Sunday, February 27, 2011

ரயில் பட்ஜெட் - தமிழகத்தை பொறுத்தவரை.

யில்வே பட்ஜெட் தாக்கல் ஆகி இருக்கிறது.. இந்த ஆண்டும்.

வழக்கம் போலவே தமிழகம் ஏமாற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறது அதே வழக்கமான அமைதியுடன்.

ஐந்து மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த வேளையிலும், முக்கியமான மாநிலமான தமிழகம் போதிய அளவுக்கு முக்கியத்துவம் பெறாமல் இருப்பதன் பின்னணி அரசியல் சார்ந்தவையாக இருக்கக்கூடும். எனினும் ஒரு தமிழனாக நம் மாநில தேவைகள், எதிர்பார்ப்புக்கள் அதன் ஏமாற்றங்களை அசைபோட்டு பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

முதலில் இந்த பட்ஜெட் நமக்கு குறிப்பாக கொடுத்தவை என்ன என்று பார்க்கலாம்.

சென்னை - மதுரை; சென்னை - மதுரை - திருவனந்தபுரம்  ஆகிய வழி தடங்களில் துரந்தோ ரயில் விடப்படுகிறது.  இது பெரும் தொழிலதிபர்களுக்கே வசதியாக இருக்கும்.. எனினும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விடப்படும் ரயில் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்பது புரியவில்லை. காரணம் விமான கட்டணமும் அதே அளவுக்குள் வருகிறது.. பயண நேரமோ 2 மணி நேரம் தான்.

கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு லிங்க் எக்ஸ்பிரஸ்.  இது ஏற்கனவே இயங்கி கொண்டு இருக்கும் கோவை நாகர்கோவில் ரயிலில் சில இணைப்பு பேட்டிகள் மட்டும் என்று சுருங்கி போனதில் சிறப்பாக சொல்ல எதுவும் இல்லை

சென்னையில் இருந்து காரைக்காலுக்கு நாகூர் எக்ஸ்பிரஸ்.  இது ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த கம்பன் லிங்க் ரயில் தான்.  திருவாரூரில் இருந்து சில பெட்டிகள் தனியாக நாகூர் வரை சென்று கொண்டிருந்தது.  அகல பாதை மாற்றத்துக்காக நிறுத்தப்பட்டு இருந்த ரயில் இப்போது மீண்டும் விடப்பட்டு இருக்கிறது.  புதிய மொந்தையில் பழைய கல்.

தருமபுரி - பெங்களூர் இடையே விடப்பட்டு இருக்கும் ரயில் எக்ச்பிரசாக இயங்காமல் பயணிகள் ரயிலாக இயங்குவதாக இருந்தால் நலம்

விழுப்புரம் இப்போது தேர்மினலாக உருவெடுத்துள்ளது.  விழுப்புரத்தில் இருந்து காரக்பூருக்கு ரயில் சேவை வேலூர் வழியாக துவக்கபடுகிறது..நல்ல விஷயம்.


சென்னை திருச்செந்தூர் ரயில் தினசரி இயக்கப்படும் (முன்பு வாரம் ஒரு முறை); கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் வாரத்துக்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் என்பவை வரவேற்க்கப்படவேண்டிய நீண்ட நாள் கோரிக்கைகள்.

காஞ்சீபுரம் - திருப்பதி; பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் வழித்தடத்துக்கான ஒப்புதல் ஆச்சரியம் கொடுக்கிறது.. எனினும் சேலம் நாமக்கல் பழனி வழித்தடம் என்ன ஆயிற்று என்பது விளக்கப்படவில்லை.  நாமக்கல் வரை பணிகள் முடிவடைந்தும் ரயில் சேவை இன்னமும் தொடங்காமல் இருக்கிறது

சென்னையில் இருந்து மதுரைக்கு காலை நேர விரைவு ரயில் ஒன்றும், சென்னை நெல்லை வழியில் இன்னும் ஒரு ரயில் வேண்டும் என்றும் உள்ள தேவைகள் கவனிக்கப்படவில்லை.  கோவை நெல்லை, கோவை திருவனந்தபுரம், கோவை பெங்களூரு மார்க்கத்தில் தனி ரயில் வேண்டும் என்பதும் ஏற்கப்படவில்லை

கோவை சென்னை துறந்தோ ரயில் நேரம் கிட்டத்தட்ட கோவை எக்ஸ்பிரஸ் நேரத்தை ஒட்டியே இருப்பதும், கட்டணமும் கூடுதலாக இருப்பதும், கவனத்தில் கொண்டு, துறந்தோ ரயில் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் வீணாயிற்று.

எர்ணாகுளத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படுவதாக இருக்கும் இண்டர்சிட்டி ரயிலும், திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்த ரயிலும் கோவை வரை நீட்டிக்கப்படவேண்டும்.

உள்கட்டமைப்பு, பாலங்கள், போன்ற பணிகளுக்கு தமிழகத்துக்கு இந்த முறை அதிக முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

மிக மிக நீண்ட காலமாக பனி நடந்து வரும் கோவை - திண்டுக்கல்; மதுரை - போடி; திருவாரூர் - காரைக்குடி அகல பாதை திட்டங்கள் இந்த ஆண்டும் கனவாக போய் விட்டது.

சென்னை - மதுரை; சென்னை - நெல்லை; சென்னை - பெங்களூரு; சென்னை - கோவை மார்க்கங்களில் இன்னமும் ரயில் தேவை இருந்துகொண்டே இருப்பதை கணக்கில் கொண்டு கூடுதல் ரயில்கள் விடப்படவேண்டும் என்கிற நம்பிக்கை நப்பாசை ஆகிக்கொண்டு இருக்கிறது.

சென்னையை போலவே.. கோவையை மையமாக கொண்டு, பாலக்காடு, மேட்டுப்பாளையம், திருப்பூர்/ஈரோடு, பொள்ளாச்சி வழித்தடங்களிலும்; திருச்சியை மையமாக கொண்டு, தஞ்சாவூர், மதுரை, கரூர், விழுப்புரம் வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்கிற ஆசையும் நப்பாசை பட்டியலில் சேர்ந்து கொள்கிறது.

போதுமான ரயில்கள் விடப்படாமல், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாமல், வேற்று கவர்ச்சியாக சில ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ரயில் பட்ஜெட் இனிதே தாக்கல் ஆகி விட்டது தமிழகத்தை பொறுத்தவரை.

அடுத்த ஆண்டுக்காக ஆசையை தள்ளி வைப்போம்...

No comments:

Post a Comment

Printfriendly