமாக காணோம்!

எங்கே போனார்.. என்ன ஆனார் எந்த தகவலும் இதுவரை இல்லை!  இரண்டு கடிதங்கள் எழுதிவைத்து இருக்கிறார் வீட்டில்... ஒன்றில் கம்மியூநிச்ட்டு சாகமாட்டான் என்று எழுதி இருக்கிறார்... மற்றொன்றில் சாவு எல்லாவற்றையும் விட மேல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.... இரண்டு கடிதங்களுக்குமான இடைவெளி ஐந்து நாட்கள்.

தமிழக காவல்துறை அவரை தேடிக்கொண்டு இருக்கிறது..

இப்படியான தலைமறைவுக்கு என்ன காரணம்... அவரே அவரது கடிதத்தில் எழுதி இருப்பதை போல, "கட்சியிலும் அரசியலிலும் எத்தனையோ பிரச்சனைகளை வெற்றிகரமாக சமாளித்து இருக்கிறேன்.. ஆனால் வீட்டில் இருக்கும் பிரச்னையை என்னால் சமாளிக்க முடியவில்லை!"

அப்படி என்ன வீட்டில் பிரச்சனி?  அவரது மனைவி சரஸ்வதி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்து இருக்கும் ஒரு புகாரில் வரதாராஜனுக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது (கவனிக்க: அவருக்கு 64 வயது.. ஊரறிந்த தலைவர் வேறு!) என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

கல்கத்தாவில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பாக, ஒழுக்கமீறல் என்று காரணம் கூறி வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது... அதில் நொந்து போயி கடந்த 11 ஆம் தேதி சென்னை வந்த வரதராஜன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை...  செல் போனை வீட்டிலேயே விட்டு சென்று இருக்கிறார்...

நேற்றைய தினம், வரதராசனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் கட்சி நீக்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.  அவமானத்தை விட மரணம் மேலானது என்கிற குறளை தனது இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் வரதராஜனின் மனோ நிலையை என்னால் உணர முடிகிறது.

குடும்பங்கள் சிதைந்து போவதற்கு அடிப்படை காரணமே சந்தேக நிழல் தான் என்பது காலம் காலமாக தெரிந்த விஷயம் தான்... சாதாரணனின் வாழ்க்கையிலும் அப்படியே... பெரும் தலைவர்களின் வாழ்விலும் அப்படியே!

ஆனால், தமிழகத்தின் மிக மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவரான வரதராஜன் இது போன்ற விஷயங்களுக்காக தலை மறைவு ஆகிறார் என்பது உண்மையில் வருத்தம் தரக்கூடிய விஷயம்... இதை எளிதாக அவரே கையாண்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து... அரசியல், சட்டம், காவல் போன்ற அனைத்து துறைகளிலும் அவரை மதிக்கும் எத்தனையோ அதிகாரிகள் இருக்க, நல்லபடியாகவே விஷயத்தை முடித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது... 

அப்படி இருந்தும், அவர் தலை மறைவாக சென்று இருக்கிறார் என்றால் அவருக்கு எத்தகைய மன உளைச்சல், மன நெருக்கடி இருந்திருக்கவேண்டும் என்பதை சிந்தித்து பார்க்கவே முடியவில்லை.

குடும்பத்தில் அமைதி நிலவ செய்யும் கடமையில் இருந்து பலரும் விலகி செல்வதன் விளைவுகள் விபரீதமானவை என்பதை வரதராஜன் தலைமறைவு தெளிவாக காட்டுகிறது...

வரதராஜன் எங்கே இருந்தாலும் நலமுடன் இருக்கவேண்டும், தமிழக அரசியல் அரங்கம் அச்சப்படுவது மாதிரி, அவர் தவறான எந்த முடிவும் எடுத்திருக்கக்கூடாது என்று வேண்டுகிறேன்.

Friday, February 19, 2010

சிபில் அட்டகாசம்!

சிபில்....இந்த வார்த்தை தான் இப்போதைக்கு மிக மிக பயங்கரமாக காட்சி தருகிறது  ஒவ்வொரு  சராசரி நடுத்தர  இந்தியனுக்கும்!
வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற வாழ்க்கை சூழலில் எல்லோருமே கடன் வாங்கியோ, கடன் அட்டை தேய்த்தோ தான் காலத்தை ஒட்டி தொலைக்க வேண்டி இருக்கிறது.... கலங்கி தவித்ததெல்லாம் இலங்கை வேந்தன் காலத்தோடு முடிந்துவிட்டது... இன்றைய தேதியில் கடன் இல்லாத கொடீஸ்வரனே இல்லாதபோது.. சராசரி இந்தியன் எம்மாத்திரம்!

இப்படியாக ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்கியவன் பாடு என்னவெல்லாம் ஆகிறது என்பதை சமீபத்தில் கண்கூடாக கண்டேன்.

கடன் வாங்குவதற்கு முன்பே கடன் பத்திரத்தில் (படித்து பார்க்காமல் / படித்து பார்க்க முடியாமல்) கையெழுத்துக்களை வாரி வாரி இறைக்கவேண்டும்.  (இதில் இன்னொரு சுவாரசியமான கூத்தும் இருக்கிறது... நீங்கள் இங்கிலீஷில் கையெழுத்து போடாவிட்டால் 'வெர்நாக்குளர் படிவம்' என்ற ஒன்றை நிரப்பி தரவேண்டும்.  அதாவது... எனக்கு எழுத படிக்க தெரியாது... இந்த விண்ணப்பத்தில் இருக்கும் விவரங்களை வங்கி அலுவலர் படித்து காண்பித்தார்.. நான் புரிந்து கொண்டேன் என்கிற மாதிரி...  நீங்கள் இங்கிலீஷில் மிக பெரும் புலமை கொண்டிருந்தாலும், கையெழுத்தை தாய்மொழியில் போட்டால் நீங்கள் படிக்காதவர் என்பது வங்கிகளின் விதி... இதில் அரசு வங்கிகளும் அடக்கம்)

அதோடு எட்டு அல்லது பத்து செக் கையெழுத்து இட்டு மொட்டையாக கொடுக்கவேண்டும். அப்போது தான் நமது அப்பிளிகேஷனையே லாக் ஆன் செய்வார்கள்!  (ஒருவேளை லோன் அப்ரூவ் ஆகவில்லை என்றால் அந்த செக்குகள் திரும்ப தரப்படாது.. வங்கியே அவற்றை கிழித்து போட்டுவிடும் என்று சொல்கிறார்கள்... ஆனால் அப்படி கிழிக்கிறார்களா என்பது தெரியாது யாருக்கும்... இதற்கிடையில் செக்குகள் வங்கிக்கு வராமல் போவதால் நாம் கணக்கு வைத்து இருக்கும் வங்கி நமக்கு மேற்கொண்டு செக் தர யோசிக்கும் ஆபத்தும் உண்டு)

ஒரு வழியாக கடன் அப்ரூவ் ஆகிவிட்டால், அதற்கான பிராசசிங் பீஸ் அது இது என்று ஆரம்பத்திலேயே கணிசமான தொகை பிடித்தம் செய்து தான் நமக்கு தருவார்கள்.   அதே போல ஒப்பந்தப்படியான வட்டி விகிதத்தை மூன்றாக பிரித்து, முதல் ஒன்பது மாதங்களில் பெரும்பாலான வட்டியை முழுமையாக பிடித்தம் செய்து விடுவார்கள்.  பிற்காலங்களில் குறைந்த வட்டி.  இந்த ரீதியில் போகும்போது முதல் ஒன்பது மாதங்களில் நாம் கட்டிய தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட பிரின்சிபல் தொகையில் கழியாது!  எல்லாமே வட்டிக்கு என்று எடுத்து விடுவார்கள்...

ஆறு மாதம் கழித்து ஒரு ஆரணங்கு அன்பாக (?) போன் செய்து சார் உங்கள் லோனுக்கு டாப் அப் லோன் தர்றேன் எடுத்துக்கறீங்களா என்று எதோ தன்னையே தருவது போல குழைந்து குழைந்து கேட்பாள்.  அங்கே விழுந்தால், 'பிரீ குளோசிங்' சார்ஜ் என்று மீண்டும் ஒரு கணிசமான தொகையை வெட்ட வேண்டி இருக்கும்..  அதுபோக புதிய கடனில் பிராசசிங் பீஸ், மீண்டும் முதலில் இருந்து மூன்றில் இரு பங்கு வட்டி என்று நம் சம்பாத்தியம் எல்லாமே வங்கிக்கு தான்.

இதில் ஏதேனும் ஒரு மாதம் நீங்கள் தவணை செலுத்த தவறினால், போன் மிரட்டல், ஆட்களை வீட்டுக்கனுப்பி மிரட்டுதல் போன்ற 'இயல்பான' விஷயங்கள் தவிர்த்து இப்போது புதிதாக வங்கிக்கு கிடைத்து இருக்கும் அதி அற்புத ஆயுதம் தான் சிபில்.

இந்த சிபில் (CIBIL - Credit Information Beureu of India Limited) என்பது வங்கிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு.  எந்த வங்கியில் நீங்கள் கடன் வாங்கி இருந்தாலும், அது பற்றிய விவரங்களை, உங்களின் திருப்பி செலுத்தும் வரலாறை எல்லாம் சேகரித்து பட்டியல் இட்டு வைப்பது இவர்கள் வேலை.  நீங்கள் சந்தர்ப்பவசத்தால் ஏதேனும் ஒரு வங்கியின் கடனில் ஒரே ஒரு தவணை பாக்கி வைத்தாலும் உங்கள் பெயர் சிபிலின் பட்டியலில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.  

இதன் விளைவுகள்???  நீங்கள் மேற்கொண்டு வேறு ஒரு வங்கியில் கடன் வாங்க சென்றாலோ, கடன் அட்டை கேட்டாலோ, இந்த 'முன்கதை சுருக்கத்தின்' பேரில் கடன் நிராகரிக்கின்ற வாய்ப்பு உண்டு! 

அதாவது அவசர தேவைக்காக ஐம்பதாயிரம் தனிநபர் கடன் வாங்குகிறீர்கள்... மாதம் இரண்டாயிரத்து சொச்சம் தவணையை ஒன்றரை ஆண்டுகாலம் ஒழுங்காக கட்டி வருகிறீர்கள்... திடீரென்று ஒரு மாதம் உங்களால் கட்ட முடியவில்லை என்றாலும் உங்களுக்கு சிபில் லிஸ்டில் ஈசியாக அட்மிஷன் கிடைத்துவிடும்.  அதற்கு அப்புறம் நீங்கள் அந்த தவணைகளை ஒழுங்காக செலுத்தி இருந்தாலும், முறையான(!) கோரிக்கை / விண்ணப்பம் / கட்டணம் இல்ல்லாமல் உங்கள் பெயர் சிபில் பட்டியலில் இருந்து இறங்காது!  இது தெரியாமல் நீங்கள் உங்கள் மகள் கல்யாணத்துக்கு என்று இன்னொரு பெரிய தொகை லோன் வாங்க சென்றால் இந்த சப்பை காரணத்தை கூறி உங்களுக்கு ஒரு பெரிய நோ சொல்வார்கள்.   சொல்வது மட்டும் அல்ல, நம்மை எதோ மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தாவை பார்க்கிற மாதிரி பார்ப்பார்கள்.. அது தான் கொடுமை!

சரி, வங்கிக்கு என்று வங்கிகளின் நன்மைக்கு என்று இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதே, நமக்கு என்று, நுகர்வோருக்கு என்று இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்றால் இல்லை.  வங்கி என்ன சொல்கிறதோ அதற்கு நாம் கட்டுப்படவேண்டும்.  அவர்கள் கூடுதல் வட்டியை பிடித்தாலும் நாம் எதிர்த்து கேள்வி கேட்க கூடாது.  வரி மற்றும் பிராசசிங் பீஸில் தவறு செய்த வங்கிக்கு நாம் கேள்விகள் கேட்டாலோ, வழக்கு தாக்கல் செய்தாலோ நமக்கு சிபிலில் கரும்புள்ளி குத்தி வைத்து விடுவார்கள்... ஜென்மத்துக்கும் அவசர தேவைக்கு கடன் கிடைக்காமல் அல்லாடி கொண்டு தான் இருக்கவேண்டும்.. ஒரு வங்கியும் நமக்கு லோன் தராது.

கிட்டத்தட்ட, வங்கிகளின் கூட்டமைப்புக்கு அடிமையாக இருந்தால், எதிர்த்து எந்த கேள்வியும் கேட்காமல் இருந்தால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும்.

இந்திய அரசில் நிதி துறை என்று ஒன்று இருக்கிறது... அந்த அமைச்சரவை இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் கொள்வதில்லை... இப்படி கடன் வாங்கியோரை வங்கிகள் படுத்தும் பாடு பற்றி கிஞ்சிற்றும் பதர்றப்படுவதில்லை... மாறாக, புது புது விதிகளை உருவாக்கி சாமானியர்கள் கடன் வாங்குவதை கடினமாக்குவதும், வங்கிகளின் வருவாயை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதுமாக மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது!

(கடன் அட்டை கதை இன்னும் சுவாரசியமான கதை... அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்)

ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை கொண்டவர்களின் ராஜ்ஜியம் என்பதை வைத்து பார்த்தால் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு..  வாழ்க ஜனநாயகம்!

Thursday, February 18, 2010

டீ கடை சிந்தனைகள்!

இன்னைக்கு காலையில் டீ குடிக்க வழக்கமான டீ கடைக்கு போனேன்.. அங்கே தான் அரசியல் பொருளாதாரம்ன்னு அத்தனை விவாதங்களும் நடக்கும்... நாலு ரூபாய் டீக்கு நாற்ப்பது விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்.  எனக்கு தெரிஞ்சு டீ மாஸ்டர்களை விட பெட்டரான அரசியல் விமரிசகர்களே கிடையாது.  அத்தனை பார்டி பத்தியும் மக்களோட மன ஓட்டத்தை பத்தியும் ஜஸ்ட் லைக் தட் தெரிஞ்சு வெச்சிருக்காங்க!

ஆனா இங்கே மேட்டர் அரசியல் கிடையாது!

எந்த ஊருக்கு போனாலும் ஒரு மலையாளி டீ கடை கண்டிப்பா இருக்கும்னு சொல்லுவாங்க... டென்சிங் இமையமலை போனப்ப கூட அங்கே ஒரு மலையாளி டீ வித்துட்டு போன மாதிரி கார்டூன் கூட பிரபலம்.

ஆனா மலையாளிகளை விட இஸ்லாம் சகோதரர்களின் டீ கடைகள் தான் நான் அதிகமா பாக்கிறேன்... அவங்க டீக்கு ஒரு தனி டேஸ்ட் இருக்கு. குடிச்சு பாருங்க தெரியும்.

தமிழ் நாட்டை பொறுத்தவரைக்கும் இந்த ரெண்டு பேர் தவிர அதிகமா டீக்கடை நடத்தறவங்க பத்தி தான் இப்போ யோசனை.

சிவன்கங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் காரங்க தான் சென்னையில் அதிகமா டீ கடை வெச்சிருக்காங்க... என்ன காரணம்னு பார்த்தா... அந்த மாவட்டங்கள் எல்லாமே தொழில் துறையில் ரொம்ப பின் தங்கி இருக்கு.. அந்த மாவட்டத்தை சேர்ந்தவங்க பெரும்பாலும், வேலை தேடி மும்பை போறது, கோயம்பத்தூர், சென்னைன்னு போறது, அப்புறம் ஒன் ஸ்டெப் பார்வார்டா மலேசியா துபாயன்னு போறதுன்னு சம்பாத்தியத்துக்கு வழி தேடிட்டு இருக்காங்க.  அப்படி எல்லாம் போக முடியாதவங்க.. அல்லது அப்படி போயி நொடிஞ்சு போனவங்க, ஆல்டைம் ஹிட்டான டீக்கடை நடத்துறாங்க.

சென்னையில் நிறைய கடைகள் அவங்க தான் நடத்தறாங்க... இது பெருமை படவேண்டிய விஷயமா... இல்லே, சில குறிப்பிட்ட மாவட்டங்களை மட்டும் நாம தொடர்ந்து புறக்கணிச்சிட்டு வர்றோமேன்னு ஆதங்கப்படவேண்டிய விஷயமான்னு நீங்களே முடிவு செஞ்சிக்கலாம்.

டீ கடை நடத்தறதோட, கம்பைண்டா டிபன் கடையும் சேர்த்து நடத்துறது அவங்க ஸ்பெஷாலிட்டி.  கோயம்பத்தூர் ஏரியாவில் பார்த்தீங்கன்னா டீ கடையோடு சேர்ந்து பேக்கரி ஸ்நாக்ஸ் ஐட்டம் மட்டும் தான் இருக்கும்... ஆனா சென்னையில் டீ கடையிலேயே காலையிலும் சாயந்தரமும் இட்லி வடை பூரி கிடைக்கும்...  சென்னையில் பெரும்பாலும் வேலைக்கு போற பேச்சிலர்ஸ் தான் இருக்காங்கங்கறதால், அவங்களுக்கு சீப் அண்ட் பெஸ்ட் டிபன் இந்த மாதிரி டீ கடையில் தான் கிடைக்குது.


எப்படி மளிகை கடை நடத்தறவங்க பெரும்பாலும், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை செர்ந்தவன்களோ அந்த மாதிரி டீ கடை நடத்தரவங்களும் குறிப்பிட்ட மாவட்டத்து காரங்கன்னு ஆயிபோச்சு சென்னையில்.

கொஞ்சம் பேரு, (திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்து காரங்க) சலூன் கடையும் வெச்சிருக்காங்க.... எதையாவது செஞ்சு பொழப்பை பாத்துக்கனுமேன்னு இல்லாம, அதையும் பெர்பெக்டா செஞ்சு பிரபலமா இருக்காங்க அவங்கவங்க ஏரியாவில்.





இதில் இன்னொரு விஷயம்... கடை வாடகை கொடுத்து கட்டுபடியாகாதுன்னு நினைக்கிற நிறைய பேரு, வீட்டிலேயே டீ ரெடி பண்ணி, சைக்கிளில் கேன் கட்டி, அம்பத்தூர், கிண்டி மாதிரியான தொழில்பெட்டையில் இருக்கிற கம்பனிகளுக்கு டீ சப்பிளை பண்றாங்க. 

அது, நிரந்தர வருவாய், கேரண்டீயான கஸ்டமர்கள், மாசமாசம் காசுன்னு சிக்கல் இல்லாம போயிட்டு இருக்கு!  காலையில் ஒரு நடை மதியம் ஒரு நடை அவ்வளவு தான் மேட்டர் ஓவர்.  ஆனா அது அவ்வளவு சுளுவான காரியம் இல்லை.  அத்தனை கம்பெனியிலும் ஒரே டைமை தான் டீ டைம்னு ஒதுக்கி தொலைச்சிருப்பாங்க... அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே அத்தனை கம்பெனியிலும் அத்தனை பேருக்கும் டீ சப்பிளை பண்றது லேசு பட்ட காரியம் இல்லை.  ஸ்பீடு வேணும்.  அதை விட கொடுமை, ஒவ்வொரு கம்பெனியில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதம்... டீ, காபி, சுகர் இல்லாம, பால் மட்டும்னு ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மெனு கார்டு வெச்சிருப்பாங்க... அதையும் ஒவ்வொரு நாளும் கேட்டுட்டு இருக்க முடியாது... டென்சன் ஆயிடுவாங்க.... அதை எல்லாம் ஞாபகம் வெச்சு யாருக்கு என்னன்னு கரெக்டா கொடுக்கணும். 


இத்தனை போட்டியிலும், இசுலாமியர்களின் டீக்கடைக்கு மட்டும் ஒரு தனி ஈர்ப்பு இருக்குன்னா அவங்க கொடுக்கற எக்ஸ்டிரா ஸ்பெஷல் டீ வகைகள்... இஞ்சி டீ, மசாலா டீ மாதிரி... தனி தனி டேஸ்டில் எல்லோருக்குமான டீயை ரெடி பண்ணி அசத்துறாங்க.

டீ ரேட்டு ஏறிட்டு இருக்கிற ஸ்பீடை பார்த்தா வேலையை ரிசைன் பண்ணிட்டு அந்த தொழிலில் இறங்கிறலாமான்னு யாருக்கு வேணும்னாலும் தோணும்.  ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு ரூபாய்க்கும் குறைவா இருந்த டீ விலை,  இப்போ அஞ்சு ரூபா கொடுத்தா தான் ஆச்சுன்னு நிக்குது.  பஜ்ஜி கூட நாலு ரூபா ஆயிடிச்சு.. பால் விலை, சக்கரை விலை, சம்பளம்னு அவங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்க தான் செய்யுது.

ஆனா சமீபத்தில் என்னை பிரமிக்க வெச்ச விஷயம் ஒன்னு கோயம்பத்தூரில் ஒளிஞ்சு இருந்தது...

டவுன் ஹால் மணிக்கூண்டு கிட்டக்க கோணியம்மன் கோவில் பக்கத்தில் ஒரு காம்பிளக்ஸ்.  அதுக்குள்ளார கடைசியில் ஒரு சின்ன டீ கடை, பேரு, லக்ஷ்மி டீ ஸ்டால்.   சாயந்தரம் ஆனா கூட்டம் கும்மி அடிக்குது.  என்னை சமீபத்தில் தான்  முதல் முதலா ஒரு நண்பர் அங்கே கூட்டிட்டு போனாரு, வந்து பாரு இந்த ஆச்சரியத்தைன்னு.

டீ விலை ரெண்டே ரூபாய், வடை பஜ்ஜி எல்லாம் ரெண்டு ரூபாய் தான்.  டீ ஒரு வேளை கொஞ்சமா கொடுப்பாங்களோன்னு பார்த்தா சராசரியை விட ஜாஸ்த்தியா தான் இருந்தது... அதை விட ஆச்சரியம் டீயோட டேஸ்ட்டு.  இதில் மூணு பேருக்கு சம்பளம் வேற... டீ டோக்கன் கொடுக்க ஒரு ஆளு, மாஸ்டர் ஒருத்தரு, டீ சப்பிளையர் ஒருத்தரு....   அடுத்த ஆச்சரியம் விலை பட்டியல் போர்டில் இருந்தது... அந்த விலை எல்லாம் 2006 ஆம் வருஷத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லாம இருக்குது... ஆடி போயிட்டேன்... 

இந்த விலையில் இவ்வளவு அருமையான டீ இவங்களால் தர முடியுதுன்னா... அஞ்சு ரூபா வாங்கிட்டு டீன்னு சொல்லி டீ மாதிரி தர்றவங்களை நினைச்சா ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு. 

ஆத்திரம் வந்து என்ன பண்ண... வாங்க ஒரு டீ சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்!

Monday, February 1, 2010

புறம்போக்குக்கு பட்டாவாம்!

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு அதிரடி அறிவிப்பு அரசாங்கத்தில் இருந்து! 

தொடர்ந்து மூணு வருசமா புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தா அதுக்கு பட்டா கொடுத்துருவாங்க!  இதுவரைக்கும் அஞ்சு வருசம்னு இருந்த கால கெடுவை மூனா கொறைச்சிருக்காங்க!  கால கொடுமை!

புறம்போக்கு நிலம்ன்கறதே அரசாங்க சொத்து தான்.  நிதி நிலை அறிக்கையில் காட்டுற அரசானத்தோட அசையா சொத்துக்களில் அதுவும் அடக்கம்.  அதை ஆக்கிரமிக்கிறதே சட்ட விரோதம்.  நியாயமா பாத்தா அப்படி ஆக்கிரமிச்சிருக்கறவங்களை ஓடவிட்டு சுளுக்கு எடுக்கணும். அந்த நிலத்தை மீட்டு வெளி கட்டி அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரணும். 

பிற்காலத்திலே கம்பெனியோ பள்ளிக்கூடமோ கட்டனும்னா முதலில் இது மாதிரி அரசு புறம்போக்கு நிலத்தில் கட்ட டிரை பண்ணனும்.. அது வசதியா இல்லைன்னா தான் மத்தவங்க நிலத்தை கையகப்படுத்தனும்!

இப்போ என்னடான்னா... நீ ஆக்கிரமிச்சு வெச்சு இருக்கியா?? நீயே வெச்சுக்கோன்னு சட்டமே போட்டுட்டாங்க.   அரசாங்கத்தை ஏமாத்த தெரிஞ்சவன் சமத்து.  ஏமாத்த தெரியாதவன் ஏமாளின்னு அரசாங்கமே அங்கீகாரம் கொடுக்குது!  எங்கே போயி முட்டிக்கிறது?

தரிசா கிடக்கிற நிலத்தை எல்லாம் பண்படுத்தி ஏழை விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய இலவசமாக கொடுக்க போறேன்னு சொல்லிச்சு அரசாங்கம்.  நம்பின விவசாயிகள் மனசை புன்படுத்தினது தான் மிச்சம்!

இப்போ என்னடான்னா... 'கடந்த மூணு வருசத்திலே' யாரெல்லாம் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிச்சீங்களோ நீங்களே வேச்சுக்கொங்கன்னு அரசாங்கம் சொல்லிடிச்சு.  மூணு வருசத்துக்கு முன்னாடியே யாரெல்லாம் பிளான் பண்ணி வளைச்சு போட்டாங்களோ???

இப்படி அரசாங்க சொத்தை இலவசமா தாரை வார்க்கிறது சரியா???  இதை பத்தி கேள்வி கேக்கிற உரிமை இங்கே யாருக்குமே இல்லை!  அரசியல் சாசனம் அப்படி யாருக்கும் அதிகாரம் கொடுக்கலை!

கணக்கு தணிக்கை அதிகாரி மட்டும் இப்படி நடந்திருக்கு, இதனால் அரசுக்கு இத்தனை கோடி நஷ்டம்னு அறிக்கை கொடுக்க முடியும். அவரும் கூட கேள்வி கேட்கவோ நடவடிக்கை எடுக்கவோ முடியாது!

எத்தனை கோடி நஷ்டம் பண்ணினா என்ன..... உங்க பணம் எங்க பணம் தானே போகுது.... போயிட்டு போகட்டும்.... நம்ம சகிப்பு தன்மையை இப்படி தானே நிரூபிக்க முடியும்???

மாருதியின் அடுத்த அதிரடி: ஈக்கோ!


மாருதி நிறுவனம் ஜப்பானின் சுசுகி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கியபோதே அதிரடியாக தான்  ஆரம்பித்தது!

முதல் முதலாக குட்டி கார் அறிமுகம் செய்து ஹிட்ட் கொடுத்தது.  பின்னர் ஆம்னி, ஜிப்சி, எஸ்டீம், பலேனோ என்று பல பல விதங்களில் சிறப்பான வண்டிகள் கொடுத்தது.

கோவையில் எங்க அப்பா வேலை செஞ்ச கம்பெனி ஓனர் ஒரு ஆம்னி வெச்சிருந்தார். அதை பார்த்தபோதே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. பாக்க பஸ் மாதிரி அழகா நீட்டா டிசைன் பண்ணி இருந்த வண்டி அது.

பின்னர் கார் வாங்குற வேளை வரும்போது நிறைய ஆராய்ச்சிகள் நடந்தது.. முதல் சுற்றிலேயே ஆம்னி அவுட்.  அதில் ஏசி கிடையாது. 800 CC எஞ்சின். அப்படி இப்படின்னு நிறைய குறைபாடுகள் தான் தெரிஞ்சுது முதலில்.

வெர்சான்னு ஒரு வண்டி விட்டாங்க.. ஆனா அது அவ்வளவு ஹிட்டாகலை. 

இப்போ திடீர்னு இறக்கி இருக்காங்க பாருங்க... ஈகோன்னு  ஒரு அதிரடி சரவெடி.

1200CC எஞ்சின். 73 bhp பவர். ஏழு பேர் உக்கார வசதி. ஏசி.  இத்தனைக்கும் விலை 2.7 லட்சம் தான்.   பின்னி பெடலேடுத்துட்டாங்க மாருதி. 

போன மாசம் டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த வண்டியை அறிமுகம் செஞ்சதுமே இந்திய ஆட்டோமொபைல் துறை ஆடி போயிருச்சு.  டாட்டாவோட மேஜிக் வண்டிக்கு சரியான ஆப்பு ஈக்கோ.  இத்தனை குறிஞ்ச விலையில் இத்தனை வசதிகளோடு ஒரு வண்டி வந்தா சும்மா இருக்குமா மிடில் கிளாஸ் மக்கள்!

நவம்பர் மாசம் தான் விற்பனைன்னு சொன்ன மாருதி என்ன நினைச்சுதோ தெரியலை இப்பவே விற்பனைக்கு விட்டுட்டாங்க.  புக்கிங் புகுந்து விளையாடுது சென்னையில்.

ஒரு குடும்பத்துக்கு சவுகரியமான வண்டி, மாருதி பிராண்டு, எங்கே போனாலும் சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ், எளிமையான ஹான்டிலிங் சிஸ்டம், அடக்கமான விலை,  ஹை எண்டு வண்டிகளின் வசதி.....  எழுதி வெச்சுக்கோங்க... அடுத்த ரெண்டு வருஷத்துக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டு இந்த வண்டி தான்....

குவாலிஸ் போன வருத்தத்தை நிச்சயமா ஈக்கோ ஈடு செய்யும்னு நினைக்கிறேன்!

நாமும் நமது கல்வி கொள்கையும்!

இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளை கடந்துவிட்டது.  அரசியல் சாசனம் சில அடிப்படை கடமைகளை அரசாங்கங்களுக்கு சொல்கிறது.  அவற்றுள் ஒன்று பதினான்கு வயது வரையிலான பிள்ளைகளுக்கு தங்கள் பகுதியில் கட்டாய இலவச தாய்மொழிவழி கல்வி கொடுக்கப்படவேண்டும் என்பதும் ஒன்று!  இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கேரளம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நூறு சதவீத கல்வி அறிவு இல்லை.  ஆக, அரசியல் சாசன கடமையை நாம் ஒழுங்காக சரிவர செய்யவில்லை என்பது எல்லா மாநில அரசுகளுக்கும் பொதுவான விஷயமாக ஆகி விட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் என்று ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது.  முதியோர் கல்வி, மகளிர் கல்வி, வேலைக்கு செல்வோருக்கான இரவு பாடசாலை, மழலையர் கல்வி, குழந்தைகளுக்கான கட்டாய கல்வி என்று பல பல திட்டங்களை ஒருங்கிணைத்து அனைத்து பிரிவினரும் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்.  அந்த திட்டமும் எதிர்பார்த்த பலனை தரவே இல்லை.

திறந்த நிலை பல்கலைகழக திட்டம் என்பது பெரும் வரவேற்பை பெற்ற திட்டம்.  வேலைக்கு செல்லுவோர் தங்கள் கல்வி அறிவை மேலும் மெருகேற்றி கொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமைந்த சிறந்த திட்டம்.  ஆனால் அப்படி திறந்த நிலை பல்கலை கழகங்கள் மூலம் பெறப்படும் பட்டங்கள் செல்லாது என்று நீதிமன்றங்கள் அதிரடி தீர்ப்புகளை அளித்து வருகின்றன.  அதனை எதிர்த்து எந்த மனுவையும் எந்த அரசும் இதுவரை செய்யவில்லை.  இதன் மூலம் திறந்தநிலை பல்கலை கழகங்களில் பயின்றவர்களின் எதிர்காலமே கேள்வி குறியாக இருக்கிறது.

சமீப அதிர்ச்சியாக நிகர் நிலை பல்கழகங்கலாக செயல்படும் பல கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.  அத்தகைய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயின்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் இப்போது கேள்வி குறையாக நிறுத்தப்பட்டு இருக்கிறது!

இவை தவிர, இப்போது இயங்கி வரும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் வெறுமனே மனப்பாட பகுதியாக பாடங்கள் பயிற்றுவிக்க பட்டு, மாணவர்களை ஒப்பித்து மனனம் செய்து தேர்வு எழுதும் இயந்திரங்களாக மாற்றும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.  பட்டம் பெற்ற மாணவர்கள் கூட வங்கியில் ஒரு வரைவோலை எடுக்க திணறும் நிலையிலே இருக்கிறது இன்றைய கல்வி தரம்.  அதனை மேம்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை, இதுவரை.

ஐந்து விதமான பாட திட்டங்களை கொண்டுள்ள நாம், ஒவ்வொரு பாட திட்டத்துக்கும் தனி தனியான தரங்களை நிர்ணயித்துல்லத்தான் மூலம், ஒரே வகுப்பில் பயிலும் வெவ்வேறு பாட திட்ட மாணவர்களின் அறிவு திறன்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தி வைத்து இருக்கிறோம்.  கிராமப்புற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்வியை வழங்க மறுத்து, கிடைக்கிற கல்வியை அரைகுறையாக கற்கின்ற சூழலை ஏற்படுத்தி, அவர்களது மன வளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும் தடை செய்து வைத்து இருக்கிறோம்.

இப்படியான சூழலில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதி உயிரோடு இருந்திருந்தால் என்ன பாடியிருப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

நம் பிள்ளைகளுக்கு அறிவுசார் கல்வியை ஒழுங்காக கொடுக்க முடியாத சமுதாயத்தில் நாம் இருந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நாம் எப்போது தான் உணர்வது??  அதை மாற்றுவதற்கான, சிறந்த அடிப்படை களிவியை கொடுப்பதற்கான ஏற்பாடுகளுக்கு அரசை தூண்டும் வகையில் வலியுறுத்துவது யார்??  நாம் என்ன செய்ய போகிறோம்??? கிடைத்ததை படித்து, மற்றவர்களை பார்த்து பெருமூச்சு விடும் கிராமப்புற மாணவனின் மனக்குறையை யார் மாற்றுவது??  இத்தகைய பொறுப்பற்ற சமுதாயத்தின் பிரதிநிதியாக நாம் இருப்பதை எண்ணி நம்மால் வெட்கமாவது பட முடிகிறதா???  எதற்கும் எனக்கு விடை தெரியவில்லை.

Printfriendly