Tuesday, June 29, 2010

சந்துரு கொடுத்த சவுக்கடி!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சந்துரு அவர்கள் பல பல பரபரப்பான தீர்ப்புக்களை தீர்க்கமாய் கொடுத்து வருபவர்.  இப்போது என்றில்லை, அவர் வழக்கரின்ஞராக அதே நீதிமன்றத்தில் பணி புரிந்தபோழுதும் சமூக அக்கறை மிளிரும் பல பல வழக்குகளை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர்.  சமுதாய மறுமலர்ச்சிக்கான பல தீர்ப்புக்களை பெற்று கொடுத்தவர்.

நீதிபதியாக உயர்ந்த பின் - தீர்ப்புக்களை வழங்குகின்ற நிலைக்கு வந்தபின் - வழக்குகளை சமூக கண்கொண்டு கண்டு பல முற்போக்கான தீர்ப்புக்களை அளித்தவர்.  முக்கிய வழக்குகளில், எதை பற்றியும் கவலை படாமல் நேர்கொண்ட நெஞ்சோடு தீர்ப்புக்களை எழுதியவர்.

நேற்று இன்னுமொரு முக்கியமான தீர்ப்பை தந்திருக்கிறார். 

விஷயம் இது தான் - சுருக்கமாக.

தமிழருவி மணியன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கீழ்பாக்கத்தில் வீடு குத்தகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.  கடந்த பத்தொன்பது மாதங்களாக அந்த குத்தகை புதுப்பிக்கப்படாமலேயே அவர் அங்கே குடியிருந்து வருகிறார்.  அதனால் அவரை காலி செய்ய சொல்லி இருக்கிறது வீட்டு வசதி வாரியம். 

தன்னை போலவே பலரும் குத்தகை புதுப்பிக்காமல் அங்கே குடியிருந்து வரும் நிலையில் தன்னை மட்டும் காலி செய்ய சொல்வது பகையுறவை பாராட்டி பாரபட்சமாக அரசு நடந்துகொள்வதை காட்டுகிறது என்று கூறி அவர் வழக்கு போட்டார்.

அந்த வழக்கில் தான் தீர்ப்பு கொடுத்து இருக்கிறார் திரு.சந்துரு.

தமிழ் வாழ்க என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் நோக்கத்துடன், "தலைமை செயலகத்தின் மீது தமிழ் வாழ்க என்று நியான் விளக்கு ஒளிர விட்டால் மட்டும் போதாது.. தமிழறிஞர்களை பாதுகாக்கவும் வேண்டும் அரசு. அப்போது தான் தமிழ் வாழும்" என்று தனது கருத்தை சுளீறேன்று சொல்லி இருக்கிறார்.

இதை வேறு விதமாக பார்க்க விரும்புகிறேன்.

சட்டத்தின் கண்கொண்டு நியாயமான தீர்ப்பாக அவர் சொல்லி இருக்கவேண்டியது என்ன என்று எல்லோருமே அறிவர்.  பிறர் குத்தகை புதுப்பிக்காமல் இருப்பதை காரணம் காட்டி திரு. தமிழருவி மணியன் அவர்களும் அப்படி இருக்க உரிமை கோர முடியாது.  நியாயமாக சட்டத்தை நீதியை நிலை நாட்டி இருக்கவேண்டிய நீதிமன்றம், தமிழருவி மணியனை குத்தகை புதுப்பிக்க சொல்லி இருக்க வேண்டும் அல்லது அவரை காலி செய்ய சொல்லி இருக்க வேண்டும்.    குத்தகை புதுப்பிக்காமல் குடியிருந்து வரும் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வீட்டு வசதி வாரியத்துக்கு உத்தரவு இட்டிருக்க வேண்டும்.  (அதாவது குத்தகை புதுப்பித்தல் அல்லது காலி செய்தல்)

ஆனால் அப்படி இல்லாமல் சம்மந்தமே இல்லாமல் அரசின் மீது பாய்வது தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும்.

அரசு தமிழ் ஆர்வலர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்கிற விஷயத்தை, குத்தகை புதுப்பிக்காமல் குடியிருக்க தமிழருவி மணியனை அனுமதிக்கவில்லை என்பதுடன் சம்மந்தப்படுத்தி, அதனையே வாய்ப்பாக கொண்டு தமிழக அரசின் மீது பாய்ந்து இருப்பது, சந்துரு மீதான மதிப்பை கொஞ்சம் இறக்கிவைக்க தான் செய்கிறது. 

எனினும், அவர் கொடுத்திருக்கும் சவுக்கடி - தவறான இடத்தில், தவறான சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் - அரசுக்கு தேவையான சவுக்கடி தான் என்பதில் சந்தேகம் இல்லை.  

சொல்லளவில் இருக்கும் தமிழுணர்வு செயல்வடிவம் பெற சந்துருவின் இந்த தீர்ப்பு அரசுக்கு உத்வேகம் தருமேயானால், அது தமிழ் பெற்ற பயனாகும்.

Monday, June 28, 2010

தமிழ் படித்தால் வேலையில் முன்னுரிமை!

கொங்கு மண்டல கோவை மாநகரில் ஆரபாட்டமாய் நடந்து முடிந்து இருக்கிறது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு. 

இது உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் அங்கீகரிக்க பட்ட மாநாடு அல்ல எனினும், தமிழ் சார்ந்த நல்ல விஷயங்கள் பல அரங்கேறின அங்கே.

தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநாடு என்பதை, தமிழுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத "கோவை காந்திபுறம் பகுதியில் நூறு கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்" போன்ற அறிவிப்புக்கள் தெளிவு படுத்தினாலும், நாம் தமிழ் சார்ந்த விஷயங்களுக்கே வருவோம்.

முக்கியமான ஒரு அறிவிப்பு - "தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படும்" என்பது.

தமிழகத்தில் உள்ள அரசு பணிகளுக்கான வேலை நியமன தேர்வுகளில் பெரும்பாலும் நன்கு படித்தவர்களே தேறி வருகிறார்கள் எனினும் வட்டார வழக்கு மொழி அறியாமையால் பல நேரங்களில் அரசு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.  கட்டாயமாக தமிழ் கற்றிருக்க வேண்டும் என்றொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டும், அரசு அதிகாரிகள் தமிழிலே கையெழுத்து இடவேண்டும் என்று ஒரு அரசானை பிறப்பிக்கப்பட்டும், அது எதிர்பார்த்த பயனை தரவில்லை.

ஒரு கிராமத்தில் உள்ள பிரச்னையை தீர்க்கவேண்டிய ஒரு அதிகாரிக்கு தமிழ் தெரியாவிட்டால் எத்தனை கஷ்டம் என்பதை நான் நேரடியாக பார்த்து உணர்ந்திருக்கிறேன்.  அவர் நன்கு படித்தவர் தான்.. சிறந்த நிர்வாகி தான்.. எனினும் மிகவும் அன்னியப்பட்டு போனது போல ஒரு உணர்வு.. அவருக்கு தமிழ் புலமை இல்லாததால் ஏற்பட்டு விடுகிறது.

எனவே தமிழ் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை என்கிற இந்த அறிவிப்பு இரண்டு விதங்களில் நன்மை பயக்கும்.

ஒன்று: 

இன்றைய காலகட்டத்தில் தமிழ் வழி கல்விக்கு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையே நடைபெறுகிறது.  ஆங்கில வழி கல்வி கற்று, தமிழை ஒரு பாடமாக படித்து வருவதே பெரும்பான்மையாக நடைபெறுகிறது.  இது தமிழ் ஆர்வத்தை ஒரு பாடம் என்கிற அளவிலே கட்டுப்படுத்தி விடுவதால், ஆழ்ந்த தமிழ் அறிவு மாணவர்களுக்கு ஏற்படுவதில்லை. 

எனவே அரசு பணிகளில் தமிழ் வழி கல்வி கற்றோருக்கு முன்னுரிமை என்கிற அறிவிப்பு மிகுந்த எண்ணிக்கையில் தமிழ் வழி கல்வி கற்க மாணவர்களை தூண்டும் / பெற்றோரை ஊக்குவிக்கும் என்பதும், அதனை சார்ந்த தமிழாசிரியர் பணியிடங்களின் தேவை அதிகரித்தல் மற்றும் தமிழ் வழி களை சொற்கள் மிகுதி பாடல் என தமிழ் செழித்து ஓங்கி வளர ஒரு வாய்ப்பாக அமையும்.

இரண்டு:

தமிழை பயிற்று மொழியாக கற்று அரசு பதவிகளில் அமர்கின்றவர்களால் தமிழகத்தின் மக்கள் தேவைகளை எளிதாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உணர்ந்து கொள்ள இயலும்.  அது சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும் ஏதுவாகும்.

தமிழ் வழி உரையாடல் என்பது அரசு அதிகாரிகளுக்கும் சாமானிய பொதுமக்களுக்கும் இடையில் இப்போது இருக்கும் இடைவெளியை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் நம்பலாம்.

மாநாட்டில் எத்தனையோ அறிவிப்புக்கள் வெளியானாலும், இந்த ஒரு அறிவிப்பாவது செயல்வடிவம் பெறவேண்டும் என்பது எனது ஆவல்...

ஆசைக்கு அளவில்லை தானே?

Saturday, June 26, 2010

ராஜ்யசபா கனவுகள்!

ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தில் இருந்து புதிதாக ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள்.

உறுப்பினர்கள் கணக்கு படி, அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும், திமுகவுக்கு நான்கு உறுப்பினர்களும் கிடைக்கக்கூடும்.. இதில் திமுக தனது ஒரு இடத்தை காங்கிரசுக்கு கொடுக்கும் என்பது ஊரறிந்த பரம ரகசியம்.

தமிழகத்தில் தங்களை புறக்கணித்து விட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது என்று கொக்கரித்த பாமக, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், தங்கள் இயக்கத்தின் செல்வாக்கு மீதிருந்த அதீத நம்பிக்கையாலும், ஜாதி ஓட்டுக்களை வைத்தே பெரும் சக்தியாக விளங்க முடியும் என்கிற நப்பாசையினாலும், பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இரு கட்சிகளிடம் இருந்தும் சம தூரத்தை பராமரித்தது.  பென்னாகரம் தேர்தலில் தனித்து வெற்றி பெற்றால் அது பின்னாட்களில்  வரும் தேர்தல்களில் தங்களை முன்னிலை படுத்திக்கொள்ளவும், அதிகப்படியான இடங்களில் போட்டியிடக்கூடிய அளவிலே இடங்களை பெற்றுக்கொள்ளவும் உதவும் என்பதால்,  தங்கள் இன ஓட்டுக்கள் அதிகம் இருக்கும் நம்பிக்கையால் பெரும் துணிவோடு தேர்தலை சந்தித்தது.

தோல்வி தான் எனினும், கவுரவமான தோல்வி என்று சொல்ல தக்க அளவிலே நாற்பதாயிரம் ஓட்டுக்களை பெற்று தனி சக்தியாக தாங்கள் அங்கே இன்னமும் விளங்கி கொண்டு இருப்பதை கம்பீரமாகவே பறை சாற்றி இருந்தனர்.  இன்னும் சொல்லப்போனால் பிரதான எதிர்கட்சியான அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பெற்று இருப்பதன் மூலம் தங்களை பென்னாகரத்தில் நிலைப்படுத்தி கொண்டனர்.  எனினும் மாநில அளவில்?

தன குடும்பத்தில் இருந்து யாரேனும் பதவிகளுக்கு வந்தால் அவர்களை சவுக்கால் அடிப்பேன் என்று அறைகூவிய இயக்கம் அன்புமணியை ராஜ்யசபா மூலம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி அமைச்சர் பதவியையும் அனுபவித்தது.  மீண்டும் அப்படி நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்கிற அதீத ஆவல் அகத்துள் இருந்தும், தனது இயக்கத்துக்கு தமிழகத்தில் இருக்கும் 'அதீத' செல்வாக்கையும், உறுப்பினர் எண்ணிக்கையும் கணக்கிட்டு பார்க்கையில், தேர்தலை சந்திக்காமல் மக்கள் மன்றத்துக்கு வராமல் மேலவை உறுப்பினர் ஆவதே பாதுகாப்பானது என்கிற முடிவுக்கு இயக்கம் வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் யார் மூலமாக வருவது?

திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைப்பதாக பாவித்து இருவரையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தாயிற்று.  மீண்டும் சில சமாதான தூதுகள் அனுப்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.  அதிமுக அவசரமாக தனது இரண்டு உறுப்பினர்களையும் அறிவித்ததால், திமுகவை கேஞ்சிக்கொண்டிருன்தது பாமக.  திமுகவும் காங்கிரசும் தத்தம் வேட்பாளர்களை அறிவித்துவிட நட்டாற்றில் நிற்கிறது பாமக.

ராஜ்ய சபா கனவில் இருந்த தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தி (!) குழப்பத்தின் உச்சியில் இயலாமையுடன் இருந்து கொண்டிருக்கிறது.

இரு இயக்கங்களும் இத்தகைய ஒரு போன் தருனத்துக்காகவே காத்திருந்ததுன் போல, பாமகவை தனிமை படுத்தியதன் மூலமாக ஜாதி இயக்கங்களை பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கின்றனர்.  மேலும் சொந்த செல்வாக்கு என்று எதுவும் இல்லாமல், பிறர் முதுகை மட்டுமே நம்பி சவாரி செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் பாமகவுக்கு உணர்த்தி இருக்கின்றனர்.  ராஜ்ய சபா கனவு என்பது தனியே காண வேண்டியது அல்ல என்பதை இப்போது பாமக உணர்ந்திருக்கும்.

இதன் பிற விளைவுகள் சுவாரசியமானவை!

பாமகவின் ஆர்பாட்டம் முன்பு போல எடுபடாது
சொந்தமாக தங்களுக்கென சுய செல்வாக்கு இல்லாத\ஒரு இயக்கம் என்பது தெளிவாகி விட்டதால் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்
திமுக பரந்த மனப்பான்மை உள்ள கட்சி என்பதால் மீண்டும் தங்கள் அணியில் பாமகவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது, எனினும், இட ஒதுக்கீட்டு பேரன்களில் திமுகவின் நிலைப்பாடே இறுதியாக இருக்க கூடும். பேரம் பேசும் உரிமை இப்போது பாமவுக்கு இல்லாததாலும், அவர்களின் சுய செல்வாக்கு பட்டவர்த்தனம் ஆகி இருப்பதாலும், குறைந்த அளவிலே தான் இடங்கள் கிடைக்கும்.. அது தமிழகத்துக்கு பல வகையிலும் நல்லது.

ஒருவேளை, இந்த ராஜ்ய சபா கனவு மட்டும் பாமகவுக்கு வராமல் இருந்திருந்தால், அமைதியாக அரசியல் விளையாட்டுக்களை வேடிக்கை பார்த்திருந்தால், பென்னாகரம் ஒட்டு எண்ணிக்கையை வைத்து திமுக, பாமகவுக்கு ஒருவேளை கொஞ்சம் மரியாதை கொடுத்து இருக்க கூடும்.  சட்டமன்ற தேர்தல் வரை பாமக அடக்கி வாசித்து இருந்தால், அவர்கள் மீதான மரியாதை கூடி இருக்கும். செல்வாக்கு பற்றிய சந்தேகம் மெல்ல மெல்ல தணிந்து இருக்கும்.  ஆனால் ராஜ்யசபா ஆசை அவசரமாக இரு இயக்கங்களிடமும் தூது அனுப்பி கெஞ்ச வைத்து, தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி, இறுதியில் எந்த பலனும் இல்லாமல் தனித்து விடப்பட்ட சூழலுக்கு பாமகவை தள்ளி இருக்கிறது.

பாமக தனித்து விடபடுவது தமிழகத்துக்கு நல்லது எனினும் அப்படியான ஒரு நிலைப்பாட்டுக்கு தங்களை தாங்களே உட்படுத்தி கொண்டிருப்பது வித்தியாசமான விஷயம்.  ஆசை யாரை விட்டது?

Printfriendly