Tuesday, July 31, 2012

டெசோ மாநாடு!


டந்த மாதம் கலைஞர் அவர்கள் ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்த ஈழ ஆதரவாளர்கள் மாநாடு விழுப்புரத்தில் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் பாதுகாப்பு காரணங்கள் கருதியும்,வெளிநாட்டிலிருந்து வரும் பிரதிநிதிகளின் பயண / தங்கும் வசதி கருதியும் மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறும் என முடிவாகி இருக்கிறது. இதில் ஈழ ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் என பலரும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

சரி, இப்போது எதற்காக இந்த மாநாடு? அதை பற்றி பேசுவதற்கு முன்னால், நாம் சின்னதாக சுருக்கமான ஒரு ரீகேப் சென்று வருவோம்!
டெசோ புதிதல்ல. 80களில் போராளி குழுக்களுக்கிடையே சகோதரசண்டை ஏற்பட்டபோதே துவக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ஈழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு (Tamil Ealam Supporters Organisation). 

ஏன் அப்படி ஒரு அமைப்பு அப்போது உருவாக்கப்பட்டது?

ஈழத்தில் இனப்பிரச்சனை தோன்றி, பெரியவர் செல்வா தலைமையில் அமைதி அறவழி போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த 50 களிலிருந்து 70களின் இறுதி வரைக்கும் பேச்சுவார்த்தையை முன்னிலைப்படுத்தியே போராட்டம் என்பது இருந்து வந்தது. அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு அமைதிக்கான சிறு வெளிச்சம் தெரிய தொடங்கிய 1976ல் புலிகள் அமைப்பு யாழ்ப்பாண மேயரை சுட்டுக்கொன்று அதை ஆயுத போராட்டமாக மாற்றினர். 

அந்த நிகழ்வுக்கு பின், இலங்கை அரசு அரச பயங்கரவாதத்தை ஏவி கடுமையான உள்நாட்டு போராக தாக்குதல் நடத்த துவங்கியது.வேறு வழியின்றி நாமும் போராளி குழுக்களுக்கு ஆயுத உதவி, பண உதவி எல்லாம் செய்து அரசை எதிர்த்து போரிட்டாவது ஈழ தமிழ் மக்களுக்கு அமைதியான வாழ்வை பெற்று தரவேண்டும் என முனைந்தோம். EPRLF, TELO போன்ற போராளி குழுக்களுடன் புதிதாக தோன்றிய LTTE (புலிகள் அமைப்பு) அமைப்பையும் சமமாக பாவித்தே எல்லா உதவிகளும் செய்யப்பட்டது. ஆனால் காலப்போக்கில், மக்களுக்கான போராட்டம் என்பது மெல்ல திசை மாறத்துவங்கியது.

புலிகள் அமைப்பு, தங்கள் இயக்கத்தை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடத்தொடங்கி, மக்களுக்கான போராட்டத்தை, தமிழர்களின் பிரதிநிதித்துவத்திற்கான போராட்டமாக மாற்றினர். இதன் காரணமாக, பிற குழுக்கள் அனைத்தையும் அழித்தொழித்து, தாங்கள் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதி என நிலைநாட்ட முயன்றதன் காரணமாக, போராளிக்குழுக்களுக்கிடையே சகோதர சண்டைகள் நடைபெற துவங்கியது.

1983ல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள், மதுரை தமிழ் மாநாட்டை காரணம் காட்டி அனைத்து போராளிகுழுக்களையும் மதுரைக்கு வரவழைத்து பேச்சு நடத்தினார். தமிழகம் போராளிகுழுக்களுக்கு உதவி செய்வது ஈழ தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தானே தவிர தலைமைக்காக அடித்துக்கொள்வதற்கல்ல என்பதை உணர்த்தி அனுப்பினார். அப்போது தான் டெசோ அமைப்பு முதல் முதலில் தோற்றுவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் அவர்களது மறைவு வரையும் நல்லபிள்ளையாக இருந்த புலிகள் அமைப்பு, அதற்கு பின் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் முகமாக அனைத்து குழுக்களையும் அழித்து தாங்கள் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதிகள் என்பதை நிலைநாட்டிக்கொண்டனர்.

நமக்கு வேறு வழி இல்லை.

ஈழத்தமிழர்களுக்கென்று மிச்சமிருக்கும் ஒரே அமைப்பான புலிகளை ஆதரித்தாகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாலும், அவர்களது வன்முறை பாதையை தமிழகம் எப்போதுமே ஆதரித்ததில்லை.

1959லேயே சிதம்பரம் நகரில் தனி ஈழம் தான் தமிழர்களுக்கான தீர்வு என முழங்கிய கலைஞர் தான் ஈழ விவகாரத்தில் மிக முக்கிய தமிழக பிரதிநிதி. ஈழ விவகாரத்தில் முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருந்த காங்கிரஸ் அமைப்பின் தங்கபாலு போன்றோரும், அதிமுகவின் ராசாராம் போன்றோரும் கூட கலைஞரின் ஆலோசனைப்படியே தான் தத்தம் நிலைப்பாடுகளை எடுத்து வந்தனர். அவ்வளவு ஏன், ஈழ போராட்டம் உச்சத்தில் இருந்த 80களில் அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆரே கூட, ஈழ விவகாரத்தை பொறுத்த மட்டில் கலைஞரின் ஆலோசனையை அடியொற்றியே முடிவுகள் எடுத்துவந்தார். எல்லா வகையிலும், தமிழகம் தனி ஈழத்துக்கு ஆதரவாக இருந்தபோதிலும், ஆயுத போராட்டம் வன்முறை என்பதை ஆதரித்ததில்லை.

1991ல் அவசியமேயில்லாமல் ராஜீவை கொன்றபின், ஆயுதபோராட்டத்துக்கு எதிரான மனநிலை தான் தமிழகத்தில் ஏற்பட்டது. ஈழ ஆதரவு என்பதை 1991க்கு முன், 1991க்கு பின் என தாராளமாக பிரித்துக்கொள்ளலாம்.

1991க்கு முன், எப்படியேனும் தமிழர்கள் அமைதி வாழ்வு வாழவேண்டும், அதற்காக எந்த அமைப்பு துணைநின்றாலும் அவர்களை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்றிருந்த நிலை, 1991க்கு பின் முற்றிலுமாக மாறிவிட்டது. ஈழத்தமிழர்கள் அமைதியான வாழ்வு வாழவேண்டும், ஆனால் அது ஜனநாயக ரீதியிலாக இருக்கவேண்டும் என்கிற மனப்பான்மையே தமிழகத்தில் பரவலாக ஏற்பட்டது. இன்று வரை, தனிஈழ ஆதரவு, புலிகள் ஆதரவு போன்ற நிலைப்பாட்டை எடுத்த கட்சிகளை தமிழக மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து வருவதை, தொடர்ந்து தமிழக அரசியலை கவனித்து வருவோர் நன்கு அறிவார்கள். (இணையதளத்தில் சில நூறு பேர்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாடு என்று, நல்லவேளையாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை) 

மதிமுக, வி.சி, சி.பி.அம், பா.ம.க போன்ற கட்சிகள் வெற்றிக்கூட்டணியில் இருந்த காலங்களிலும் கூட தோல்வியை தழுவியதற்கு இதுபோன்ற ஈழ ஆதரவு தான் காரணம் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கக்கூடும். பின்னர் படிப்படியாக முக்கிய அரசியல் கட்சிகள் பலவும் புலி ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஜனநாயக முறையில் தமிழர்கள் சம உரிமை பெற்று அமைதி வாழ்வு வாழவேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள்.

ஈழத்தோடும், புலிகளோடும், எந்த தொடர்பும் இல்லாத, ஈழ விவகாரம் குறித்து ஆழ்ந்த தெளிந்த விஷயஞானமற்ற சிறு சிறு இயக்கங்கள் மட்டுமே, பரபரப்புக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும் ஈழ விவகாரத்தை கையிலெடுத்து மக்களின் உணர்வுகளின் பலவீனத்தை நம்பி அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களை விட்டுவிட்டு நாம் விஷயத்துக்கு வருவோம்.

2009 இறுதிகட்ட போருக்கு பிந்தய இப்போதைய சூழலில் இருந்து தான் நான் இப்போது இந்த டெசோ மாநாட்டை பார்க்க விரும்புகிறேன்.

ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்து, உலக நாடுகளின் கண்காணிப்புக்குள் இலங்கை இப்போது இருந்து வருகிறது. இந்தியா முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் இலங்கையை கொண்டுவரும் ஒரு பெரு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதில் நல்ல முன்னேற்றமும் தெரியத்தொடங்கி இருக்கிறது. மறுவாழ்வு பணிகளுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகளும் மக்களுக்கான வளர்ச்சி பணிகள், சாலை மேம்பாடு, கல்வி, தொழில் போன்ற துறைகளில் மேம்படுத்துதலை செய்து வருகின்றன.

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் சொன்னபடியான அதிகார பரவல், ஜனநாயக முறையிலான ஆட்சிமுறை ஆகியவை செயல்படுத்தப்படுவதற்கான சூழல் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. 

ஏற்கனவே 2000ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஜனநாயகமுறையில் ஒரு தேர்தல் நடைபெற்று வரதராஜபெருமாள் அங்கே சில காலம் முதல்வராக இருந்து ஒரு அமைதியான ஜனநாயக ஆட்சி நடத்தியதும், அந்த தேர்தலில் புலிகள் அமைப்பு ஆதரித்த இயக்கம் தோல்வி கண்டதும், பின்னர் புலிகள் அமைப்பு அந்த ஆட்சியையே தகர்த்து எறிந்து வரதராஜ பெருமாளை ஓடவிட்டு, மீண்டும் மொத்த தமிழர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் தனி பெரும் கதை.

இப்போது அப்படியான அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையில், சர்வதேச கண்காணிப்பு தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் மிக விரைவான, நல்லவிதமான முன்னேற்றங்களுக்கு வாய்ப்பு இருப்பதை அனைவரும் உணரக்கூடும்.

இப்படியான சூழலில் தான் கூடுகிறது டெசோ மாநாடு!

இதன் நோக்கம் மிக தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஐ.நா அமைப்பின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிற கோரிக்கை, தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றி ஈழ தமிழர்களே சுயமாக முடிவெடுத்துக்கொள்ளவேண்டும் என்பதன் மறைபொருளாக நான் உணர்கிறேன். இப்போது கிடைத்திருக்கும் சூழலை, தமிழர்களுக்கு ஆக்கப்பூர்வமாக எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதை பற்றிய ஆலோசனைகளை, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பிரதிநிதிகளின் கருத்துக்கள் மூலம் அறிந்து, அதன் பேரில் உரிய நடவடிக்கைகளை பின்னர் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

பரபரப்புக்காகவும், குறுகிய பிரபல்யத்துக்காகவும் பல்வேறு சிறு இயக்கங்களும், சில பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்யும் பரப்புரைகளையும் பசப்புரைகளையும் புறக்கணித்துவிட்டு பார்த்தால், இப்போதைய இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவசியமானதாகவும் தோன்றக்கூடும்!

இனிமேல, ஈழ தமிழர்கள் ஈழத்தில் எப்படி வாழவேண்டும், அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும், அதிகார பரவல், சம உரிமை, சுய ஆட்சி முறை, அதற்கெல்லாம் என்னென்ன சட்ட திருத்தங்கள் வேண்டும், அல்லது தனியான ஈழம் தான் தேவையா அப்படியென்றால் அதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டும், ஐநா பொது வாக்கெடுப்புக்கு என்ன முயற்சி செய்யவேண்டும் என்பன போன்ற மிக முக்கியமான விஷயங்களை எல்லாம் விரிவாக ஆலோசிக்கவே இந்த மாநாடு என தெரிகிறது!

தனி ஈழம் அமைக்கவேண்டும் என ஏன் தீர்மானம் நிறைவேற்றப்படாது என்பதற்கான விளக்கமும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. 

பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்காமல், அவர்களது ஆலோசனையை அறியாமல், நாமெ ஒரு தீர்மானத்தை மாநாட்டுக்கு முன்பே அறிவித்து அதை நோக்கி மாநாட்டை கொண்டு செல்வதென்பது ஜனநாயகமாக இருக்காது. எனவே தீர்மானங்கள் என்னென்ன என்பதை மாநாட்டில் விவாதிக்கப்படுவதை வைத்து தான் முடிவு செய்யப்படும் என்கிற விளக்கம் சரியாந்து என்றே கருதுகிறேன். மேலும்,சமீபத்தில் பாலிமர் சேனலில் சுப.வீரபாண்டியன் அவர்கள் எடுத்துக்காட்டியதை போல, இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்ற நிலையில், அவர்களை வைத்துக்கொண்டு, தனி ஈழ தீர்மானம் நிறைவேற்றி, அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்திக்கொள்ளவும் கூடாது என்கிற நிலைப்பாட்டையும் நாம் கவனிக்கவேண்டும்  
நாமே ஒரு முடிவு எடுத்து அதை தான் ஈழ தமிழர்களும் கடைபிடித்து ஆகவேண்டும் என இங்கே உள்ள சில சிறு இயக்கங்கள் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கும் வேளையில், ஈழ விவகாரத்தில் முழுமையான ஈடுபாடும், ஆர்வமும், ஈழ தமிழர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்தான சிந்தனையும் கொண்டதாக இந்த மாநாட்டு நோக்கம் எனக்கு தெரிகிறது!
பார்ப்போம்!

மாநாட்டில் என்னென்ன விவாதங்கள் நடக்கின்றன, என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று. அதுவரை அவசரப்படாமல் இருக்கத்தான் வேண்டும் நாம்!


Monday, July 30, 2012

இனியேனும் திருந்துமா ரயில்வே?


ன்று காலை எழுந்ததுமே ஒரு துயரசெய்தி தான் வந்து அறைந்தது மனதை! 

புதுடெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்11 கோச்சில் மின்கசிவு காரணமாக(!) ஏற்பட்ட தீவிபத்தில் உடல்கருகி 50+ பேர் பலியான செய்தி.

சமீப காலங்களில் ரயில் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றதை காண்கிறோம். ஆனால் இந்த விபத்து எனக்கு வித்தியாசமாக பட்டது! 
ரயிலில் 110V டி.சி மின்சாரம் தான் இருக்கும். அது கசிந்து ஸ்பார்க் ஆகி தீயாக மாறி, எரிந்து மொத்த கோச்சையும் நாசம் செய்திருக்கிறது என்பதை என்னால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் குறிப்பாக ஒரே ஒரு பெட்டி மட்டுமே எரிந்திருக்கிறது. தீ பரவவில்லை. இதே கோச்சில் இருந்த சில பயணிகள் தீ பிடித்த ஆரம்ப கணங்களிலேயே அடுத்தடுத்த பெட்டிகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து உயிர் பிழைத்திருக்கிறார்கள்!



கோச்சின் கதவுகள் திறக்கமுடியாமல் போனதிலும், அச்சத்திலும், நெருக்கடியிலும் சிக்கியே பல பயணிகள் தீக்கிரையாகி இருக்கின்றனர். அதிலும் பெரும்பாலும் அப்பர் பர்த்தில் படுத்தவர்களே எரிந்திருக்கின்றனர். இந்த அப்பர் பர்த் சிஸ்டமே கொடுமையானது. யார் அதை அனுமதித்தார்கள் எனப்து இன்னமும் புரியவில்லை. சுத்தமாக காற்றுவசதியோ, நேராக உட்காரும் வசதியோ கூட இல்லாத ஒரு நெருக்கடியான பெர்த் அது! முதலில் அதை தடை செய்யவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கருத்து! அதே போல, சைடு அப்பர் பெர்த் பகுதியில் வெண்டிலேட்டர் போல ஒரு ஜன்னல் வைக்கவேண்டும் என்பதும் எனது கோரிக்கைகளுள் ஒன்று.



விபத்து நடந்து ஒரு மணிநேரத்துக்குள்ளேயே தீயணைப்பு வண்டிகள் வந்துவிட்டது மகிழ்ச்சியான செய்தி. மீட்பு நடவடிக்கைகளும், தகவல் பரிமாற்றங்களும் சிறப்பாக இருந்திருக்கின்றன. ஆனால் பாதுகாப்பு? அது தான் பயமாக இருக்கிறது.

முற்காலங்களில் மூன்றாம் வகுப்பு பயணிகளை எப்படி ரயில்வே நடத்தியதோ, அதேபோலவே தான் இப்போது இரண்டாம் வகுப்பு பயணிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறது என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமே உள்ளது! மூன்றாம் வகுப்பை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்றாலும் கூட அங்கே கடைபிடிக்கப்பட்ட அதே அணுகுமுறையை தான் இப்போது இரண்டாம் வகுப்பு பயணிகளிடம் காட்டி கொண்டிருக்கிறோம்! 

சுத்தமின்மை, குடிநீர் வசதியின்மை, எலி, கரப்பான்பூச்சி போன சுகாதாரமற்ற சூழலில் படுக்கைகள்/இருக்கைகள், பாதுகாப்பில்லாத பயணம், எந்த ரயில் நிலையத்திலும் யார் வேண்டுமானாலும் ஏறிவரும் வசதியால் உடமைகளுக்கு பாதுகாப்பின்மை, நிம்மதியின்மை, உதவியாளரோ, நடத்துனரோ இல்லாத குறை என கிட்டத்தட்ட இரண்டாம் வகுப்பு பயணிகளை ஏதோ 'தண்ணிதெளித்துவிட்ட' நபர்களாகவே ரயில்வே நடத்தி வருகிறது. தென்னக ரயில்வே கொஞ்சம் பரவாயில்லை! வட மாநில ரயில்பெட்டிகளில் காலை வைப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.

இத்தனை விபத்துக்கள் நடந்தும் ரயில்வே பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. உபரியாக பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கும் ரயில்வே அதை உருப்படியாக செலவு செய்யலாமெ? அதை விட கொடுமை, ஒவ்வொரு ரயில் பயணச்சீட்டுக்கும் ரூ.20/- பாதுகாப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதாவது பணம் கொடுத்தும் நமக்கு பாதுகாப்பில்லை! இந்தியா சகிப்புதன்மையுடைய நாடு என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது!

சரி

இனி ரயில்வே என்ன செய்வதாக உத்தேசம்? ரயில் பயணங்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளும் மனிதர்களே என்கிற எண்ணம் எப்போது ரயில்வேக்கு வரும்?

ஆயிரக்கணக்கான பணியிடங்களை குரூப் டியில் உருவாக்கி, ஒவ்வொரு ரயிலையு சுத்தப்படுத்தி, பாதுக்காத்து, தரமான பராமரிப்பு செய்வதற்கு ரயில்வேயால முடியாததல்ல! ஆனால் செய்யவேண்டுமே? செய்வார்களா?
 

Tuesday, July 24, 2012

நானும் செல்போனும்


ப்போது நான் ஒரு சிறிய கடையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த கடையின் முதலாளிக்கு துபாயில் ஒரு சொந்தக்காரர் இருந்தார். அவருக்கு அவசரமாக ஒரு துக்க செய்தி சொல்லவேண்டி இருந்ததால் ஐ.எஸ்டியில் அவருடைய ஆஃபீசுக்கு அழைத்தோம். ஆனால் அங்கே அவர் ஆஃபீசில் இல்லை. ஃபோனை எடுத்த அவருடைய அலுவலக உதவியாளர், வேறொரு நம்பர் கொடுத்து இதில் கூப்பிட்டீங்கன்னா அவர்கிட்டேயே பேசிக்கலாம்னு சொன்னார். அந்த நம்பருக்கு அழைத்து, அவரிடம் விஷயங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின், முதலாளி அவரிடம் கேட்டார், இது எந்த நம்பர்? வீட்டு நம்பரா? என்று. இல்லையில்லை இது என் ஹேண்ட் ஃபோன்.. நான் இப்போ கார்ல வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்னு சொன்னார் அவர். அவ்வளவு தான். நாங்க ஃபோனை கட் பண்ணிவிட்டு கிட்டத்தட்ட சிலை மாதிரி ஆஃபீசில் எதிரெதிர் உட்கார்ந்திட்டிருந்தோம். முதலாளி சொன்னார் பார்றா.. கார்ல போயிட்டிருக்கும்போதே ஃபோன்ல பேசுறான்.. வீட்டுக்கு போயித்தான் பேசணும்னு கட்டாயமில்லை.. ஃபாரின் ஃபாரின் தான்ன்னு அன்னைக்கு முழுக்க சிலாகிச்சிட்டே இருந்தார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மாசங்களிலேயே சென்னைக்கு செல்ஃபோன் சேவை வந்திருச்சு! என்னிடம் ஒரு பேஜர் இருந்தது அப்போது! பேஜர் கம்பெனிக்கு ஃபோன் செஞ்சு தகவலை சொல்லிட்டா அவங்க அதை குறுந்தகவலா எனக்கு அனுப்பிருவாங்க. அதை படிச்சு விஷயத்தை தெரிஞ்சுக்கலாம். ஆனால் டிவிட்டர் மாதிரி லிமிட்டட் வார்த்தைகள் தான் உபயோகிக்கமுடியும் என்பதால் பெரும்பாலான மெசேஜ் கால் மீ என்பதாக தான் இருக்கும்!

செல்ஃபோன் சேவை வந்ததும், முதலாளி ஆசை ஆசையாக ஒரு கனெக்ஷன் எடுத்தார். சென்னையில் அப்போது ஸ்கைசெல் & ஆர்.பி.ஜி ன்னு ரெண்டு நிறுவனங்கள் தான் செல்ஃபோன் சேவை கொடுத்தது. முதலாளி, ஸ்கைசெல் ஃபோன் வாங்கினார். அப்பிளை பண்ணின அடுத்த நாளே கனெக்ஷன் கிடைச்சிருச்சு. ஒரு லேண்ட் லைனுக்காக 10,000 ரூபாய் டெப்பாசிட் கட்டி, 7 வருஷம் வரைக்கும் காத்திருந்து கனெக்சன் வாங்கிட்டு இருந்த சமயத்தில் ஒரே நாளில் போன் கனெக்சன்ங்கறது நம்பமுடியாத சந்தோஷ அதிர்ச்சி.
நோக்கியா 2110 போன், 27,000 ரூபாய். இதுக்கான தொகை இன்ஸ்டால்மெண்ட் பேசிசில் மாச ஃபோன் பில்லிலேயே வந்திரும். மாசம் 3,000 ரூபாய். கால் சார்ஜ் இன்கமிங் 8.44 அவுட்கோயிங் 16.32. ரோமிங் எல்லாம் கிடையாது. நாம எந்த ஊருக்கு போறோம்ன்றதையும், எந்த நாட்களில் அங்கே இருப்போம்ன்றதையும் ஒரு லெட்டர் எழுதி கொடுத்திட்டா அந்த ஊரில், அந்த நாளில் நம்ம ஃபோன் வேலை செய்ய ஏற்பாடு செய்வாங்க. அம்புட்டு தான்! ஆனா அதுவே பெரிய விஷயமா இருந்தது.

ஒரு முறை முதலாளி வீட்டிலேயே ஃபோனை வெச்சிட்டு வந்துட்டார். அதை எடுத்துவர சொன்னபோது நான் அடைந்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது. முதல் முதலில் அந்த ஃபோனை என் சட்டை பாக்கெட்டில் பத்திரமாக வெச்சிகிட்டு (விழுந்திருமோ?) சைக்கிள் மிதிச்சிட்டு கடைக்கு வந்த பரவசம் இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு.

காலங்கள் ஓடிச்சு, நானும் பல கம்பெனிகள் மாறி, மெல்ல மெல்ல வளர துவங்கினேன். 2002ம் வருஷம் நான் முதல் முதலில் எனக்குன்னு ஒரு செல்ஃபோன் வாங்கினேன். எனது தோழி தான் உபயதாரர். புது செல்ஃபோன் வாங்க வக்கிலாத காரணத்தால், மோட்டோரோலா T190 ஃபோனை செகண்ட்சில் வாங்கினேன். ரொம்ப நாளா வெச்சிருந்தேன் அந்த ஃபோனை. முதல் முதலில் வாங்கின ஃபோன் என்கிற செண்டிமெண்ட் வேறே. ஏர்டெல் (ஸ்கைசெல் நிறுவனத்தை கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்துகிட்டேயிருந்து பாரதி கம்யூனிகேஷன்ஸ் வாங்கி ஏர்டெல்ங்கற பேரில் சேவை செய்ய ஆரம்பிச்சிருந்தாங்க அப்போ!) கனெக்சனுடன் அந்த போன் 2004 வரைக்கும் என்கிட்டே இருந்தது. பல ஊர்களுக்கு அந்த ஃபோனை எடுத்து போயிருக்கேன். ஆனா பேட்டரி சரியா நிக்காததால அந்த ஃபோனை கொடுத்துட்டு ஒரு கலர் மொபைல் வாங்கணும்னு ஐடியா வந்துச்சு.

இன்னொரு நண்பர் தயவில் இன்ஸ்டால்மெண்டில் சீமென்ஸ் A65 ஃபோன் வாங்கினேன். கலர் மொபைல், WAP வசதி இருந்தது, அதுவே பெரிய விஷயமா தெரிஞ்சுது எனக்கு. நல்ல நெட்வர்க் இழுக்கும் திறன். ஒருமுறை பஸ்சில் நெல்லைக்கு போயிட்டு இருக்கும்போது விருதுநகர் தாண்டி பொட்டல் காட்டில் வண்டி போயிட்டு இருக்கு. பக்கத்து சீட் நண்பரின் நோக்கியா போனில் சுத்தமா சிக்னல் இல்லை. ஆனால் என் சீமென்சில் தென்காசி டவர் காட்டிட்டு இருக்கு! அப்புறம் தான் தெரிஞ்சது, நெட்வொர்க் கம்மியூனிகேசனின் முக்கிய நிறுவனம் சீமென்ஸ்னும், எல்லாருக்குமே செல்போன் டவர்ல இருக்கிற உபகரணங்களையெல்லாம் அவங்க தான் அமைச்சு கொடுத்துட்டு இருக்காங்கன்னு.

எனக்கு ரொம்ப ஆச்சரியமான விருப்பமான விஷயம், எந்தெந்த பகுதிக்கு பயணிக்கிறோமோ அந்தந்த பகுதியின் பெயர் ஃபோனில் வருவது. பல பயணங்களில் தான் ஓஹோ இந்த ஊரு இங்கே தான் இருக்காஆச்சரியப்படுத்தின பல பல ஊர்களை பார்த்தேன். படிச்சிருப்போம், முக்கியமான ஊர்கள் நினைவில் இருக்கும் ஆனா செல்ஃபோன் பார்த்து தான், அட இங்க தான் இருக்கான்னு வியந்ததெல்லாம்.

ஒரு கட்டத்தில் கட்டணங்கள் கட்டுபடியாகலை. சென்னைக்கு வெளியே வந்தா ரோமிங்! அதுக்கு தனியா 6 ரூபாய் சார்ஜ்! இந்த சமயத்தில் ஏர்டெலில் ஒரே ஸ்டேட் ஒரே ரேட்னு ஒரு ஸ்கீம் கொண்டுவந்தாங்க. அதாவது நம்ம சிம்முக்கு ரெண்டு நம்பர் கொடுப்பாங்க. சென்னைக்கு ஒரு நம்பர். தமிழகத்துக்கு இன்னொரு நம்பர். (சென்னை தமிழகத்தின் பாகம் அல்ல ன்னு அவங்க விளம்பரத்தில் வரும் வாசகம் உறுத்தலா இருக்கும்!) இந்த ரெண்டு நம்பருக்கும் சேர்த்து ஒரே சிம். ரெண்டு நம்பரில் எதில் கூப்பிட்டாலும் நமக்கு கால் வரும்! ஆனா தமிழக நம்பருக்கு வரும் கால்கள் இலவசம். சென்னை நம்பர் எனில் ரோமிங் கட்டணம். 

இந்த குழப்பமான சிஸ்டத்தை புரிஞ்சுக்கறதுக்குள்ளேயே தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்பு அமைச்சரா ஆனாரு! ஒரே மாநிலத்துக்குள்ளே ரோமிங் எதுக்கு? ன்னு ஒரு கேள்வியை கேட்டு, சட்டத்தையே மாத்தி, மும்பை, கல்கத்தா, சென்னை நகரங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் இருந்துவந்த ரோமிங் சார்ஜை ரத்துசெஞ்சு, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம்னு அறிவிச்சாரு. இதுக்கும் சி.ஏ.ஜி தத்தக்கா பித்தக்கான்னு குதிச்சாங்க. அரசுக்கான வருவாய் இழப்பு, சட்ட மீறல்னெல்லாம் பேச்சு வந்தது. ஆனா தயாநிதி மாறன் உறுதியா இருந்து மக்கள் வசதிக்கான அந்த சட்டத்தை அமல் படுத்தினாரு! அதனால் நான் தப்பிச்சேன். ஒரே நம்பரை வெச்சு, தமிழகம் முழுவதும் ஹாயா சுத்த ஆரம்பிச்சேன்.

சீமென்ஸ் போனிலும் பேட்டரி பிராப்ளம் வந்ததால் பெரும்பான்மை கருத்துக்கு உட்பட்டு, நோக்கியாவையே வாங்கிக்கலாம்னு முடிவு செஞ்சு, இன்னொரு நண்பர் புண்ணியத்தில் நோக்கியா 3120 போன் வாங்கினேன். இதுவும் கலர் மொபைல், இண்டெர்நெட் வசதி இருந்தது. ஆனாலும், புளூ டூத், கேமரா, எல்லாம் இல்லையேன்னு ஒரு ஏக்கம். இந்த போனுக்கே 6,500 ஆச்சு, இதுக்குமேல ஆசைப்படக்கூடாதுன்னு அடக்கிக்கிட்டேன்.

ஸ்பெக்ட்ரமின் இரண்டாம் ஒதுக்கீட்டில் சென்னைக்கு புதுசா பி.ஸ்.என்.எல் & ஹட்ச் போன்கள் வந்தது. பி.எஸ்.என்.எல் சிம் வாங்கணும்னு ஒரு வெறி வந்துச்சு. காரணம் எல்லா ஊரிலும் கவரேஜ், கால் கட்டணங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. ஆனா சிம் கிடைக்கிறது கஷ்டம். 

மயிலாபூரில் ஒரு நண்பர் இருந்தார். அவரது ஆலோசனையின் படி, மந்தைவெளி எக்சேஞ்சில் காலை 5 மணிக்கே போயி லைனில் நின்னேன். அப்பவே நான் 70வது ஆளோ என்னமோ. ஒருவழியா லைனில் நின்னு, காத்திருந்து, மதியம் 3 மணி சுமாருக்கு சிம் வாங்கினேன். அது கிடைச்சதே அதிசயமான விஷயம்ன்றதால, அதை கொண்டாட 2 நாள் லீவு போட்டு ஊரு சுத்தினேன். ஆனா, பி.எஸ்.என்.எல் நிறுவனம் என் கழுத்தை அறுத்திருச்சு. எந்த ஊருக்கு போனாலும், ஃபுல்லா டவர் கவரேஜ் இருக்கும். ஆனா கால் பண்ணினா போகாது. நமக்கு யாராவது கால் பண்ணினாலும் கூட தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்னு தான் மெசேஜ் வந்திட்டு இருக்கும். 2005 பிப்ரவரியில் ஒரு முக்கியமான அவசர செய்தியை என்கிட்டே சொல்லமுடியாம எங்கப்பா பட்ட கஷ்டத்தின் காரணமா, பி.எஸ்.என்.எல்லை தூக்கி தூரப்போட்டுட்டு, மீண்டும் நம்பிக்கையான ஏர்டெல்லுக்கே வந்தேன்.

ஏர்டெல்லில் என்ன பிரச்சனைன்னா, கண்டினியூயஸ் கால் சார்ஜு ஜாஸ்தி கவரேஜ் இருக்காது. சென்னையிலிருந்து சேலத்துக்கு ரயிலில் போறதா இருந்தா, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை மாதிரியான முக்கிய டவுன்களில் மட்டும் போன் எடுக்கும். ஜோலார் தாண்டினா சேலம் வரைக்குமான காட்டு வழியில் சுத்தமா டவர் இருக்காது. கேம்ஸ் மட்டும் தான் ஆடிட்டு இருக்கவேண்டி இருக்கும்.
இருந்தாலும் வேறு வழியில்லாம ஏர்டெல்லையே கட்டி அழவேண்டி இருந்ததுக்கான காரணம், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில், குறிப்பா வட மாநிலங்களில் நல்ல நெட்வர்க் கவரேஜ் இருக்கும். நான் அடிக்கடி பயணிக்கறதால் ஏர்டெல்லிலேயே இருந்தாகவேண்டிய நிர்ப்பந்தம்.

இதுக்கிடையில் வேறொரு காரணத்துக்காக எல்.ஜி B2070 போன் வாங்கினேன். அதில் மோடம் சிறப்பா இருக்கும்ன்றதால், வீட்டில் உள்ள லேப்டாப்பில் நெட் பிரவுசிங் செய்ய சிறப்பான போன். அதை வெறுமனே நெட்டுக்காக மட்டுமே பயன்படுத்தினேன். எல்ஜி போன்  ரொம்பவே உபயோகமா இருந்தது, நல்லா நெட்வர்க் இழுக்கும், தெளிவான சவுண்ட், டிசண்டான லுக்குன்னு கலக்கல். கும்பகோணம் ரயில்நிளையத்தில் வெச்சு அது தொலைஞ்சு போச்சு. அதுக்கப்புறம் சின்ன சின்னதா சில நோக்கியா  போன்களும்  சில சைனா போன்களும்  வாங்கினேன் அடிக்கடி போனை தொலைக்கிற ஆள் நான். அதனால விலை கம்மியா அதே சமயம் நிறைய வசதிகள் இருக்கிற போனா பார்த்து வாங்கினேன். 2007 லேயே S 30 னு  ஒரு சைனா போன், டுயல் சிம், டச், கேமரா, புளு டூத் னு வாங்கியிருக்கேன். என்னுடைய பல போன்களை என் சில சொந்தக்காரங்களும் சில நண்பர்களும் வெச்சிருக்காங்க, நினைவு சின்னம் மாதிரி. எத்தனை போன் வாங்கினாலும் போன்கள் மீதான ஆசை குறையவே இல்லை விதம் விதமா வசதிகளை தேடி தேடி போன் வாங்குற பழக்கம் மட்டும் திரவே இல்லை.      

நவீன ஸ்மார்ட் போன்கள் வந்தபோது, எல்லாரையும் போல எனக்கும் ஸ்மார்ட் போன் வாங்கும் ஆசை வந்தது. எல்லா வெப்சைட்டிலும் ரிவியூ பண்ணி அலசி ஆராய்ந்து என் பட்ஜெட்டுக்கும், என் தேவைக்குமான கான்பிகரேசனில் ரெண்டு ஃபோனை ஷார்ட்லிஸ்ட் செஞ்சு வெச்சேன். ஒண்ணு நோக்கியா C5-03, இன்னொண்ணு சாம்சங் காலக்ஸி பாப் (2011 ஜூனில்). இதில் எதை எடுக்கிறதுன்னு ஒரே குழப்பம். தி மொபைல் ஸ்டோர் கடையின் சேல்ஸ்மேனின் ஒபினியனை(!) கேட்டதில் சாம்சங் ஆண்டிராய்டுன்னு ஒரு புது ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேரை யூஸ்பண்றாங்க சார். அது எந்த அளவுக்கு சேஃபுன்னு தெரியாது. நோக்கியாவின் சிம்பியன் ஓ எஸ்சை நம்பி வாங்குங்கன்னு ரெகமண்ட் செஞ்சதால நோக்கியாவையே வாங்கினேன். சாம்சங்கை விட (3.2 MP) சிறந்த கேமரா (5MP) இருந்ததால் எனக்கும் ஓரளவுக்கு ஓகேவா இருந்தது.

ஆனா ஆண்டிராய்டு இந்த போடு போடும்னு அப்போ எனக்கு தெரியலை. சில மாசத்துக்கு முன்னே செம்ம கடுப்பில் அந்த ஸ்டோருக்கு போயிப்பார்த்தேன், ஆனா அந்த சேல்ஸ்மேன் ரிசைன் பண்ணிட்டாராம். தப்பிச்சாரு!
இப்போதைக்கு, என் எல்லா தேவைக்கும் இந்த போன் போதுமானதா இருக்கு. ஆனா, சத்தியமா நானெல்லாம் செல்ஃபோன் வெச்சுக்குவேன், அதிலேயே மெயில் செக் பண்ணுவேன், ஃபோட்டோ எடுப்பேன், பாட்டு கேப்பேன், இண்டர்நெட் பிரவுஸ் பண்ணுவேன்னு கனவு கூட கண்டதேயில்லைங்க!

கனவு கண்டா தான் பலிக்கும்ன்றது எல்லாம் சும்மா! 

Wednesday, July 18, 2012

தமிழக ஊடகங்கள்

டகங்கள் தான் ஒரு நாட்டின் தலையெழுத்தை பல முறை மாற்றிப்போட்டிருக்கிறது. பத்திரிக்கை தர்மம் என்பது நேர்மையான விமரிசனங்கள், குறைகளை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்கும் திறன், செய்திகளை செய்திகளாகவே தருவது என்பனவாக தான் பல காலம் இருந்தது.


டி.ஆர்.பி, சர்குலேஷன், நம்பர் 1 போன்ற காரணிகள் எப்படியாவது பரபரப்பான செய்திகளை கொடுத்து முன்னணிக்கு தங்கள் நிறுவனத்தை கொண்டு வந்துவிடவேண்டும் என்கிற வெறிக்கு அஸ்திவாரமிட்டது. எந்த ஒரு செய்தியையும் முதலில் தருவது தான் பிரபலமாவதற்கான முறை என்றிருந்தது மாறி, இப்போது செய்திகளை உருவாக்குவது, செய்திகளை திரிபாக்குவது போன்ற முறைகளால் முன்னணியை நோக்கி செல்ல துவங்கி இருக்கின்றன பத்திரிக்கைகள். 

ஊடகம் என்பது பத்திரிக்கைகள், இணைய செய்தி தளங்கள், சமூக வலை தளங்கள், தொலைகாட்சி செய்திகள் என பலவும் அடங்கியதால் நாம் பொதுவாக ஊடகம் என்றே இந்த பதிவில் இனி சொல்வோமாக!

இந்திய அளவில் அரசியலை தீர்மானித்த ஊடகங்கள் குறித்த பல விஷயங்களை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். ஆந்திராவில் ஈநாடும், கேரளத்தில் மாத்ருபூமியும், தமிழகத்தில் தினத்தந்தியும் ஒரு காலகட்டத்தில் அரசையே தீர்மானிக்கின்ற சக்திகளாக இயங்கின.

இன்றைய காலகட்டம் மிக விசித்திரமாக இருக்கிறது. நான் தமிழகம் சார்ந்த ஊடகங்களை மட்டுமே இங்கே விவாதிக்க விரும்புகிறேன் என்பதால் பிற தேசிய ஊடக நிகழ்வுகளை விட்டுவிடுவோம்!

தமிழகத்தில் அரசியல் சாராத நேர்மையான செய்திகளை செய்தியாக தருகிற பத்திரிகைகள் மிக மிக சொற்பமானவை. மற்றபடி, பெரும்பாலான ஊடகங்கள் ஏதேனும் ஒரு சார்பு நிலை கொண்டவையாக இருப்பதால், அது தொடர்பாகவே செய்திகளை தருகின்றன.

80களில் ஒரு கேலிசித்திரம் வெளியிட்டதற்காக அப்போதைய அதிமுக அரசின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஆனந்த விகடன், ஜெ தலைமையிலான அதிமுக அரசால் கடுமையாக நடத்தப்பட்ட நக்கீரன், ஜூனியர் விகடன், ஹிந்து போன்ற பத்திரிக்கைகள் ஆகியன இப்போதும் சுதந்திரமான கருத்துக்களை வெளியிடமுடியாமல் தான் இருக்கிறது.
ஹிந்து பத்திரிக்கை மிக தீர்க்கமான கட்டுரைகளை வெளியிட்டு நேர்மைக்கு பெயரெடுத்த பத்திரிக்கை. இந்தியாவின் மனசாட்சி என காந்தியடிகளாலேயே புகழப்பட்ட பத்திரிக்கை. ஆனால், ஒரு கட்டுரைக்காக, ஜெ, ஹிந்தி ஆசிரியை குழுமத்தின் மீதே வழக்கு பதிவு செய்து, வீடுபுகுந்து மிரட்டி, துவம்சம் செய்து, ஐந்து ஆசிரியர்களையும் பெங்களூரு வரை துரத்தி சென்று ஒரு தீவிரவாதியை கைது செய்வதை போல கைது செய்து கொண்டுவந்ததற்கு பின் மொத்தமாக ஆடி தான் போய்விட்டது.

அதே போலவே, பத்திரிக்கையாளர்கள் ஊர்வலத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அரச பயங்கரவாதத்தை ஏவி மொத்தமாக போட்டு தாக்கியதில், ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்துக்கும் ஜெ. என்றாலே சிம்மசொப்பனம் என்றாகிவிட்டது.

இவையெல்லாம் ஒரு புறம்.

இன்னொரு மிக முக்கியமான பிரச்சனை, செய்தியாளர்கள். பாரம்பரியமான பத்திரிகையான விகடன் குழுமத்தில் கூட, இப்போது முறையாக தமிழக வரலாறு தெரிந்திராத, சுய சிந்தனை அற்றுப்போன, முன்முடிவுகளுடனான இளம் செய்தியாளர்களின் கட்டுரைகளே வெளிவர துவங்கி இருக்கின்றன. செய்திகளும் கட்டுரைகளும் சுவாரஸ்யமாகவும், சுவையாகவும், பரபரப்பாகவும் இருக்கும் அளவுக்கு உணமையாக இருப்பதில்லை என்பதில் என்னை போன்ற பாரம்பரிய விகடன் வாசகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகின்ற ஒன்று. நான் விகடன் என குறிப்பிட்டு சொல்ல காரணம், விகடன் தான் மிக நேர்மையான பத்திரிகையாகவும், மிகுந்த அரசியல் ஞானமுள்ள செய்தியாளர்களைகொண்டதாகவும் இருந்து வந்தது என்பதால். விகடனின் நிலையே இப்படியென்றால், மற்ற பத்திரிகைகளை பற்றி நீங்களே யோசித்துக்கொள்ளலாம்.

செய்தி திரிபு, அதனால் ஏற்படுத்தப்படும் பரபரப்பு என்பது தமிழகத்தின் சமீபத்திய பத்திரிக்கை வியாதியாகிவிட்டது. வியாபார நோக்கில் வெளியிடப்படும் இத்தகைய செய்திகள் பல அரசியல் மாற்றங்களையே ஏற்படுத்தி இருக்கின்றன. செய்தியாளர்கள் கேட்கும் பல கேள்விகள் உள்நோக்கத்துடனும், குதர்க்கமாகவும் கேட்கப்பட்டு வருகின்றனவேயன்றி, முன்பை போல, பேட்டியாளர்களின் பதில்களை கவனித்து அதன் அடிப்படையிலான ஆக்கப்பூர்வமான கேள்விகளாக அவை இருப்பதில்லை. 

இதற்கு மிக ச்மீபத்திய உதாரணம், இரு தினங்களுக்கு முன்பு கலைஞர் அவர்களை டெசோ விஷயமாக பேட்டிகண்ட பத்திரிகையாளர்களின் குதர்க்க திரிபுகள். அந்த பேட்டியை முழுமையாக படித்தவர்களுக்கு தெரியும், தலைப்பிற்கும் பேட்டிக்கும் சம்மந்தமில்லை என்பது. மாநாட்டில் விவாதத்திற்கு பின்பு தான், கலந்துகொள்ளும் பிரதிநிதிகளின் கருத்துக்களையெல்லாம் கேட்டு தான் மாநாட்டு தீர்மானம் இறுதியாக்கப்படும் என  தெளிவாக சொல்லியிருப்பதை, முன்முடிவுகளின் அடிப்படையில், இப்போதைக்கு தீர்மானம் இல்லை, முக பல்டி என பரபரப்பு தலைப்பு கொடுத்து செய்தியாக்கியது ஒரு மிக சிறு உதாரணம். இது போல பலபல தலைவர்களின் பல பல பேட்டிகள் தவறாக செய்தியாக்கி மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டு, பேட்டியின் உண்மையான சாரம்சத்தை மறைத்து, பத்திரிகையின் / பேட்டியெடுப்பவரின் தனிப்பட்ட புரிந்துகொள்ளலும், முன்முடிவுகளுமே மக்களின் கருத்தாக திணிக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்களால் நொந்து தான், தமிழக ஊடஙகங்களுக்கு பேட்டியே கொடுக்கமாட்டேன் என ஜெ. ஒரு முறை தெளிவாக அறிவித்தார். இப்போதும் தமிழக ஊடகங்களிடமிருந்து அவர் விலகியே இருக்க காரணம், குறுகிய மனப்பான்மையுடன், செய்தியை தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் திரித்து வெளியிடும் தமிழக ஊடகங்களின் பழக்கம் தான்!

செய்தியின் உள்ளீடுகளுக்கு சற்றும் சம்மந்தமற்ற தலைப்புக்களை பரபரப்புக்காக வைத்து வாசகனை முட்டாளாக்கும் புதிய யுக்தி, கடந்த 10 ஆண்டுகளாக தமிழக பத்திரிக்கைகளில் காணலாம். பெரும்பாலான வாசகர்கள், தலைப்பை மட்டுமே படிப்பவர்களாக இருப்பதால், தலைப்பை வைத்தே பல விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதால், அப்படியான பரபரப்பு தலைப்புகள் வைக்கப்படுகின்றன.


யூகங்கள், கிசுகிசுக்கள் போன்றவைகளால் பல அரசியல் மாற்றங்களை கொண்டுவந்த பெருமையும் தமிழக ஊடகங்களுக்கு உண்டு. ஊடகங்களின் தவறான திரிபுகளால் தான் மதிமுக என்கிற ஒரு இயக்கமே தோன்றியது என்பது பலரும் அறிந்த ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு. மத்திய அரசிடமிருந்து வந்த செய்தியை, ஜெ. முறைப்படி கடிதம் மூலம் கருணாநிதிக்கு அனுப்ப, அதை பற்றி கேள்வி கேட்ட  பத்திரிகையாளர்களிடம் அந்த கடித விவரத்தை விளக்கின கருணாநிதியின் பேட்டியை, தன்னை கொலை செய்ய வைகோ முயற்சித்தார் என கருணாநிதி சொல்லியதாக செய்தி வெளியிட்டு தமிழக அரசியலின் போக்கையே மாற்றிய பெருமை ஊடகங்களை தான் சாரும். (பின்னர் உண்மை தெரிந்து வைகோ கலைஞருடன் நட்பு பாராட்டியது தனி கதை!)

இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆளும்கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் சகஜமாக பழகிவரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அது சாத்தியப்படாமல் போனதில், பரபரப்பு வேண்டி தவம் கிடக்கும் தமிழக ஊடகங்களும் ஒரு காரணி என்பதை யாரும் மறுக்கவியலாது. சாதாரணமான சந்திப்புக்களுக்கும் கூட, உள்நோக்கம் கற்பிப்பதும், யூகமான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு பத்திரிக்கை விற்பனையை அதிகப்படுத்துவதும், பின்னர் பெட்டி செய்தியில் மன்னிப்பு கேட்பதும் தமிழக ஊடகங்களின் வாடிக்கையாகி போனது.

பேட்டியெடுப்பவரின் சார்புநிலை, முன்முடிவுகள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் போன்றவையே அந்த பேட்டி செய்தியாகும்போது வெளிப்படுகின்றன.. அந்த செய்திகளை படிக்கும் லட்சக்கணக்கானவர்கள், பேட்டியெடுப்பவரின் மனநிலை அடிப்படையிலேயே செய்திகளை புரிந்துகொள்ளுகிறார்களே தவிர, பேட்டி கொடுத்தவரின் கருத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை. 

தமிழக ஊடகங்கள், எப்போது தங்கள் சொந்த கருத்துக்களை மக்கள் மீது திணிக்காமல், செய்தியை செய்தியாக தர பழகிக்கொள்ளுமோ தெரியவில்லை! அதற்கு முன்பாக, சமூக, அரசியல் பற்றி தெளிவான சிந்தனையுள்ள, சுயமாக சிந்திக்கும் திறனுடைய, முன்முடிவுகளற்ற, சார்புநிலையற்ற செய்தியாளர்களை பத்திரிகைகள் தங்களுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்! நடக்கிற காரியமா அது?

Monday, July 16, 2012

மூன்றாம் உலக போர் - வைரமுத்து நூல் வெளியீட்டு விழா


போன வாரம் என் வீடு தேடி வந்த வைரமுத்து நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் கிடைத்தவுடனே தீர்மானித்துவிட்டேன் என்ன ஆனாலும் ஜூலை 13 மாலை விழாவில் கலந்துகொள்வது என்று. கடைசியாக பெய்யென பெய்யும் மழை நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றது. அதன் பின் இப்போது தான்.

எனக்கும் வைரமுத்து அவர்களுக்குமான உறவு பற்றிய சிறு பதிவு ஏற்கனவே வைரமுத்துவும் நானும் என  எழுதியிருப்பது உங்களுக்கு தெரியும். அதனால் அதை பற்றி விரிவாக செல்லாமல் நாம் நேராக விழாவுக்கு சென்றுவிடுவோம்.

சென்னையில் இன்றைய தேதிக்கு இருக்கிற ஒரே பெரிய சிறந்த விழா அரங்கம், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் அருகிலுள்ள காமராஜர் அரங்கம் மட்டும் தான். அங்கே தான் விழா. இத்தனை பெரிய நகரத்தில் இன்னும் சில அரங்கங்கள் அமைந்திருந்தால் நன்றாக இருக்கும். கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு, புதிய அரங்கம் கட்டப்படும் என  கடந்த ஆட்சியில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டதோடு சரி. வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.
விழா மாலை 6 மணிக்கு. நான் 5 மணிக்கெல்லாம் விழா அரங்கத்தில் அமர்ந்துகொண்டேன். கொஞ்சம் வசதியான பகுதியாக பார்த்து, மேடை முழுமையாக தெரியும் வகையில் அமர்ந்துகொண்டேன். இதுபோன்ற விழாவில் ஒரு பெரிய சங்கடம், தொலைகாட்சி காரர்கள். மேடைக்கு எதிரே இவர்களும் மேடை போட்டு ஒரு பத்துபேர் படம் எடுப்பதற்காக நின்றுகொண்டு எல்லாரையும் சங்கடப்படுத்துவார்கள். அதனால் பக்கவாட்டான பகுதியில் அமர்ந்துகொண்டது, விழாவை முழுமையாக ரசிக்க உதவியது.


அரங்கம் நிரம்பிவழிந்தது. பலரும் நின்றுகொண்டிருந்தனர். அது தவிர அரங்கத்துக்கு வெளியே ஒரு பெருங்கூட்டமே செவி வழியாக விழாவை கவனித்துக்கொண்டிருந்தனர். இந்த நூல் புதிதாக நூல்வடிவத்தில் வெளியிடப்படுகிறது என்றாலும் சமீப காலம் வரையும் ஆனந்தவிகடன் இதழில் தொடராக வந்து அனைவராலும் படிக்கப்பட்ட நூல் தான். ஏற்கனவே படித்து முடித்த ஒரு நூலுக்கான வெளியீட்டு விழா என்றபோதும் இத்தனை ஆரவாரமான கூட்டம் எனக்கு ஆச்சரியத்தை தந்தது. வந்திருக்கும் கூட்டம், என் கணிப்புப்படி, ஐவகையினர். 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் சார்ந்த இயக்கத்தினர் மற்றும் அவரது இலக்கிய பேச்சை கேட்க வந்தவர்கள் முதல் வகையினர். இதுபோன்ற விழாக்களில் பெரும்பாலும் அவர் அரசியல் பேசுவதில்லை. முழுக்க முழுக்க தமிழ் மணக்கும் இலக்கிய உரையாக அது அமையும். அப்படி பேசக்கூடியவர்கள் என இன்று மிக சிலர் தான் இருக்கிறார்கள். இரண்டாவது வகையினர், கலைஞானி கமலஹாசன் அவர்களது ரசிகர்கள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்துவிடவேண்டும் என்கிற துடிப்பில் வந்தவர்கள். 

மூன்றாவது வகையினர் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது வாசகர்கள். ஜெயகாந்தன் பெயர் சொல்லப்பட்டபோதெல்லாம் எழுந்த பலத்த ஆரவாரம் பிரமிப்பை தந்தது. எழுதுவதை நிறுத்தி 20 ஆண்டுகள் கழிந்த பின்னும் அவர் மீதான ஈர்ப்பு, எல்லோருக்குமே சற்றும் குறையாமல் இருக்கிறது. மக்களின் மனதில் புகழ் மரியாதையுடன் இருப்பதற்காக கலைஞர், கமல், வைரமுத்து என பலரும் தினம் தினம் எதையாவது செய்துகொண்டே இருக்கவேண்டிய சூழலில், எல்லாவற்றையும் நிறுத்திவிட்டபின்னும் மக்களின் மன சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துகொண்டிருப்பவர் ஜெயகாந்தன் என்பது மற்றுமொருமுறை நிரூபணம் ஆனது. அதற்கு காரணம் எவர்க்கும் பணியாத அவரது நேர்மையான வாய்மை என்றே நான் கருதுகிறேன். நாலாவது வகையினர் வைரமுத்துவுக்காக வந்து குவிந்தவர்கள். ஐந்தாவது வகையினர் தான் மிக மிக சொற்பமானவர்கள். இந்த நூலுக்காக வந்தவர்கள்.


16 முறை, வைரமுத்துவின் நூலை வெளியிட்டவர் கலைஞர் என்பது ஒரு மிகப்பெரிய பெருமை. ஒரு எழுத்தாளனின் நூலை ஒரு தலைவன் தொடர்ச்சியாக வெளியிட்டிருப்பது இது தான் இத்தனை பெரிய நிகழ்வாக இருக்கக்கூடும்.

சரியாக 6 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விழாவில் முதல் நிகழ்ச்சியாக, இந்த நூல் வெளியாவதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கான மரியாதை செய்யல். கலைஞர் அவர்களது கரங்களால் அவர்களுக்கு சிறப்புகள் செய்யப்பட்டன. ஓவியர், வரைகலை நிபுணர், வெளியீட்டாளர், விளம்பரம் செய்தவர் என  இந்த் நூலுக்கு துணையாக இருந்த ஒவ்வொருவரும் முறையாக கவுரவிக்கப்பட்டனர்.

பின்னர் ஒரு குறும்படம் திரையிடப்பட்டது. இந்த நூல் புவி வெப்பமயமாதல் உலகு எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்கள் அழிந்துவரும் விவசாயம் நீர் மேலாண்மை ஆகியன குறித்து பேசுகிறது. எனவே அது தொடர்பான ஒரு குறும்படம். உலகின் பல பகுதிகள் இந்த புவி வெப்பமயமாதலால் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன, அதன் விளைவுகள் என்னென்ன, இனி உலகு எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும், அதை நாம் எப்படி தவிர்க்கலாம் என்பதை பற்றி மிக சிறப்பாக அந்த குறும்படம் சொல்லியது. மிக சிறப்பான காட்சி தேர்வு, மற்றும் இயக்கம். அதிலும் பின்னணி இசை மகத்தானது. குறும்படம் முடிந்தும் சில நொடிகள் வரை நிச்சலனமாக இருந்தது அரங்கம். ஒவ்வொருவருக்கும் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பயங்கரம் லேசாக உறைக்க தொடங்கியிருக்கவேண்டும்.

இந்த நூல், ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளியானதை படித்த வாசகர்கள் 10 பேர், இந்த நூல் தொடர்பான தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். விஜய் டிவியின் கோபிநாத், ஒரு பள்ளி மாணவி, ஒரு பரத நாட்டிய கலைஞர், ஒரு பேராசிரியர் ஆகியோரும் அதில் அடக்கம். அவரவர் பார்வையில் இந்த நூல் எப்படி இருந்தது என்பதான வாசகர் விமரிசனமாக அது அந்த மேடையில் அரங்கேறியது. அதற்குபின், நூல் வெளியிடப்பட்டது.

முதல் வாழ்த்துரையாக கமலஹாசன் அவர்கள் பேசினார். அவர் பேச வந்ததை எல்லாம் அந்த 10 பேரும் பேசிவிட்டார்கள் என்கிற வருத்தத்தை தெரிவித்துவிட்டு, பொதுவாக பேசிவிட்டு அமர்ந்தார். குறிப்பிடத்தக்க விஷயங்கள் என எதுவும் இல்லை.

பின்னர் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பேசினார். எதற்கும் பணியாத அவரது நேர்மையான விமர்சனம் இங்கேயும் கூர்மையாக தெறித்தது. உலகம் அபாயத்தில் இருக்கிறது, அழிந்துவிடும் என்பதெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வருவது தான். ஆனால் இந்த உலகம் அழியாது. இயற்கைக்கு தன்னை சமநிலைப்படுத்தும் ஆற்றல் உள்ளது. எனவே இதெல்லாம் அனாவசிய பயம். வியாபாரத்துக்கு வேண்டுமானால் பயன்படும் என்பது போல நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல பேசிவிட்டு அமர்ந்தார். அந்த கம்பீரம், அந்த துணிச்சல், அந்த நேர்மை என்னை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அவரது கருத்துக்களுடன் நான் முழுமையாக உடன்படுவதை உணர்ந்தேன். மிக சரியான விமர்சனம் அது தான். சிங்கங்கள் எப்போதும் சிங்கங்களாகவே வாழ்ந்து வரும் என்பதை நிரூபித்தார் ஜெயகாந்தன்.

சற்று நேர சலசலப்புக்கு பின், கலைஞர் உரையாற்றினார். விழாப்பேருரை என்று அது சொல்லப்பட்டு இருக்கவேண்டும். அவ்வளவு விரிவாக அந்த நூலை பற்றி பேசினார். 89 வயதில், தமிழகத்தின் மக்களுக்கு இந்த ஆட்சியாளர்களால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் உபாதைகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் ஒரு முழுநேர அரசியல் தலைவருக்கு, இப்படி நூல் படிக்கும் அவகாசம் எங்கேயிருந்து வந்தது என வியக்காத நாளில்லை. நேர மேலாண்மையை அவரிடம் கற்றுக்கொள்லவேண்டும். அரசியல், கட்சி நிர்வாகம், மக்களுக்கான போராட்டம், தமிழக மக்களுக்காக மத்திய அரசுடன் நாள்தோறும் நடத்திவரும் ஆலோசனைகள், தேசிய நிகழ்வுகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு தலைவர்களுடனான தொடர்புகள், நாள் தோறும் தமிழகத்திலிருந்து வெளியாகும் அத்தனை பத்திரிகைகளும் படித்து அவற்றுக்கெல்லாம் உரிய பதில்கள் அனுப்புவது என இந்த வயதிலும் ஓய்வின்றி சுழலும் அவருக்கு, நூல் படிப்பதற்கும், அதை நினைவில் வைத்து பேசுவதற்கும் கூட நேரம் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம் தான். ஜெயகாந்தன் அவர்களது விமர்சனத்தை பற்றி எதுவும் சொல்லாமல், நேரடியாக முழுமையாக் நூல் குறித்த விமர்சனத்தை மட்டும் சிறப்பாக சொல்லி முடித்தார்.

இறுதியாக ஏற்புரை வழங்கவந்த வைரமுத்து, உணர்ச்சி பிழம்பாக வெடித்தார். அவரால் ஜெயகாந்தனின் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது பேச்சில் பட்டவர்த்தனமாக தெறித்தது. மனதை பக்குவப்படுத்தி பொதுவிழாக்களில் எப்படி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை வைரமுத்து அவர்கள் கலைஞரிடமிருந்து கற்றுக்கொள்வது நல்லது. ஜெயகாந்தனின் குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு, உலகம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்கள் பற்றிய விரிவான தகவல்களை தெளிவாக எடுத்துரைத்தார். இயற்கையை நாம் எப்படி எல்லாம் அழித்திருக்கிறோம், அதன் விளைவுகள், விவசாயம் என்பதை பற்றியெல்லாம் மிக மிக விரிவாக பேசிய அவரது பேச்சு ஒவ்வொருவரும் அவசியம் அறிய வேண்டிய ஒன்று. மானுட சமூகத்துக்கான அவரது அந்த பேச்சையே ஒரு சிறு நூலாக வெளியிட்டால் மிக பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து!
இயற்கையை கொண்டு சுகவாழ்வு வாழவேண்டிய மனிதன், இயற்கையை கொன்று சுக வாழ்வு வாழ்கிறான்; பிறந்ததில் இருந்து இறப்பு வரையும் மனிதனுக்கு எல்லாமே மரம் தான் மரம் தான் மரம் தான், அதை ஏனோ அவன் மறந்தான் மறந்தான் மறந்தான்; விவசாயிகள் மெல்ல மெல்ல விவசாயத்தை மறந்து நகரவாழ்வில் தஞ்சம் அடையும் நிலைக்கு நம் பொருளாதார கொள்கைகள் உள்ளது. விவசாயம் மெல்ல மெல்ல கார்பரேட் நிறுவனங்கள் கைக்கு சென்றுவிட்டு, பெட்ரோலை போலவே தக்காளிக்கும் அவர்கள் விலை நிர்ணயம் செய்யும் நாள் தொலைவிலில்லை; விவசாயத்தை காப்பாற்றுவதற்கான ஒரு இயக்கத்தை தோற்றுவித்து எல்லாருக்கும் உதவுவேன்; அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் அதை காப்பாற்றும் உணர்வையும் ஊட்டாமல் இந்த உலகை காப்பாற்ற முடியாது; போன்ற வைர வரிகளும் எண்ணற்ற கருத்துக்களுமாக கனல் தெறித்தது அவரது உரை வீச்சு.


இந்த நூலை படித்து சிலருக்காவது, இந்த உலகின் மீது அக்கறை வந்தாலே அது வைரமுத்துவின் வெற்றி தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. விழா முடிந்தபின், நூல் வாங்கியவர்களுக்கு நூலில் கையெழுத்திடும் நிகழ்ச்சி ஒரு மணிநேரம் நடந்தது.

என்னைப்பொறுத்தவரை, இதுவரை நடந்த நிகழ்வுகள் அளவுக்கு சிறப்பாக இல்லை என்றாலும், மிக முக்கியமான ஒரு விழாவாக இது அமைந்தது. கலைஞரின் உரையிலும் கமலஹாசனின் உரையிலும் நான் எதிர்பார்த்த பல விஷயங்கள் இல்லை என்பது ஒரு பெரும் ஏமாற்றம்.

அடுத்த விழாவுக்கான காத்திருத்தல் தொடங்கியது!

Tuesday, July 10, 2012

பயணிகள் கவனத்திற்கு – பாகம் 4

ற்கனவே தமிழக போக்குவரத்து கழகங்கள் குறித்த இந்த தொடரில் மூணு பாகம் முடிஞ்சு இது நாலாவது பாகம். இது வரை வந்த பாகங்கள் இங்கே ( Part-1 ; Part-2 ; Part-3 ) காணலாம்.


இவ்வளவு தூரம் தமிழக பஸ்களை பத்தி பேசிட்டு, மினி பஸ்களை பத்தி சொல்லலைன்னா எப்படி?

இந்த மினி பஸ் கான்சப்ட் ரொம்ப புதுமையானது. மக்கள் நலன் சார்ந்தது. ஆனா அந்த திட்டத்துக்கான உரிய முக்கியத்துவம் இதுவரைக்கும் கிடைக்கவேயில்லை. அரசு பஸ்கள் ஒரு குறிப்பிட்ட பகுதி / சாலை களில் தான் பயணிக்குது. அது எல்லா குக்கிராமங்களையும் இணைக்கறதில்லை. அதனால பல குக்கிராம மக்கள் சில கிலோமீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் பஸ்ரோட்டுக்கு வந்து பஸ் பிடிக்க முடிஞ்சுது. பெரிய பஸ்களை இயக்கமுடியாத சாலைகளும், சில கிராமங்களுக்கு முறையான சாலை வசதியே இல்லாத நிலைமையும் தான் போக்குவரத்து வசதி கிடைக்காம பல கிராமங்கள் தவிக்க காரணம்.

அப்படிபட்ட கிராமங்கள், புறநகர் பகுதிகளில் வசிக்கிற மக்களை அம்போன்னு விட முடியுமா என்ன? அதே சமயம், அந்த மாதிரி பகுதிக்கு ஒரு அரசு பஸ் இயக்குறதும் சாத்தியமற்றதா இருக்கு! என்ன செய்யலாம்னு யோசிச்சு, 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞரால் கொண்டுவரப்பட்டது தான் கிராமப்புற மினிபஸ் திட்டம்.

பஸ் வசதி இல்லாத பகுதிகளை, பஸ் வசதியுள்ள பகுதிகளுடன் இணைக்கிறது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அதனால் இந்த திட்டத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது. மொத்தமா 16 கி.மீ தூரத்துக்கு மட்டும் தான் இயக்கப்படணும். அதில் 4 கி.மீ தான் அரசு பஸ் செல்லும் வழித்தடத்தில் இயங்கணும்னு சில முக்கியமான கட்டுப்பாடுகள் இருந்தது.இந்த கட்டுப்பாடுகள் எதுக்குன்னா, மினி பஸ்களால் அரசு பஸ்களின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது. அதே சமயம், பஸ்வசதி இல்லாத பகுதிகளை பஸ்வசதியுள்ள பகுதிகளுடன் இணைக்கணும். இது தான் நோக்கம்!

உதாரணமா. திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிற அம்பாசமுத்திரத்தை எடுத்துக்கலாம். அம்பாசமுத்திரம் ஊருக்கு நிறைய பஸ்கள் இருக்கு.ஆனா அம்பாசமுத்திரத்துக்கு தெற்கே இருக்கிற சிவந்திப்பட்டின்ற கிராமத்துக்கு முறையான பஸ் வசதி இல்லை. அதனால் அந்த பகுதியை அம்பாசமுத்திரத்துடன் இணைக்கிறதுக்காக மினிபஸ் திட்டம் உதவிச்சு. இதே மாதிரி தான் தமிழகத்தில் பல பல கிராமங்களுக்கு இந்த் மினி பஸ் திட்டம் மூலமா நிறைய நன்மைகள் நடந்தது.

நடந்து பள்ளிக்கூடம் போனவங்களுக்கு வசதி. நடந்துபோகணுமேன்னு சோம்பல் பட்டுட்டு படிக்காம இருந்தவங்க கூட படிக்க போக ஆரம்பிச்சாங்க. வயசானவங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள்னு பல ஆயிரக்கணக்கானவங்க இந்த மினி பஸ் திட்டத்தால பயன் அடைஞ்சாங்க.


இந்த திட்டத்தில் அரசு ஈடுபடலை. அந்தந்தந்த பகுதி ஆட்களே மினிபஸ்களை இயக்கினாங்க. பல பகுதிகளில் ஊர் மக்களே எல்லாருமா கைக்காசு போட்டு தங்கள் கிராமத்துக்குன்னு பஸ் வசதி ஏற்படுத்திக்கிட்டாங்க. இன்னும் சில இடங்களில் மகளிர் / ஆடவர் சுய உதவி குழுக்கள் மூலமா பஸ்கள் இயக்கப்படுது. இது கிட்டத்தட்ட, கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மாத்தினதோட மட்டுமில்லாம பல வகையான முன்னேற்றங்களுக்கு மறைமுக காரணியாக இருந்தது.

இந்த திட்டத்தை, 2001-2006 காலத்தில் வந்த அதிமுக அரசு ரத்து பண்ணிச்சு. கிட்டத்தட்ட 3 வருஷ காலம், பஸ் வசதி இல்லாம மீண்டும் அத்தனை கிராம மக்களும் தண்டிக்கப்பட்டாங்க. எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சில வழக்குகள் னு மக்கள் களம் இறங்க ஆரம்பிச்சப்புறம், ரொம்ப லேட்டா, அரசு இறங்கி வந்துச்சு. மீண்டும் மினி பஸ்களை இயக்க அப்போதைய அதிமுக அரசு ஒத்துக்கிடுச்சு. ஆனா, அதுவரைக்கும் மினி பஸ்களுக்கு இருந்த நிறமான மஞ்சள் மற்றும் சிகப்பை நீக்கிட்டு முழுமையா பச்சைக்கலர் (அப்போ அந்த ஆட்சியில் ஜெ.வின் ராசியான நிறம் என சொல்லப்பட்ட நிறம்) தான் அடிக்கணும்னு ஒரு உத்தரவு வந்தது. எந்த கலரா இருந்தா என்ன, மக்களுக்கு நல்லது நடந்தா சரின்னு மீண்டும், மினி பஸ் இயங்க ஆரம்பிச்சுது.


அப்போ பல விதிகளில் தளர்வு கொண்டுவந்தாங்க. அந்த விதி மீறல்களால், நகரங்களிலும், அரசு பஸ்கள் இயங்கும் வழித்தடங்களிலும் முழுமையா மினிபஸ் இயங்க ஆரம்பிச்சது. இப்பவும் ஈரோடு, திருச்சி பகுதிகளில் பார்த்தீங்கன்னா, மினிபஸ் முழுமையா அரசு பஸ் வழித்தடத்திலேயே, அதுவும் நகர்ப்புறத்திலேயே இயங்கறதை பார்க்கலாம்.

இதில் என்ன விளைவுகள் வந்ததுன்னா, நகர்ப்புறத்தில் நிறைய காசு பார்க்க ஆரம்பிச்ச மினி பஸ்கள், கிராமப்புற சேவைகளை குறைச்சிகிட்டாங்க. மீண்டும் கிராம மக்கள் கற்காலத்துக்கு போக ஆரம்பிச்சாங்க. இன்னொரு பக்கம், நகர சாலைகளில் மினி பஸ்கள் இயங்கறதால் அரசு பஸ்கள் நஷ்டமடைய ஆரம்பிச்சது. சூப்பரான வண்டிகள், டிஜிட்டல் ஸ்டீரியோ, எங்கே வேணும்னாலும் நிறுத்தி ஏறி இறங்கற வசதின்னு நகர மக்கள் மினி பஸ்சை விரும்ப ஆரம்பிச்சாங்க.

ஆனா, எந்த காரணத்துக்காக, எந்த மக்களுக்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ, அவங்க மீண்டும், பல பகுதிகளில் நடந்து தான் மெயின்ரோட்டுக்கு வந்து பஸ் பிடிக்கணும்னு ஆகிப்போச்சு.

விடுங்க. அது அவங்க தலையெழுத்து. நாம நம்ம பயணங்களை பார்ப்போம்.

நான் முதல் முதலில் பயணிச்ச நெடுந்தூர பஸ் பயணம், திருவனந்தபுரம்-சென்னை. ம்த்தியானம் 12 மணிக்கு திருவனந்தபுரத்தில் எடுத்து நாகர்கோவிலுக்கு சாயங்காலம் 3 மணிக்கு வந்தது. அங்கெ இருந்து 4 மணிக்கு எடுத்து திருநெல்வேலிக்கு 6.30க்கு வந்தது. மதுரை வரும்போது மணி 12. மறுநாள் காலையில் 9 மணிக்கு தான் சென்னைக்கு வந்தது. நொந்து நூடுல்சாகி, அந்து அவலாகி, வெந்து வெறுப்பாகி பஸ்ல இருந்து வெளியே வந்தேன். இத்தனைக்கும் அது தமிழக அரசு ‘விரைவு’ போக்குவரத்துக்கழகம்.

அரசு பஸ்களிலேயே எனக்கு பிடிச்ச பஸ் சேரன் தான். சுத்தமா வெச்சிருப்பாங்க, அழகான பஸ்கள். ஆனா இப்போ படு கேவலமா இருக்கு! தந்தை பெரியார் போக்குவரத்து கழக பஸ்கள் கொஞ்சம் வித்தியாசமானது. எல்லாரும் ஹைடிராலிக் சஸ்பென்ஷன், ஏர் சஸ்பென்ஷன்னு வெச்சிருக்காங்க. ஆனா பெரியாரில் மட்டும் விவில்லர் சஸ்பென்ஷன். பஸ் நல்ல நீளம். ஆனாலும் உறுதியான சஸ்பென்ஷன். வட தமிழகத்தில் பெரியாரை அடிச்சிக்க இன்னொரு பஸ் இல்லை.

பார்த்தாலே கொஞ்சம் கேவலமான டிசைனா எனக்கு பட்டது அன்னை சத்தியாவும், கட்டபொம்மனும் தான். நேசமணி உறுதியான பஸ். தமிழகத்திலேயே மிக அதி விரைவான பஸ் நேசமணின்னு சொல்லுவாங்க. நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரூட்டில் கேரளா பஸ்சுக்கு நிகரா ஸ்பீடா போவாங்களாம். கேள்விப்பட்டிருக்கேன்.

தீரன் சின்னமலை பஸ்சின் சென்னை-கரூர் பஸ் ரொம்ப அழகு. அது ஒரு டீலக்ஸ் பஸ். சென்னையில் இருந்து கரூர் போகும்போது, திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டு கிட்ட ஒரு யூ டர்ன் ஸ்பீடா அடிச்சு உறையூர் ரோட்டில் நிக்கும் பாருங்க. செம்மெ. அந்த திரில்லுக்காகவே அதில் பயணிக்கலாம். தீரன் சின்னமலை பஸ் அழகான டிசைன், பெயிண்டிங் எல்லாம் சூப்பரா இருக்கும்.

எல்லா போக்குவரத்து கழக பஸ்களுக்கும் இங்கிலீஷில் பெயர் சுருக்கம் TC ன்னு தான் முடியும் (PTC, TTC, DCTC, KTC ன்னு) ஆனா சேரன், சோழன் னு ரெண்டு C, பல்லவன் பாண்டியன்னு ரெண்டு P இருந்ததால், அந்த ரெண்டு பஸ்களுக்கு மட்டும் CTC (Cheran), CRC (Cholan) & PTC (Pallavan), PRC (Pandiyan) ன்னு வெச்சிருந்தாங்க. எனக்கு ரொம்ப நாளா இந்த CRC, PRC க்கு அர்த்தம் தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அது ஒரு அசட்டு காலம்!

நான் இது வரைக்கும் பயணிச்ச பஸ்களில் விபத்தில் சிக்கினதில்லை. ஆனா விபத்துக்களை நேரடியா பார்த்திருக்கேன். எனக்கு முன்னால் போன பஸ் விபத்துக்குள்ளாகி பயணிகள் அலறியடிச்ச சத்தம் இப்பவும் ஞாபகத்தில் இருக்கு.

வாழ்க்கையில நாம யாரை நம்புறோமோ இல்லையோ, நல்லா தெரிஞ்ச நண்பன், கூடவே இருக்கிற அப்பா அம்மா இவங்க மேலே கூட இல்லாத நம்பிக்கையை நாம பஸ் டிரைவர் மேலே வெச்சிருக்கோம். நாளைக்கு காலையில் நம்மளை உருப்படியா நல்லபடியா இறக்கிவிட்டுடுவாருன்ற நம்பிக்கையில் தான் பல பயணிகள் நிம்மதியா தூங்கிட்டு வர்றாங்க. அப்படி ஒரு நம்பிக்கையான மக்கள் இருக்காங்கன்ற அந்த பொறுப்புணர்வும், கடமையும் தான் நம்ம டிரைவர்களை மரியாதைக்குரியவங்களா வெச்சிருக்கு. அவங்க ஒரே ஒரு செகண்டு அசந்தாலும் கூட 40 பேருக்கு உத்திரவாதம் இல்லை. மத்த மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பஸ் விபத்து குறைவுன்றது எவ்வளவு சந்தோஷமான விஷயம்?

இன்னும் பேசுவோம்!

Sunday, July 8, 2012

சி.பி.ஐ படும் பாடு!



நேத்தைக்கு ஒரு அதிரடியான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இருந்து வெளியாகி இருக்கு.

உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் செல்வி.மாயாவதி மீது சி.பி.ஐ தொடர்ந்திருக்கிற சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்திருக்கு உச்சநீதிமன்றம். தாஜ் வணிக வளாகத்தில் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் துணை வழக்கா சி.பி.ஐ, சொத்து குவிப்பு வழைக்கை பதிவு செஞ்சு விசாரிச்சிட்டு வந்தது. அதாவது 2003 ம் ஆண்டு மாயாவதியின் சொத்து மதிப்பு ரூ. 1 கோடி தான். 2007 ம் ஆண்டு இது ரூ.50 கோடியா அதிகரிச்சிருக்கு. இந்த சொத்து விவரங்களை வருமானவரி தாக்கல் செய்யும்போது தெளிவா காமிச்சிருக்காங்க. அதுக்கான வரியும் கட்டி இருக்காங்க. ஆனா எப்படி இவ்வளவு சொத்துவந்ததுன்ற சி.பி.ஐயின் கேள்விக்கு, அதெல்லாம் கட்சி தொண்டர்கள் கொடுத்த அன்பளிப்புன்னு மாயாவதி சொன்னாங்க. அதை சி.பி.ஐ ஏத்துக்கலை. முதல்வரா இருக்கும்போது இந்த அளவுக்கு சொத்து சேர்த்திருப்பது சட்டவிரோதமானதுன்னு சொல்லி, எப்படி அவ்வளவு சொத்து சேர்ந்ததுன்னு ஒரு வழக்கை பதிவு செஞ்சு விசாரிச்சிட்டு வந்தது சி.பி.ஐ. அந்த வழக்கை தான் சட்டவிரோதம்னு சொல்லி உச்சநீதிமன்றம் இப்போ ரத்து பண்ணியிருக்கு. அதுக்கு சொல்லப்பட்ட காரணம் தான் விசித்திரமானது.

தாஜ் வணிக வளாக வழக்கு பத்தி தான் நாங்க விசாரிக்க சொன்னோமே தவிர மாயாவதி மீது வழக்கு பதிவு செஞ்சு விசாரிக்க சொல்லலை. எங்க தீர்ப்பை சி.பி.ஐ தப்பா புரிஞ்சுகிட்டு வழக்கை பதிவு செஞ்சிருக்காங்க. சி.பி.ஐ தன் அதிகார வரம்பை மீறி செயல்படுது. இது சட்ட விரோதம். அதனால் நாங்க அந்த சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யுறோம்னு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லி இருக்காங்க.

அரசியல் சாசனப்படி, சி.பி.ஐ ஒரு தனியான சுயேட்சையான அமைப்பு. ஆனால் சி.பி.ஐயால் என்ன காரணங்களாலோ அப்படி சுயேட்சையா செயல்பட முடியறதில்லை. பல பல சந்தர்ப்பங்களில் ஆளும்கட்சியின் பிடியிலோ, அரசின் பிடியிலோ தான் சி.பி.ஐ செயல்பட்டுட்டு வருதுன்னு பரவலா ஒரு குற்றச்சாட்டு இருக்கு. சி.பி.ஐ உண்மையிலேயே எப்போ சுதந்திரமா செயல்படுதுன்னா, எந்த வித அரசியல் / அரசு சார்பான தொடர்பும் இல்லாத பொதுவான கொலை வழக்குகள் மாதிரியான விஷயங்களில் தான் சி.பி.ஐ தன்னிச்சையா செயல்பட முடியுது. அம்மாதிரியான வழக்குகளில் தான் சி.பி.ஐயின் முழுமையான திறமையும் வெளிப்படுது.

இதில்லாம, எந்த ஒரு வழக்கிலாவது அரசியல் பின்னணி, அரசு நிர்வாக தொடர்பு, அரசியல்வாதியின் தலையீடுன்னு இருந்தா அதுமாதிரியான வழக்குகளில் சி.பி.ஐ சுதந்திரமா செயல்பட முடியறதில்லை. யாராவது ஒருத்தர் சி.பி.ஐயை கட்டுப்பாட்டுக்குள் வெச்சிட்டு இருக்கவே முயற்சி செய்யுறாங்க. அப்படியான சூழல்களிலெல்லாம், உச்சநீதிமன்றம் தான் சி.பி.ஐக்கு பக்கபலமா இருந்து ஓரளவுக்கு சி.பி.ஐயின் சுதந்திரத்தை காப்பாத்திட்டு வந்திருக்கு. ஆனா இந்த முறை, இந்த தீர்ப்பை படிச்சபோது, உச்சநீதிமன்றமும் சி.பி.ஐயை கட்டுப்படுத்த முயற்சி செய்யுதோன்னு ஒரு சந்தேகம் வர்றதை தவிர்க்கமுடியலை எனக்கு.

எந்த ஒரு வழக்கிலும் கட்டுப்பாடுகள் இல்லாம, தனக்கு சரின்னு பட்டால் வழக்கு பதிவு செஞ்சு விசாரிக்கிற உரிமையும் கடமையும் சி.பி.ஐக்கு இருக்கு. அந்த வகையில் தான் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தாஜ் வணிகவளாக வழக்கை விசாரிச்சிட்டு வந்தபோதும், கூடுதல் விவரங்கள், ஐயப்பாடுகள் அடிப்படையில் மாயாவதி மீதும் சி.பி.ஐ வழக்கை பதிவு செஞ்சு விசாரிச்சிட்டு வந்தது. இந்த வழக்கு கோர்ட்டில் தாக்கலானபோது, அந்த வழக்குக்கு அடிப்படை முகாந்திரம் இருக்கிறதா சொல்லபபட்டது. அதன் அடிப்படையில் தான் வழக்கு நடந்துட்டு இருந்தது. ஆனால், நேத்து உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு, சி.பி,ஐயின் தனி அதிகாரத்தை பறிக்கற மாதிரி இருக்குது. அதை விட அதிர்ச்சியானது, இந்த தீர்ப்பின் அடிப்படையில் மற்ற வழக்குகளில் நேர வாய்ப்பிருக்கின்ற மாற்றங்கள்.

நாங்க அனுமதி கொடுக்காம சி.பி.ஐ மாயாவதி மீது வழக்கு பதிவு செஞ்சிருக்கிறது சட்டவிரோதம்னு உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறதால வந்த அதிர்ச்சியே முழுமையா போகாம இருக்கு. இதில், அதே தீர்ப்பில் “வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் ஒப்புகை உள்ளதாலும், முறையான வரியை மாயாவதி செலுத்தி இருப்பதாலும், விஷயம் அதோடு முடிஞ்சிருச்சு. அதுக்கப்புறமும் எப்படி எந்த வகையில் வருமானம் வந்ததுன்னு எல்லாம் சி.பி.ஐ விசாரிக்கிறது சட்டவிரோதமானது”ன்னு உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கு. அப்படின்னா, எப்படி வேணும்னாலும் சம்பாதிச்சிக்கலாம், அதுக்கான வருமான வரியை மட்டும் செலுத்திட்டா போதுமான்னு ஒரு அதிர்ச்சி நமக்கெல்லாம் வரத்தானே செய்யுது?

இன்னொரு பக்கம் பார்த்தா, இதே போல வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்து சொத்து குவிப்பு வழக்கை எதிர்நோக்கி இருக்கிற பல அரசியல்வாதிகளும், வரி கட்டியிருக்கிறதை சாக்கா வெச்சு விடுவிக்கப்பட்டிருவாங்களான்னு ஒரு சந்தேகமும் வருது! அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறதா இருந்தா, முறையா வருமான வரி கட்டியும், சொத்து குவிப்பு வழக்கை எதிர்நோக்கி இருக்கிற நம்ம தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும், திமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் அது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக தான் இருக்கும்.

எனக்கு இப்போ குழப்பத்தை தந்திட்டு இருக்கிறதெல்லாம் இந்த கேள்விகள் தான்:

1. சி.பி.ஐ தன்னிச்சையான அமைப்பு இல்லையா? அவர்களால் சுதந்திரமாக (அடிப்படை முகாந்திரம் இருக்கும்பட்சத்தில்) வழக்குகளை பதிய முடியாதா?

2. வருமானத்துக்கு பொருந்தாதவகையில் அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் (அரசு பதவியின் மூலம் ஊழல் செய்து சம்பாதித்து இருந்தால்) அதற்கான வரியை மட்டும் (30%) கட்டினாலே அது சட்டப்பூர்வமான சம்பாத்தியம் ஆகிவிடுமா?

உங்களில் யாரிடமாவது இந்த இரண்டு கேள்விக்கும் பதில் இருக்குதுங்களா?

Friday, July 6, 2012

கிரந்தம் தவிர்த்த தமிழ்!

மீப காலமா இணைய வெளிகளிலும் இதர வெளிகளிலும் திடீர்னு எல்லாருக்குமே ஒரு இன்ஸ்டண்ட் தமிழுணர்வு வந்து பாடா படுத்திட்டு இருக்கிறதை பார்த்திருப்பீங்க!

தமிழ்நாட்டில் பல பேருக்கு படிப்பறிவே இல்லை. இன்னைக்கு தேதிக்கு 76% தான் கல்வி அறிவு இருக்கு. அதில் 32% தான் பட்டதாரிகள். அந்த பட்டதாரிகளுக்கும் தெளிவா முழுமையா தமிழ் தெரிஞ்சவங்க சதவீதம்னு பார்த்தா 12% போல தான் இருக்காங்க.தமிழே முழுமையா இலக்கண சுத்தமா தெரியாத நிலையில் தனித்தமிழ் கோரிக்கை முழக்கம் ஏன்? முதலில் இந்த கிரந்தம் தவிர்த்த தனித்தமிழ் னா என்ன?

வடமொழி சொல்லை தான் கிரந்த எழுத்துக்கள்னு சொல்றோம். (ஜ..ஷ, ஹ, மாதிரியான எழுத்துக்கள்) தமிழ் மேலே பற்று இருக்கிறவங்க இந்த எழுத்துக்களை எல்லாம் பயன்படுத்தாம தவிர்க்கணும்ங்கறது இன்ஸ்டண்ட் தமிழுணர்வாளர்களின் முழக்கம். அப்போ அவங்களுக்கு அடிப்படையே தெரியலைன்னு தானே அர்த்தம்?

தமிழ் மொழி சொற்களில் கிரந்தம் வர வாய்ப்பே இல்லை. கிரந்த எழுத்துக்கள் வந்தாலே அது தமிழ் சொல் இல்லை. இது தான் அடிப்படை. ஆனா, இவங்க வாதம் என்னன்னா, நாங்க தமிழல்லாத வடமொழி சொற்களை உபயோகப்படுத்துவோம் ஆனா அதில் கிரந்த எழுத்துக்களை அனுமதிக்கமாட்டோம். நல்லா இருக்குல்ல? இப்படி தான், விசித்திரமான விதண்டாவாதம் நடத்துறதில நம்ம ஆளுங்களை அடிச்சிக்கவே முடியாது  இதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன். என் நண்பர் ஒருத்தர் இருக்காரு. அவர் பெயர் ஜெயராஜன். திடீர் தமிழ் உணர்வால தன் பெயரை செயராசன்னு எழுதுறாரு. ஜ என்கிற கிரந்த எழுத்தை தவிர்த்து ச என்கிற தமிழ் எழுத்தை உபயோகப்படுத்துறாராம். நல்லது. நான் முன்னேயே சொன்ன மாதிரி தமிழ் சொற்களில் கிரந்த எழுத்து வர வாய்ப்பில்லைங்கறதை கவனிச்சா, ஜெயராஜன் என்கிற பெயரே தமிழ் இல்லை. ராஜன் என்கிற பெயர் தமிழாக இருந்தால் ஜ வர நியாயமே இல்லை. ராஜ் என்பதன் மரூஉ தான் ராஜன் என்பது. அதே மாதிரி, ஜெய என்பதும் வட மொழி சொல். அடிப்படை சொல்லே தமிழ் இல்லை. ஆனால் கிரந்தத்தை தவிர்த்து தமிழுணர்வு நிலைநாட்டி இருக்காரு..இதே மாதிரி தான் பாக்கியராஜனை பாக்கியராசன், ரமேஷ்குமாரை ரமேசுகுமார்னெல்லாம் மாத்தி மாத்தி வெச்சிட்டு தன் தமிழுணர்வை காப்பாத்திக்கிறாங்க. அட, என் பேரையே பலரும், சதீசு குமாருன்னு தான் எழுதி இம்சை பண்றாங்க.

சரி, நாம இனி கொஞ்சம் அலசலுக்கு வருவோம்.


திருக்குறள் முழுமையா தமிழில் எழுதப்பட்டது. (தனித்தமிழ்னு ஒண்ணு இல்லைங்கறதால நாம அந்த வார்த்தையை புறக்கணிச்சிடலாம். தமிழ்னாலே தமிழ் மட்டும் தான்!) முதல் குறளை தவிர வேறே எந்த குறளிலும் பிறமொழி சொல் கலப்பு இருக்காது. பிறமொழி சொல் கலப்பு இல்லைன்னாலே கிரந்தம் வராது. முதல் குறளில் மட்டும் ஆதி பகவன் னு ரெண்டு வட மொழி சொற்கள் இருக்கு. வள்ளுவர் காலத்தில் வடமொழி இல்லை. அதனால் இது பிற்காலத்தில் திருத்தி நுழைக்கப்பட்டதா இருக்கும்னு எனக்கு ஒரு டவுட்டு ரொம்ப காலமா இருக்கு. அது தனி கதை. நாம மேட்டருக்கு வருவோம்!
திருவள்ளுவரால் கிரந்தம் தவிர்த்து எழுத முடிந்ததற்கு காரணம், அவர் தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்தியது தான். இப்போதைய இன்ஸ்டண்ட் தமிழுணர்வாளர்களை மாதிரி, வடமொழியை பயன்படுத்துவேன், ஆனா அதில் கிரந்தம் வராமபார்த்துக்குவேன் என்கிற மாதிரியான விசித்திர கொள்கை எல்லாம் அவருக்கு கிடையாது!

அதே மாதிரி தான் அவ்வையாரும். அவரது செய்யுள்களிலும் தமிழ் மட்டுமே இருக்கும். ஆனா, தமிழ் வளர்த்ததா சொல்லப்படும் அகஸ்திய மாமுனியின் செய்யுள்களில் வடமொழி கலப்பு இருக்கு! காரணம் அவர் பிற்கால முனி, அவரது பெயரே அகஸ்தியன் என்கிற வடமொழி தான். (அவரு எப்படி தமிழை வளர்த்தாருன்னெல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்கப்படாது!)
சரி, அப்படின்னா, தமிழ் மொழியில் மட்டுமே எழுதுறது சாத்தியமா?

இதுக்கு நான் துணைக்கு அழைக்க வேண்டியது இரண்டு பேரை. முதலில் சுஜாதா.

சுஜாதா அழகா ஒரு புத்தகத்தில் சொல்லி இருப்பாரு. எல்லாத்தையும் தமிழ் படுத்த தேவையில்லை. தமிழ் என்பது மிக மிக சிறுபான்மையான மொழி. அதனால் தமிழ் மொழி மட்டுமேன்னா ரொம்ப கஷ்டம். உதாரணமா வேதியியல் படிக்கும்போது சல்ஃபூரிக் ஆசிடுன்னு படிக்கிறதில் தப்பில்லை. அதை மெனக்கெட்டு மொழிபெயர்த்து கந்தகிஜ அமிலம்னு படிக்க ஆரம்பிச்சா அவனால் பொது போட்டியில் ஈடுபடமுடியாது, புரியவும் புரியாதுன்னு சொல்லி இருக்காரு.

இன்னொருத்தர், கலைஞர்.

கோர்ட்டுகளில் தமிழில் வாதாட அனுமதி வேணும்னு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திட்டு இருந்த போது, ஒரு நீதிமன்ற விழாவில் கலைஞர் பேசும்போது சொன்னார், எல்லாவற்றையும் தமிழ் படுத்தியே ஆகவேண்டும் என  பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. கோர்ட் நீதிமன்றம் ஆகலாம், ஜட்ஜ் நீதிபதி ஆகலாம்,ஜட்ஜ் தரும் ஜட்ஜ்மெண்ட் தீர்ப்பு ஆகலாம், ஜட்ஜ்மெண்ட் எழுத பயன்படும் பேனா, மையூற்று எழுதுகோல் ஆகவேண்டிய அவசியமில்லை, அது பேனாவாகவே இருந்துவிட்டு போகட்டும்னு அழகா சொன்னாரு.
அதாவது பெயர்கள், பெயர்ச்சொல்கள், பிறமொழி சொற்களை எல்லாத்தையும் வலுக்கட்டாயமா தமிழ்மொழியாக்கம் செய்ய தேவையில்லைங்கறது தான் பலருடைய கருத்து.

என்னை கேட்டால், முதலில் தமிழ் மொழியை முழுமையா படிக்க முயற்சி பண்ணுங்க. பல பேருக்கு தமிழ் இலக்கணமே தெரியாது. கலிவிருத்த ஆசிரியப்பான்னா என்னன்னு கேட்டாலே கதி கலங்கிடுறாங்க. முதலில் தமிழை வளர்க்கணும்னா, தமிழுணர்வாளரா இருக்கணும்னா, தமிழ் இலக்கணங்களையும், இலக்கியத்தையும் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கணும். தாய்மொழியே தெரியாத மனுசங்களா நாம தான் இருப்போம்னு நினைக்கிறேன். அடிப்படை இலக்கணமே தெரியாம எங்கத்த போயி நாம அடுத்த தலைமுறைக்கு அட்வைஸ் பண்றது. தமிழை சிந்தாம சிதறாம நாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகணும்னா, தமிழிலக்கணத்தை எல்லாரும் தெரிஞ்சுகிட்டா தானே முடியும். முதலில் இலக்கண பயிற்சி, அப்புறம் கூடுமானவரைக்கும் எளிய தமிழ் சொற்களாலான உரையாடல்னு இருந்தாலே தமிழ் வளரும்.

அதை விட்டுட்டு நாங்க தமிழ் சொல் பயன்படுத்தமாட்டோம், வடமொழி சொற்களை பயன்படுத்துவோம், ஆனா அதில கிரந்தம் வராம தவிர்ப்போம், ஏன்னா நாங்க தமிழுணர்வாளர்கள் னு வசனம் விடுறவங்களை எல்லாம் உதாசீனப்படுத்துறது நல்லது!

Wednesday, July 4, 2012

பயணிகள் கவனத்திற்கு – பாகம் 3

மிழக போக்குவரத்து கழகங்களை பத்தின இந்த தொடரின் Part-1 & Part-2 ஆகியவற்றை தொடர்ந்து இது .மூன்றாம் பதிவு


தமிழகத்தில் திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் தான் நீண்ட தூர பஸ்களை இயக்கிட்டு இருக்காங்க. அதில் இருந்து வெளிமாநில பஸ்களை மட்டும் தனியா பிரிச்சு எடுத்து 1991-96 அதிமுக ஆட்சிகாலத்தில் ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் ஆரம்பிச்சாங்க. அதுக்கு பிறகு வந்த திமுக ஆட்சி ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் என்கிற பெயரை மாற்றி ராஜீவ் காந்தி போக்குவரத்து கழகம்னு ஆக்கினாங்க. போக்குவரத்து கழங்களுக்கு இருந்த சிறப்பு பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டபோது, திருவள்ளுவர், ராஜீவ்காந்திங்கற பெயரை தூக்கிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்னு பேரு வெச்சாங்க. (SETC – State Express Transport Corporation).அதோட, தனித்தனியா இயங்கிட்டு இருந்த இந்த இரண்டு நிர்வாகத்தையும் இணைச்சு, ஒரே நிர்வாகமா ஆக்கிட்டாங்க.


இந்த பஸ்களுக்கு ரூட் நம்பர் வெக்கிறதில் உள்ள லாஜிக் அலாதியானது. பஸ்கள் இயங்கும் பகுதியை தமிழகத்தில் 5 மண்டலமா பிரிச்சிருக்காங்க. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு & மத்திய தமிழகம். பஸ் ரூட்டுகளுக்கு 3 டிஜிட் நம்பர் கொடுத்திருக்காங்க. அதில் முதல் இலக்கம், எந்த வழித்தடத்தில் இயங்குதுன்னு சொல்லும். மத்த 2 டிஜிட் தான் ரூட் நம்பர். உதாரணங்கள் சொன்னா ஈசியா புரியும்.

வடக்கு-மத்திய தமிழகத்துக்கு இயக்கப்படும் பஸ்கள் 1 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-திருச்சி)

வடக்கு-தெற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 2 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-மார்த்தாண்டம்)

வடக்கு-கிழக்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 3 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-வேளாங்கண்ணி)

வடக்கு-மேற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 4 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-கோவை)

தெற்கு-கிழக்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 5 எனும் எண்ணில் துவங்கும் (உம். கன்னியாகுமரி-நாகப்பட்டினம்)

தெற்கு-மேற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 6 எனும் எண்ணில் துவங்கும் (உம்: நெல்லை-கோவை)

இது தவிர வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள்:

7 என துவங்குபவை கேரள மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன

8 என துவங்குபவை கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன

9 என துவங்குபவை ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன.

1980களில், திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் ஒரு அருமையான டைம் டேபிளை வெளியிட்டிருந்தது. அதில் தமிழகத்தின் எல்லா ஊரிலிருந்தும் பஸ் டைமிங், கனெக்ஷன் பஸ்கள், வழித்தடம், எங்கெல்லாம் நிக்கும்னு எல்லா விவரங்களும் ஒரு புத்தகமா வெளியிட்டாங்க. அடிக்கடி பயணம் செய்யுறவங்களுக்கு (சேல்ஸ் / மார்கெட்டிங் / சைட் எஞ்சினியர்கள்) ரொம்ப உதவிகரமா இருந்தது. இப்போ அப்படி எந்த டைம்டேபிளும் இல்லை. போக்குவரத்து கழக வெப்சைட்டிலும் முழுமையான விவரங்கள் இல்லை. பஸ் ஸ்டாண்டுகளிலும் விவரங்கள் கிடையாது.

முன்னெல்லாம் ஒவ்வொரு ஊரிலும், மத்திய பேருந்து நிலையம்னு ஒண்ணு இருந்தாலும், திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்துக்குன்னு ஒரு தனி பஸ் ஸ்டாண்டும் இருந்தது. இப்போ எல்லாமே ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களா ஆயிருச்சு.

விரைவு போக்குவரத்து கழகத்தில் மினி பஸ்கள் கிடையாது. ஊட்டிக்கு கூட அஷோக் லேலண்டு வைகிங் பஸ் தான் ஓட்டுறாங்க. அவ்வளவு நீளமான பஸ்ஸை எப்படி மலை ஏத்துவாங்கன்னு எனக்கு ரொம்ப நாள் ஆச்சரியமா இருந்தது.


அரசு விரைவு போக்குவரத்து கழகம் தான் எல்லா தாலுக்காவுக்கும் பஸ்கள் இயக்குது என்பதால் அதில் தான் நான் தமிழகம் முழுவதும் சுத்தினேன். ஆனாலும் வட்டார போக்குவரத்து கழக பஸ்களில் அவசர காலங்களில் பயணிப்பேன். விரைவு போக்குவரத்து கழகம், எல்லா முக்கிய பஸ் ஸ்டாண்டிலும் நின்னு நின்னு போகும். காரணம் எல்லா டைம் ஆபீசிலும் வண்டி எண்டிரி செஞ்சு ஆகணும். அதுவுமில்லாம வேகக்கட்டுப்பாடு கருவி இருக்கிறதால மெல்லமா தான் போகும். வட்டார போக்குவரத்து கழகத்துக்கு அந்த பிரச்சனை இல்லை. பாய்ண்ட் டு பாயிண்ட் எப்படி வேணும்னாலும் போயிக்கிடலாம். வேகம் அவங்க இஷ்டப்படி.

சென்னையில் இருந்து கோவைக்கு திருவள்ளுவரில் 460ன்னு ஒரு ரூட் பஸ் முன்னெல்லாம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், சேலம், ஈரோடு பஸ் ஸ்டாண்டுகளில் நின்னு டைம் எண்ட்ரி பண்ணிட்டு போகும், ஆனா சேரன் போக்குவரத்து கழக பஸ் எங்கேயும் நிக்காது. ஏன்னா, அவங்களுக்கு இங்கெல்லாம் டைம் ஆபீஸ் இல்லை. சென்னை-பெங்களூர் 4 வழிப்பாதை அமைச்சப்புறம் அந்த 460 பஸ் ரூட்டு மாறி, வேலூர், தருமபுரி வழியா போக ஆரம்பிச்சுது.

சென்னை – கோவை 510 கி.மீ. சேரன் பஸ்ஸில் 2 டிரைவர்கள் இருப்பாங்க. ஆளுக்கு 170 கி.மீ (3.30 மணி நேரம்) பிரிச்சுக்குவாங்க. சென்னை-விழுப்புரம் 170 கி.மீ; விழுப்புரம்-சேலம் 170 கி.மீ; சேலம்-கோவை 170 கி.மீன்னு 11 மணிநேரத்தில் பயணிக்கணும். ஆனால் சென்னை-விழுப்புரம் 4 மணிநேரம் ஆயிரும். டிராஃபிக்! விழுப்புரம் சேலம் 3 மணிநேரம்; சேலம்-கோவை 2.30 மணிநேரம்னு சீக்கிரமாவே கோவைக்கு போயிரும் சேரன். இப்போ தனியார் வோல்வோ பஸ்கள் 7 மணிநேரத்தில் கோவைக்கு போவுது!

இந்த மாதிரி நீண்ட தூர பயணங்களில் பெரிய பிரச்சனையே உணவு தான். கண்ட கண்ட இடங்களில் இருக்கும் தரமற்ற ஹோட்டல்களில் வண்டியை நிறுத்தி சாப்பிட சொல்லுவாங்க. டிரைவருக்கும் கண்டக்டருக்கும் ஃபிரீ. ஆனா நம்மகிட்டே மொத்தமா கறந்துருவாங்க. பொதுவா, சென்னையில் இருந்து சாயந்தரம் கிளம்புற பஸ்கள் எல்லாத்துக்குமே விக்கிரவாண்டி தான் டின்னர் பாய்ண்ட். பசிக்கிற நேரத்தில் எந்த ஊரு வருதுன்னு பார்த்து அங்கே நிறுத்துவாங்க. தரமில்லாத உணவுக்கு எக்கச்சக்கமா காசு அழுது அரை மனசா பயணிச்ச காலங்கள் நிறைய.

பயணிகளின் கஷ்டத்தை அறிஞ்ச தமிழக அரசு, போக்குவரத்து கழகம் மூலமாவே ஒரு நல்ல தரமான மோட்டல் (வழியோர உணவகம்) கட்ட தீர்மானிச்சு, செங்கல்பட்டு கடந்ததும் மாமண்டூரில பிரமாண்டமான உணவகத்தை அமைச்சாங்க. எல்லா அரசு பேருந்துகளும் அங்கே தான் நிறுத்தி சாப்பிடணும்னு உத்தரவே போட்டுச்சு அரசு. ஆனா அந்த திட்டம் வெற்றி பெறலை. இப்போ அந்த மோட்டல் வீணா தான் கிடக்குது. அது தோற்றதுக்கு காரணம் இடம். இந்த மோட்டலை விழுப்புரத்தில் கட்டி இருந்தா உபயோகமா இருந்திருக்கும். செங்கல்பட்டில் கட்டினதால், பஸ் புறப்பட்ட 1.30 மணிநேரத்திலேயே உணவு பிரேக் என்பது நடைமுறையில் சரியா வரலை. அதனால் பல பஸ்கள் அங்கே நிறுத்தலை.

இப்பவும், விழுப்புரம், திருச்சி, கோவில்பட்டி, ஈரோடு, வாணியம்பாடி பகுதிகளில் அரசே தரமான மோட்டல்களை அமைச்சிதுன்னா ரொம்ப உதவியாக தான் இருக்கும்.

வெளிமாநிலத்துக்கு நம்ம பஸ்கள் இயங்குதுங்கறது உங்களுக்கு தெரியும். ஆனா இதில் என்னென்ன முரண்பாடுகள், உரிமைபோராட்டங்கள் எல்லாம் நடக்குது தெரியுமா?


கர்நாடக அரசு பஸ்கள், தமிழகத்தில் எல்லா பகுதிகளுக்கும் வந்து போயிட்டு இருக்கு. கொடைக்கானலுக்கு கூட வருது. தமிழகத்தை ஊடுருவி. தென் தமிழகம் வரைக்கும் சர்வீஸ் விடிருக்காங்க. ஆனா, நம்ம தமிழக பஸ்கள் தெற்கு கர்நாடகம் வரைக்கும் தான் செல்ல அனுமதி. ஷிமோகா, ஹூப்ளி, தவணகிரி, பெல்லலரி மாதிரி மத்திய / வடக்கு கர்நாடகத்துக்கு தமிழக பேருந்துகளுக்கு அனுமதி இல்லை.


அதே மாதிரி தான் ஆந்திராவும். ஆந்திரா பஸ்கள் தமிழ் நாட்டில் கோவை வரைக்கும் கூட வருது. ஆனா நமக்கு தெற்கு ஆந்திரா தவிர மேலே செல்ல அனுமதி இல்லை. எல்லைபுற நகரங்களான திருப்பதி, நெல்லூர் பகுதிகளுக்கு தான் தமிழக பஸ்கள் செல்ல அனுமதி. சென்னை – ஹைதிராபாத் ரூட்டுக்கு செம டிமாண்ட் இருக்கு. ஆனால் அந்த ரூட்டில் ஆந்திரா பஸ்களூம் தனியார் பஸ்களும் தான் இயங்குது, தமிழக பஸ்களுக்கு இன்னமும் அனுமதி இல்லை.

நாம மட்டும் என்ன லேசுப்பட்டவங்களா என்ன? கேரளாவின் எல்லா பகுதிகளுக்கும் தமிழக பஸ் சேவை இருக்கு. ஆனா, கேரள அரசு பஸ்களுக்கு வடக்கு தமிழகத்தில் பஸ் இயக்க அனுமதி இல்லை. சேலத்துக்கு வடகிழக்கே கேரள பஸ்கள் வருவதற்கு நாம் இன்னமும் அனுமதிக்கலை.

சென்னை-திருவனந்தபுரம் ரூட்டில் ஓடும் எல்லாமே தமிழக அரசு பஸ்களும் தனியார் பஸ்களும் தான். ஒரு சர்வீஸ் கூட கேரளாவுக்கு கொடுக்கலை. அதுக்கு பதிலா, பாலக்காடு-கோவை, திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரூட்டுகளில் நாம கம்மியா இயக்கி அவங்களுக்கு அதிக உரிமம் கொடுத்திருக்கோம்.


இதை விட இன்னொரு ஆச்சரியமான விஷயம் இருக்கு. கேரள மாநில பகுதியில் புதுவை மாநிலத்துக்கு சொந்தமான மாஹி என்கிற ஊர் இருக்கு. அங்கே இருந்து புதுவைக்கு கேரளா அரசு பஸ் இயக்கணும்னு அவங்க கோரிக்கை கொடுத்தும் நாம் அனுமதிக்கலை. கேரளா பஸ் மட்டும் அல்ல, அந்த ரூட்டில் புதுவை பஸ்சுக்கும் அனுமதி இல்லை. அதை தமிழக பஸ் மட்டுமே மொத்தமா எடுத்து புதுவை-கோழிக்கோடு ரூட்டில் நாமளே ஒரு திராபையான பஸ் இயக்கிட்டு இருக்கோம்! கேரளா அரசும், புதுவை அரசும் வோல்வோ சொகுசு பஸ் இயக்குறாங்கன்றது தெரிஞ்ச விஷயம்.

எதனால இந்த ஈகோன்னு எனக்கு தெரியலை. சென்னைக்கு கேரளா பஸ்கள் வர அனுமதி இல்லை. ஹைதிராபாதுக்கும் ஹூப்ளிக்கும் தமிழக பஸ்கள் வர அனுமதி இல்லை. சுருக்கமா பார்த்தா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் எல்லையோர பகுதிகளுக்கு மட்டும் தான் தமிழக பஸ்களுக்கு அனுமதி. கேரளாவில் முழு மாநிலத்திலும் அனுமதி. அதே நேரம் கேரள பஸ்களுக்கு தமிழகத்தில் எல்லைபகுதிகளில் மட்டும் தான் அனுமதி. ஆனால் கர்நாடக, ஆந்திர பஸ்களுக்கு தமிழகம் முழுவதும் அனுமதி. என்னமோ இதில் லாஜிக் இடிக்குதுல்ல?

அதை யோசிச்சிட்டு இருங்க.. அடுத்த பாகத்தில் விரிவா பேசுவோம்!

Printfriendly