Tuesday, July 10, 2012

பயணிகள் கவனத்திற்கு – பாகம் 4

ற்கனவே தமிழக போக்குவரத்து கழகங்கள் குறித்த இந்த தொடரில் மூணு பாகம் முடிஞ்சு இது நாலாவது பாகம். இது வரை வந்த பாகங்கள் இங்கே ( Part-1 ; Part-2 ; Part-3 ) காணலாம்.


இவ்வளவு தூரம் தமிழக பஸ்களை பத்தி பேசிட்டு, மினி பஸ்களை பத்தி சொல்லலைன்னா எப்படி?

இந்த மினி பஸ் கான்சப்ட் ரொம்ப புதுமையானது. மக்கள் நலன் சார்ந்தது. ஆனா அந்த திட்டத்துக்கான உரிய முக்கியத்துவம் இதுவரைக்கும் கிடைக்கவேயில்லை. அரசு பஸ்கள் ஒரு குறிப்பிட்ட பகுதி / சாலை களில் தான் பயணிக்குது. அது எல்லா குக்கிராமங்களையும் இணைக்கறதில்லை. அதனால பல குக்கிராம மக்கள் சில கிலோமீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் பஸ்ரோட்டுக்கு வந்து பஸ் பிடிக்க முடிஞ்சுது. பெரிய பஸ்களை இயக்கமுடியாத சாலைகளும், சில கிராமங்களுக்கு முறையான சாலை வசதியே இல்லாத நிலைமையும் தான் போக்குவரத்து வசதி கிடைக்காம பல கிராமங்கள் தவிக்க காரணம்.

அப்படிபட்ட கிராமங்கள், புறநகர் பகுதிகளில் வசிக்கிற மக்களை அம்போன்னு விட முடியுமா என்ன? அதே சமயம், அந்த மாதிரி பகுதிக்கு ஒரு அரசு பஸ் இயக்குறதும் சாத்தியமற்றதா இருக்கு! என்ன செய்யலாம்னு யோசிச்சு, 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞரால் கொண்டுவரப்பட்டது தான் கிராமப்புற மினிபஸ் திட்டம்.

பஸ் வசதி இல்லாத பகுதிகளை, பஸ் வசதியுள்ள பகுதிகளுடன் இணைக்கிறது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அதனால் இந்த திட்டத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது. மொத்தமா 16 கி.மீ தூரத்துக்கு மட்டும் தான் இயக்கப்படணும். அதில் 4 கி.மீ தான் அரசு பஸ் செல்லும் வழித்தடத்தில் இயங்கணும்னு சில முக்கியமான கட்டுப்பாடுகள் இருந்தது.இந்த கட்டுப்பாடுகள் எதுக்குன்னா, மினி பஸ்களால் அரசு பஸ்களின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது. அதே சமயம், பஸ்வசதி இல்லாத பகுதிகளை பஸ்வசதியுள்ள பகுதிகளுடன் இணைக்கணும். இது தான் நோக்கம்!

உதாரணமா. திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிற அம்பாசமுத்திரத்தை எடுத்துக்கலாம். அம்பாசமுத்திரம் ஊருக்கு நிறைய பஸ்கள் இருக்கு.ஆனா அம்பாசமுத்திரத்துக்கு தெற்கே இருக்கிற சிவந்திப்பட்டின்ற கிராமத்துக்கு முறையான பஸ் வசதி இல்லை. அதனால் அந்த பகுதியை அம்பாசமுத்திரத்துடன் இணைக்கிறதுக்காக மினிபஸ் திட்டம் உதவிச்சு. இதே மாதிரி தான் தமிழகத்தில் பல பல கிராமங்களுக்கு இந்த் மினி பஸ் திட்டம் மூலமா நிறைய நன்மைகள் நடந்தது.

நடந்து பள்ளிக்கூடம் போனவங்களுக்கு வசதி. நடந்துபோகணுமேன்னு சோம்பல் பட்டுட்டு படிக்காம இருந்தவங்க கூட படிக்க போக ஆரம்பிச்சாங்க. வயசானவங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள்னு பல ஆயிரக்கணக்கானவங்க இந்த மினி பஸ் திட்டத்தால பயன் அடைஞ்சாங்க.


இந்த திட்டத்தில் அரசு ஈடுபடலை. அந்தந்தந்த பகுதி ஆட்களே மினிபஸ்களை இயக்கினாங்க. பல பகுதிகளில் ஊர் மக்களே எல்லாருமா கைக்காசு போட்டு தங்கள் கிராமத்துக்குன்னு பஸ் வசதி ஏற்படுத்திக்கிட்டாங்க. இன்னும் சில இடங்களில் மகளிர் / ஆடவர் சுய உதவி குழுக்கள் மூலமா பஸ்கள் இயக்கப்படுது. இது கிட்டத்தட்ட, கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மாத்தினதோட மட்டுமில்லாம பல வகையான முன்னேற்றங்களுக்கு மறைமுக காரணியாக இருந்தது.

இந்த திட்டத்தை, 2001-2006 காலத்தில் வந்த அதிமுக அரசு ரத்து பண்ணிச்சு. கிட்டத்தட்ட 3 வருஷ காலம், பஸ் வசதி இல்லாம மீண்டும் அத்தனை கிராம மக்களும் தண்டிக்கப்பட்டாங்க. எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சில வழக்குகள் னு மக்கள் களம் இறங்க ஆரம்பிச்சப்புறம், ரொம்ப லேட்டா, அரசு இறங்கி வந்துச்சு. மீண்டும் மினி பஸ்களை இயக்க அப்போதைய அதிமுக அரசு ஒத்துக்கிடுச்சு. ஆனா, அதுவரைக்கும் மினி பஸ்களுக்கு இருந்த நிறமான மஞ்சள் மற்றும் சிகப்பை நீக்கிட்டு முழுமையா பச்சைக்கலர் (அப்போ அந்த ஆட்சியில் ஜெ.வின் ராசியான நிறம் என சொல்லப்பட்ட நிறம்) தான் அடிக்கணும்னு ஒரு உத்தரவு வந்தது. எந்த கலரா இருந்தா என்ன, மக்களுக்கு நல்லது நடந்தா சரின்னு மீண்டும், மினி பஸ் இயங்க ஆரம்பிச்சுது.


அப்போ பல விதிகளில் தளர்வு கொண்டுவந்தாங்க. அந்த விதி மீறல்களால், நகரங்களிலும், அரசு பஸ்கள் இயங்கும் வழித்தடங்களிலும் முழுமையா மினிபஸ் இயங்க ஆரம்பிச்சது. இப்பவும் ஈரோடு, திருச்சி பகுதிகளில் பார்த்தீங்கன்னா, மினிபஸ் முழுமையா அரசு பஸ் வழித்தடத்திலேயே, அதுவும் நகர்ப்புறத்திலேயே இயங்கறதை பார்க்கலாம்.

இதில் என்ன விளைவுகள் வந்ததுன்னா, நகர்ப்புறத்தில் நிறைய காசு பார்க்க ஆரம்பிச்ச மினி பஸ்கள், கிராமப்புற சேவைகளை குறைச்சிகிட்டாங்க. மீண்டும் கிராம மக்கள் கற்காலத்துக்கு போக ஆரம்பிச்சாங்க. இன்னொரு பக்கம், நகர சாலைகளில் மினி பஸ்கள் இயங்கறதால் அரசு பஸ்கள் நஷ்டமடைய ஆரம்பிச்சது. சூப்பரான வண்டிகள், டிஜிட்டல் ஸ்டீரியோ, எங்கே வேணும்னாலும் நிறுத்தி ஏறி இறங்கற வசதின்னு நகர மக்கள் மினி பஸ்சை விரும்ப ஆரம்பிச்சாங்க.

ஆனா, எந்த காரணத்துக்காக, எந்த மக்களுக்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ, அவங்க மீண்டும், பல பகுதிகளில் நடந்து தான் மெயின்ரோட்டுக்கு வந்து பஸ் பிடிக்கணும்னு ஆகிப்போச்சு.

விடுங்க. அது அவங்க தலையெழுத்து. நாம நம்ம பயணங்களை பார்ப்போம்.

நான் முதல் முதலில் பயணிச்ச நெடுந்தூர பஸ் பயணம், திருவனந்தபுரம்-சென்னை. ம்த்தியானம் 12 மணிக்கு திருவனந்தபுரத்தில் எடுத்து நாகர்கோவிலுக்கு சாயங்காலம் 3 மணிக்கு வந்தது. அங்கெ இருந்து 4 மணிக்கு எடுத்து திருநெல்வேலிக்கு 6.30க்கு வந்தது. மதுரை வரும்போது மணி 12. மறுநாள் காலையில் 9 மணிக்கு தான் சென்னைக்கு வந்தது. நொந்து நூடுல்சாகி, அந்து அவலாகி, வெந்து வெறுப்பாகி பஸ்ல இருந்து வெளியே வந்தேன். இத்தனைக்கும் அது தமிழக அரசு ‘விரைவு’ போக்குவரத்துக்கழகம்.

அரசு பஸ்களிலேயே எனக்கு பிடிச்ச பஸ் சேரன் தான். சுத்தமா வெச்சிருப்பாங்க, அழகான பஸ்கள். ஆனா இப்போ படு கேவலமா இருக்கு! தந்தை பெரியார் போக்குவரத்து கழக பஸ்கள் கொஞ்சம் வித்தியாசமானது. எல்லாரும் ஹைடிராலிக் சஸ்பென்ஷன், ஏர் சஸ்பென்ஷன்னு வெச்சிருக்காங்க. ஆனா பெரியாரில் மட்டும் விவில்லர் சஸ்பென்ஷன். பஸ் நல்ல நீளம். ஆனாலும் உறுதியான சஸ்பென்ஷன். வட தமிழகத்தில் பெரியாரை அடிச்சிக்க இன்னொரு பஸ் இல்லை.

பார்த்தாலே கொஞ்சம் கேவலமான டிசைனா எனக்கு பட்டது அன்னை சத்தியாவும், கட்டபொம்மனும் தான். நேசமணி உறுதியான பஸ். தமிழகத்திலேயே மிக அதி விரைவான பஸ் நேசமணின்னு சொல்லுவாங்க. நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரூட்டில் கேரளா பஸ்சுக்கு நிகரா ஸ்பீடா போவாங்களாம். கேள்விப்பட்டிருக்கேன்.

தீரன் சின்னமலை பஸ்சின் சென்னை-கரூர் பஸ் ரொம்ப அழகு. அது ஒரு டீலக்ஸ் பஸ். சென்னையில் இருந்து கரூர் போகும்போது, திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டு கிட்ட ஒரு யூ டர்ன் ஸ்பீடா அடிச்சு உறையூர் ரோட்டில் நிக்கும் பாருங்க. செம்மெ. அந்த திரில்லுக்காகவே அதில் பயணிக்கலாம். தீரன் சின்னமலை பஸ் அழகான டிசைன், பெயிண்டிங் எல்லாம் சூப்பரா இருக்கும்.

எல்லா போக்குவரத்து கழக பஸ்களுக்கும் இங்கிலீஷில் பெயர் சுருக்கம் TC ன்னு தான் முடியும் (PTC, TTC, DCTC, KTC ன்னு) ஆனா சேரன், சோழன் னு ரெண்டு C, பல்லவன் பாண்டியன்னு ரெண்டு P இருந்ததால், அந்த ரெண்டு பஸ்களுக்கு மட்டும் CTC (Cheran), CRC (Cholan) & PTC (Pallavan), PRC (Pandiyan) ன்னு வெச்சிருந்தாங்க. எனக்கு ரொம்ப நாளா இந்த CRC, PRC க்கு அர்த்தம் தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அது ஒரு அசட்டு காலம்!

நான் இது வரைக்கும் பயணிச்ச பஸ்களில் விபத்தில் சிக்கினதில்லை. ஆனா விபத்துக்களை நேரடியா பார்த்திருக்கேன். எனக்கு முன்னால் போன பஸ் விபத்துக்குள்ளாகி பயணிகள் அலறியடிச்ச சத்தம் இப்பவும் ஞாபகத்தில் இருக்கு.

வாழ்க்கையில நாம யாரை நம்புறோமோ இல்லையோ, நல்லா தெரிஞ்ச நண்பன், கூடவே இருக்கிற அப்பா அம்மா இவங்க மேலே கூட இல்லாத நம்பிக்கையை நாம பஸ் டிரைவர் மேலே வெச்சிருக்கோம். நாளைக்கு காலையில் நம்மளை உருப்படியா நல்லபடியா இறக்கிவிட்டுடுவாருன்ற நம்பிக்கையில் தான் பல பயணிகள் நிம்மதியா தூங்கிட்டு வர்றாங்க. அப்படி ஒரு நம்பிக்கையான மக்கள் இருக்காங்கன்ற அந்த பொறுப்புணர்வும், கடமையும் தான் நம்ம டிரைவர்களை மரியாதைக்குரியவங்களா வெச்சிருக்கு. அவங்க ஒரே ஒரு செகண்டு அசந்தாலும் கூட 40 பேருக்கு உத்திரவாதம் இல்லை. மத்த மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பஸ் விபத்து குறைவுன்றது எவ்வளவு சந்தோஷமான விஷயம்?

இன்னும் பேசுவோம்!

No comments:

Post a Comment

Printfriendly