Sunday, March 18, 2012

இந்திய பட்ஜெட் 2012 - என்ன தரும்?



ந்திய பட்ஜெட் இந்த ஆண்டுக்காக தாக்கல் செய்யப்பட்டு விட்டது. மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கலாக்கி   ஒரு மிக  பெரிய அறிவிப்புக்களின் பட்டியலை வெளியிட்டார். அந்த அறிவிப்புக்களின் சாரம் என்ன? அடுத்து எதிர்வரும் காலங்களில் இந்திய பொருளாதாரம் என்னவாக இருக்கும்? இந்த பட்ஜெட் நமக்கு சொல்ல வருவது என்ன?

முதல் பகுதி உரையை காண்கையில் ஒரு முற்போக்கான வளர்ச்சி பாதையை நோக்கிய முன்னேற்றத்துக்கான பட்ஜெட்டுக்காக காட்சி அளித்தது. காரணம் வட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி, பொருளாதார சீர்திருத்தம், வரி சீரமைப்பு, ஜி.எஸ்.டி amalaakkam, சுகாதார திட்டங்கள், அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள், விவசாய ஊக்குவிப்பு திட்டங்கள் என மகிழ்ச்சியான விஷயங்கள் தான் வெளியானது. அப்படியே இருந்திருந்தால் இந்தியா மிக சிறப்பான வகையில் தனது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக கருதி சந்தோஷப்பட்டிருக்க முடியும்.  ஆனால் பிரனாபின் முழுமையான பேச்சை படித்தபின் ஏற்பட்டிருக்கும் கருத்து மாறுபட்டதாக இருக்கிறது.

பிரணாப் பேச்சின் இரண்டாம் பகுதியை பார்க்கையில் முழுமையாக முதலாளித்துவத்துக்கான ஆதரவான பட்ஜெட்டாக தெரியும் நிலை இருக்கிறது. விமானபோக்குவரத்தில் அந்நிய கடனுக்கு அனுமதி, விமான உதிரிபோருட்களுக்கு இறக்குமதி வரி ரத்து, விமான எரிபொருளை நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி என விமான நிறுவனங்களை மகிழ்ச்சி படுத்தும் அறிவிப்புக்களும், பிற தொழில் கூறுகளில் மிக பெரிய சலுகைகளும், நடுத்தரவர்க்கத்டுக்கான அதிகபட்ச தண்டனையும் வெளியாக தொடங்கியது.

வரிகளை பொறுத்தவரை  உற்பத்தி வரி மற்றும் சேவைவரி  2 % உயர்வு, அனைத்து சேவைகளும் வரிக்கு கொண்டு வருதல், ஏற்றுமதி சேவைக்கான வரி, இறக்குமதிக்கான வரி ரத்து, வருமான வரி சலுகையில் மிக குறைந்த முன்னேற்றம், ஜி.எஸ்.டி திட்டத்தில் தெளிவின்மை போன்றவற்றால், உள்நாட்டு தொழில்கள் முடங்கவும், வெளிநாட்டு மற்றும் இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வளரவுமான வரி விதிப்புமுறை  அமல் செய்யப்பட்டு இருக்கிறது. பணவீக்கத்தின் தற்போதைய நிலையம், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் வீழ்ச்சியும் ரூபாயின் மதிப்பு சரிவு  எல்லாம் சேர்ந்து பொதுமக்களின் சம்பாத்தியத்தின் பலனை பாதியாக குறைத்திருக்கும் நிலையில், வரி உயர்வு, அதிலும் சேவை வரி உயர்வு என்பது அவனது திட்டமிட்ட செலவினங்களில் திட்டமிடாத கூடுதல் செலவாக கூடுதல் சுமையாக அவனை அமிழ்த்தக்கூடும்.

பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீடு அதிகரித்திருப்பதும், போர் விமானங்கள்  வாங்குவதற்கான முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்திருப்பதன் காரணம் புரியவில்லை. அடிப்படை வசதிகளில் போதிய வளர்ச்சி இல்லை என பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்ளும் மத்திய அரசு, அத்தகைய அடிப்படை வசதிகளுக்கான முக்கியத்துவத்தி குறைத்துவிட்டு போர் விமானங்களை ஆர்வமாகவும் அவசரமாகவும் வாங்குவது உறுத்துகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்துவதற்காக மிக பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது வரவேற்க்கத்தக்கது. சாலைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் முன்னெடுத்து செல்லும் காரணி என்பது சற்று தாமதமாகவேனும் புரியதுவங்கி இருக்கிறோம். குறிப்பாக, பின்தங்கிய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் அதிக அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு அப்பகுதிகளை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்.

நிர்வாகத்தை பொறுத்தவரை, 3 % என எதிர்பார்க்கப்பட்ட நிர்வாக செலவு 13 % என உயர்ந்திருப்பது சுத்தமாக நிர்வாக திறமை இல்லை என்பதையும், ஒட்டு மொத்த நிர்வாகமும் சீர் கேட்டு போயிருக்கிறது என்பதையும் தான் காட்டுகிறது.  22 % வருவாயை கடனை நம்பி இருக்கும் இந்திய பட்ஜெட்டில் 18 % செலவினம் கடனுக்கான வட்டியாக  இருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கக்கூடியது. இதை விட மிக மோசமான பொருளாதார திட்டமிடல் வேறு என்ன இருக்க முடியும்?  வளர்ச்சி பணிகளுக்கு 7 % மட்டுமே நிதி ஒதுக்கும் ஒரு நாட்டில் 22 % கடனுக்கு 18 % வட்டி என்பது கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதை போன்றது.

சுருக்கமாக சொல்வதானால், முற்போக்கான திட்டங்களை தருவதாக சொல்லப்பட்டாலும், அவை அனைத்தும் பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், நடுத்தர மக்களுக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் பாதகமாகவும் இருக்க கூடியதாக இருக்கிறது இந்த பட்ஜெட்.






Monday, March 12, 2012

உ.பி தேர்தல் முடிவு - இந்தியாவின் எதிர்காலம்?

பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகி, சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

மேலும் 3 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்து தலை குனிந்து நிற்கிறது.

ஒரு முக்கியமான காலகட்டத்தில், பொருளாதார மேம்பாடை எதிர்நோக்கி காத்திருக்கும் எதிர்கால இந்தியா எப்படி இருக்கும்? இந்த தேர்தல் நமக்கு சொல்ல வருவது என்ன?


உத்தரபிரதேசம் இந்தியாவின் மிக பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பதால், இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கை அது வகிக்கிறது.


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கியமான பங்கை வகிக்கும் என பலமாக எதிர்பார்க்கப்பட்டாலும், சமாஜ்வாடி கட்சி தனி பெரும் கட்சியாக முகிழ்த்து இந்தியாவின் முக்கிய கனவுகளை எல்லாம் மாற்றிப்போட்டிருக்கிறது.

தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் அலசல்களான, காங்கிரஸ் தோல்விக்கான காரணம், மாயாவதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள், முலயாமின் மீள் வருகை என்பதை எல்லாம் விவாதப்பொருள் அல்ல இங்கு.  இந்த தேர்தல் முடிவு, இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்கும் என்பதை மட்டுமே பொருளாக கொள்கிறேன்.

காங்கிரஸ் தயவின்றி சமாஜ் வாடி ஆட்சி அமைப்பதால், இன்றைய தேதியில், பலமான மாநில கட்சியாக சமாஜ்வாடியும் உருப்பெற்றிருக்கிறது.  தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும் தத்தம் பெயரையும் பெருமையையும் போட்டி போட்டு கெடுத்துக்கொண்டதில், இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. இச்சூழலில், மாநில கட்சிகள் பரவலாக பெற்றுவரும் வெற்றிகள் சற்று யோசிக்க வைக்கிறது. மாநிலங்களுக்கான அதிகாரங்கள், உரிமைகள் என்கிற நோக்கில், மாநில கட்சிகள் வலுப்பெறுவது ஆதரிக்கக்கூடியது என்றாலும் கூட, இப்போது வெற்றிபெற்றிருக்கின்ற மாநில கட்சிகள் பலவும் மத்திய அரசை குறிவைத்து இயங்குபவை என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால், இப்போதைய மாநில கட்சிகள் பெற்றிருக்கின்ற வெற்றி குழப்பத்தை தருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலிதளம் கட்சி ஆட்சி அமைத்து இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் செல்வி. ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்காளத்தில் மமதா பானர்ஜி என பரவலாக முக்கிய மாநில கட்சிகள் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன.

காங்கிரஸ் அரசின் மீதான அதிருப்தி பெருகி வரும் வேளையில், காங்கிரஸுக்கு மாற்றான வலுவான கட்சியாக எதுவும் இப்போது இல்லை. தேசிய கட்சியான பா.ஜ.க சொந்த கட்சியின் பிரச்சனைகளில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இருப்பதாக கருதப்பட்ட செல்வாக்கின் மாயை மெல்ல மெல்ல விலகி வருகிறது.

மற்றொரு தேசிய கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, அந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கான நோக்கத்தை விட்டு விலகி பயணித்து, மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. கேரளம், திரிபுரா, மே.வங்காளம் ஆகிய மாநிலங்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஆழமாக வேரூன்றுவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், பாட்டாளிகள், ஏழை எளிய மக்களுக்கான எந்த ஆதரவு நிலைப்பாட்டையும் ஆக்கப்பூர்வமாக எடுக்காமல் பெயரளவிற்கு இயங்கி வருகின்றன.

இது நாள் வரையும் மாநில அளவில் ஆங்காங்கு இயங்கி வந்த மாநில கட்சிகளும் ஒருவாறு தேசிய சிந்தனை இல்லாமல், நம்பிக்கை இல்லாமல் தான் இயங்கி வந்தன.  இவ்வாறான சூழலில் தான் உத்திர பிரதேச தேர்தல் வெற்றியை பார்க்க வேண்டி இருக்கிறது.

பீஹார் மாநிலத்தின் வலுவான தலைவராக, நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். ஒரிசாவில் பிஜு ஜனதா தளம், கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பஞ்சாபில் அகாலி தளம், மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் என மாநில கட்சிகள் வலுவாக இருக்கிற கால கட்டம் இது.

அடுத்த ஆண்டு மத்தியில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் விரைவில் எதிர்பார்க்கக்கூடியது, வழக்கமாக தேர்தல் காலங்களில் தோன்றக்கூடிய மூன்றாவது அணி.

மமதா போன்ற வலுவான அரசியல் தலைவர்கள் வேறு வழியின்றி இது வரையும் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்து வருவதாகவே உணரப்படுகிறது. உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் அவரை போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை தரக்கூடும். ஏற்கனவே மூன்றாவது அணியில் பங்கெடுத்த பாதல், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா போன்றவர்களும், தேவேகவுடாவின் புதல்வர் குமாரசாமி, முலயாம், நிதிஷ் என ஒரு மிகப்பெரிய மாநில கட்சிகளின் கூட்டணியை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

அவ்வாறு ஒருவேளை மூன்றாவது அணி தோற்றுவிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

தொங்கு பாராளுமன்றம்

அதிகார கைப்பற்றல்களுக்கான போட்டிகள்

யார் தலைவர் என்கிற மோதல்கள்

திறனற்ற நிர்வாகம்

பொருளாதார நிச்சயமற்ற தன்மை

வளர்ச்சி விகித பாதிப்பு

இன்றைக்கு இந்தியா இருக்கும் சூழலில் இதுபோன்ற ஒரு நிலையற்ற அரசியல் சூழலை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்திய தொழில்துறையும், பொருளாதாரமும் என்ன ஆகும் என்பதெல்லாம் இனி வரும் ஒன்றரை ஆண்டுகளை பொறுத்தே அமையும்.


சந்திரபாபு நாயுடு, முலயாம், ஜெயலலிதா, நிதிஷ்குமார் என பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் மூன்றாவது அணியில் அதிகமாக இருக்கும் நிலையில், காங்கிரசும் பாஜகவும் இனியேனும் சுதாரித்து, தத்தம் தவறுகளை திருத்தி, மக்கள் செல்வாக்கை மீண்டும் பெற்று வலுவான ஒரு கட்சி ஆட்சி முறைக்கு வழிவகுத்தால் ஒழிய, இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியானதே என கருதுகிறேன்!

Printfriendly