Wednesday, November 28, 2012

2G - விலகும் திரை


ந்திய வரலாற்றின் இரண்டாவது மிகப்பெரிய ஊழல் என வர்ணிக்கப்பட்ட 2G ஊழல் இப்போது இந்திய வரலாற்றின் மிகப்பெரிய பொய் என மெல்ல மாறிவந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த பதிவு எழுதப்படுகிறது.
ஏற்கனவே 2G வழக்கு தொடர்பாக 2 பதிவுகள் ( விவரங்கள் கீழே ) இதே வலைப்பூவில் எழுதப்பட்டிருப்பதால் முன்கதை பின்கதை கிளைக்கதைகளை எல்லாம் விட்டுவிட்டு நேரடியாக சொல்லவந்த விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்.
கடந்த அக்டோபர் 31ம் தேதி மத்திய தணிக்கை துறையின் அதிகாரியாக இருந்த ஆர்.பி.சிங் அவர்கள் ஓய்வு பெற்றார். அவர் தான் 2G விவகாரத்தை தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பித்தவர்.
அரசு ஊழியராக இருந்தவரை அமைதியாக இருந்தவர், ஓய்வு பெற்றபின் சுதந்திரமாக தனது தரப்பு வாதத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் சாரம்சம் இது தான்:
“2G ஏலமுறையில் இழப்பீடு ஏற்பட்டதாக நான் சொல்லவேயில்லை. எனது உயர் அதிகாரிகள் தான் அப்படி எழுதி என்னை கையெழுத்திட கட்டாயப்படுத்தினார்கள். வரைவு அறிக்கையில் 1,76,000 கோடி இழப்பு என்று இருந்ததை நான் நீக்கினேன். காரணம், அதற்கு உரிய நியாயமான காரணங்களோ, ஆதாரங்களோ இல்லை என்பது தான். ஆனால், மீண்டும் அதே தொகையோடு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு அதில் நான் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டேன்.”
இதில் இன்னுமொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், “இந்த முறைகேட்டுக்கு திட்டமிட்டு கொடுத்து CAG அலுவலகத்துக்கே வந்து, அறிக்கை தயாரிக்க முழுமையாக துணை நின்றது பா.ஜ.கவின் முரளி மனோகர் ஜோஷி தான்” என்றும் அவர் சொல்லியிருந்தார். பின்னர் சில நாட்களிலேயே நான் அப்படி எதுவும் சொல்லவில்லை என மறுத்து விட்டார்.
இந்த விவரங்களின் அடிப்படையில் மீண்டும் 2G வழக்கு விவகாரத்தை விவாதிக்கவேண்டும் என திமுக பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் மிக சில உள்ளன.
பா.ஜ.க காங்கிரஸ் மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து அதன் மதிப்பை குலைக்க முயற்சிக்கிறது. வேறு எதை பற்றி சொன்னாலும் பிரச்சனை என்பதால் ஸ்பெக்டிரத்தை கையில் எடுத்திருக்கிறது. காரணம், இந்த நிமிடம் வரை இந்தியாவில் ஸ்பெக்டிரத்துக்கான மதிப்பு என்ன என்பது யாருக்குமே தெரியாது. யூகமான விலை தான் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே CAG யின் அதிகாரிகள் துணையுடன், மேலும் யூகமான மதிப்பீட்டுப்படியான குற்றச்சாட்டை முன்வைத்தால், அந்த குற்றச்சாட்டு சரியா தவறா என்றெல்லாம் யாரும் சிந்திக்க முன்வரமாட்டார்கள். CAG சொல்வதால், அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவார்கள். மேலும், ஸ்பெக்டிரத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படாததால், அரசுக்கு நஷ்டம் என சொன்னால் அதை யாராலும் மறுத்து பேச முடியாது. மீடியா மூலம் இது பெரும் பரபரப்புக்குள்ளானால் மொத்த தேசமும் காங்கிரஸ் மீதான மதிப்பை மறுபரிசீலனை செய்யும். அது பா.ஜ.கவுக்கு சாதகமாக அமையும் என்கிற மிக மிக வலுவான, தெளிவான, சிறப்ப்பான திட்டமிடல் மூலம் இந்த 2G ஊழல் என்கிற குற்றச்சாட்டு கட்டமைக்கப்பட்டிருப்பதாக எல்லோராலும் எளிதாக யூகிக்க முடிகிறது.
உண்மையில், இந்த திட்டம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆர்.பி.சிங் மட்டும் உண்மையை சொல்லியிருக்காவிட்டால், இந்த நிமிடம் கூட 2G யால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படும் கதையை எல்லோரும் தொடர்ந்து நம்பிக்கொண்டு தான் இருந்திருப்பார்கள்.
சமீபத்தில் நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பில் தரப்பட்ட விவரத்தின் படி, 2G விவகாரத்தில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்பதோ, அப்படி ஏற்பட்டிருந்தால் அதன் மதிப்பு என்ன என்பதோ அது குறித்த விவரமோ ஆதாரப்பூர்வமாக இல்லை என தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
அப்படியெனில் 2G வழக்கு மற்றும் 2G ஒதுக்கீடு தொடர்பான பரவலான குற்றச்சாட்டுக்களுக்கு என்ன பதில்? அவையெல்லாமே தவறான குற்றச்சாட்டுக்களா? இது தான் இப்போது மக்கள் முன் உள்ள மிக முக்கியமான கேள்வி.
அவற்றில் மிக சில குற்றச்சாட்டுக்கள் என்னவென்று அலசலாமா?
2G விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மாற்றி முன்னுக்கு கொண்டுவந்தது ஏன்? அதனால் பல நிறுவனங்கள் விண்ணப்பிக்க முடியாமல் போய்விட்டது. இது சில நிறுவனங்களுக்கு ஆதரவான முடிவு அல்லவா?
2G ஒதுக்கீட்டை பொறுத்தவரை, இது முதலில் வருவோருக்கு முதலில் ஒதுக்கீடு முறையில் ஒதுக்கப்படுவது. இப்படியான ஒதுக்கீட்டு முறையை பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது தான் முடிவெடுத்து அமல்படுத்தியது. 2G ஸ்பெக்டிரத்தை பல முறை இதே முறையில் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது கடைசியாக கொஞ்சமாக அரசிடம் மிச்சமிருக்கும் 2G ஸ்பெக்டிரத்தை கிட்டத்தட்ட கிளியரஸ் சேல் ரீதியில் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். காரணம் 3G மற்றும் 4G தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வந்துவிட்டபடியால் 2G தொழில்நுட்பம் பழையதாகிவிட்டது. அதனால் 2G ஸ்பெக்டிரத்தில் மிச்சமிருக்கும் கொஞ்சம் நஞ்சத்தையும் விற்றுவிட்டால் 2G முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பது தான் அரசின் முடிவு.
இப்படி முதலில் வருவோர்க்கு முதலில் ஒதுக்கிய வகையில் முதல் இரண்டு நாட்களிலேயே அரசிடம் மிச்சமிருந்த மொத்த 2G ஸ்பெக்டிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கடைசி தேதி என்பதற்கு எந்த மதிப்பும் இல்லை. கடைசி தேதி எதுவாக இருந்தாலும், எத்தனை பேர் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு 2G ஸ்பெக்டிரம் ஒதுக்க முடியாது. காரணம் முதல் இரு நாட்களிலேயே முடிந்துவிட்டது. எனவே கடைசி நாளை மாற்றியதால் எந்த முறைகேடும் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
2G லைசன்ஸ் வாங்கிய நிறுவனங்கள் லைசன்ஸ் விலையை விட மிக அதிகமான தொகைக்கு தங்கள் நிறுவன பங்குகளை விற்றிருக்கின்றனவே. அப்படியென்றால் 2G லைசன்ஸின் விலை அதிகம் தானே?
முதலில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். நிறுவனங்கள் லைசன்ஸை விற்கவில்லை. அதை விற்கவும் முடியாது. அவர்கள் விற்றது அவர்களது நிறுவனத்தின் பங்குகளை தான். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
2G லைசன்ஸ் வாங்கிய நிறுவனம், 2G வசதியை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அதிக அளவில் முதலீடு செய்யவேண்டி இருக்கிறது. அதாவது எல்லா இடங்களிலும் டவர்கள், டிரான்ஸ்மிஷன் செண்டர்கள் என பல கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டி இருக்கிறது. அதற்கான நிதியை பல வகைகளில் திரட்டுகிறார்கள். அதில் ஒரு வழிமுறை தான் தங்கள் நிறுவனத்தின் பங்கு விற்பனை என்பதும். 2G லைசன்ஸ் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் அந்த நிறுவனத்தின் பங்குகளுக்கென்று ஒரு மதிப்பு விலை இருக்கிறது. அப்படியான தங்கள் நிறுவன பங்குகளை விற்று முதலீட்டுக்கான நிதியை திரட்டுகிறார்கள்.
2G லைசன்ஸ் மதிப்பு என்பது மிக சிறிய தொகை. ஆனால் அதை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைபு வசதிகள், அதற்கான நிதி ஆதாரங்களின் தேவை என்பதெல்லாம் மிக மிக அதிகமானது. எனவே அதை தங்களின் பங்குகள் மூலம் (நிறுவனத்தை மறைமுக அடகு வைப்பதன் மூலம்) நிதி திரட்டுகிறார்கள். இதை 2G யின் விலை என கருதுவது தவறு.
இவைபோன்ற பல கேள்விகள் மிக மிக சிறுபிள்ளைத்தனமானதும், இயல்பற்றதாகவுமே இருக்கிறது.
இப்போது மெல்ல விலக தொடங்கி இருக்கும் திரை, முழுமையாக விலகி, உண்மையில் 2G விஷயத்தில் யார் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் வெளிவரும் நாள் தொலைவில் இல்லை என்பது மட்டும் இப்போது புரிகிறது.
 
தொடர்புடைய பதிவுகள்

Tuesday, November 27, 2012

தமிழக சூரிய மின்சக்தி கொள்கை - அலசல்



மிழ்நாடு அரசு சமீபத்தில் தனது சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இப்போது அந்த கொள்கையின் சிறப்புகள் பற்றியும், பெருமைகள் பற்றியும் மிக பிரபலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. எங்கே யாரை சந்தித்தாலும், வீட்டுக்கு சோலார் போட்டாச்சா என்கிற ஒரு கேள்வியும், அதன் அடி நாதமாக சோலார் போடலைன்னா உன் வாழ்க்கையே இருண்டு விடும் டைப் விசாரிப்புகளும் கேட்க தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் இப்போது நிலவி வரும் மிக மோசமான மின் வெட்டு பிரச்சனையை முதல்வரை தவிர தமிழகத்தின் அனைத்து குடிமக்களும் நன்கு அறிவீர்கள். எனவே அதை பற்றி மீண்டும் மீண்டும் விரிவாக விளக்கத்தேவையில்லை என கருதுகிறேன். இது பற்றி முழுமையாக விவரமாக அறிந்திராதவர்கள் (பணி நிமித்தமாகவோ வேறு காரணங்களாலோ பிற மாநிலங்கள் / நாடுகளில் வாழும் தமிழர்கள்) “இருண்ட தமிழகம்” எனும் எனது பதிவை படித்தால் ஓரளவு விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் இப்போதைய மின் நிலைமை – தேவையும் உற்பத்தியும்:
தமிழக அரசு வெளியிட்டிருக்கும் கொள்கை குறிப்பின் படி, தமிழகத்தின்  மின் நிலையை மிக சுருக்கமாக சொல்லவேண்டுமானால்:
இது வரை தமிழகத்தில் ஒரு நாளில் பதிவான அதிக பட்ச மின் உபயோகம் என்பது கடந்த 19.07.2011 ல் 10859 மெ.வா தான். (மின் கொள்கை – பக்கம் 10) இதர நாட்களில் இதை விட குறைவு என்பது தானாகவே நாம் புரிந்துகொள்ளக்கூடியது தான்.
தமிழக அரசுக்கு சொந்தமான மின் நிலையங்கள், மற்றும் இதர வழிகள் மூலம் நீர், அனல், கரி, வாயு மூலமான மின்சார உற்பத்தி வழியாக (மரபு வழி மின் உற்பத்தி) ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யக்கூடிய மின் சக்தி – 10364.5 மெ.வா. (மின் கொள்கை – பக்கம் 13). அதாவது, எல்லா மின் நிலையங்களும் முறையாக இயங்கினால் நமக்குள்ள மின் தட்டுப்பாடு என்பது வெறும் 500 மெ.வா தான்.
இது தவிர மரபு சாரா எரிசக்தி மூலமான மின்சார உற்பத்தி, அதாவது காற்று, சூரிய ஒளி, சாண எரிவாயு, சிறிய நீர் மின் நிலையங்கள், கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழக அரசால் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவு – 7,572.06 மெ.வா (மின் கொள்கை – பக்கம் 13)
ஆகமொத்தம் தமிழகத்தால் கிட்டத்தட்ட 17936.56 மெ.வா மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான கட்டமைப்புக்கள் இருக்கின்றன. இதுவரையும் அப்படி தான் அவை செயல்பட்டும் வந்திருக்கின்றன.
இதில் உறுதியாக உற்பத்தி ஆகக்கூடிய (மரபு வழி மின்சார உற்பத்தி) 10,364.5 மெ.வா என்பதே தமிழகத்தின் மின் தேவைக்கு போதுமானது.
இதனால் தான் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் வரையிலும் அப்போதைய தமிழக அரசு சென்னையில் 2 மணிநேரமும் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் 4 மணிநேரமும் மின் வெட்டை அமல் செய்து சீரான மின்சாரத்தை எல்லோருக்கும் வழங்கியது. அதிலும் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், எப்போதெல்லாம் மின் வெட்டு என்பது முறையாக அறிக்கையாக வெளியிடப்பட்டு அதன் படி முறையாக மின் வெட்டு அமல்செய்யப்பட்டது. இது மின் வெட்டு நேரத்தை கணக்கிட்டு நமது பணிகளை திட்டமிட்டுக்கொள்ள பெரும் உதவியாக இருந்தது.
ஏன் இந்த அளவுக்கு மின் வெட்டு?
நாம் முன்பே பார்த்ததை போல, இப்போதைய மின் தேவை என்பது கிட்டத்தட்ட 11000 மெ.வா என்கிற நிலையில் இருக்கிறது. அரசின் உற்பத்தி திறன் 10364 மெ. வா என்கிற அளவில் இருக்கிறது. ஆனால் உற்பத்தி ஆவதென்னவோ 7000 மெ.வா அளவு தான். இதன் காரணமாக 3000-4000 மெ.வா மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதை சரிக்கட்ட தான் மின் வெட்டு அமலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த 3000-4000 மெ வா மின் தட்டுப்பாடை சமன் செய்ய சென்னையில் 2 மணிநேரமும் பிற மாவட்டங்களில் 4 மணிநேரமும் மின் வெட்டு செய்வது; உயர் அழுத்த மின் விநியோகத்தில் 40% குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. (மின் கொள்கை – பக்கம் 27) ஆனால் நிஜத்தில் நிலைமை இன்னமும் மோசம்.
இப்போதைய நிலைமை என்னவென்றால், தென் தமிழகத்தில் 16 மணிநேரம் வரையும், பிற மாவட்டங்களில் 12 மணிநேரம் வரையும், சென்னையில் 3 மணிநேரம் வரையும் மின்வெட்டு உள்ளது. மேலும் எந்த நேரத்தில் மின் தடை, எந்த நேரத்தில் மின் வசதி என்பதெல்லாம் தெளிவாக வரையறை செய்யப்படாமல், நினைத்த நேரத்தில் மின் வெட்டு அமலாகி மக்களின் வாழ்க்கையே மெல்ல மெல்ல நாசமாகி வருகிறது.
கடந்த ஆட்சியில் எந்த காரணம் கொண்டும் இரவில் மின் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்ட நிலை மாறி, இப்போது இரவில் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால் ஏற்பட்ட தூக்கமின்மை மற்றும் அதன் பாதிப்புகளான வாகன விபத்துக்கள், சமூக கட்டமைப்பு சீர்குலைவு என்பவை எல்லாம் பலரும் அனுபவிப்பதே!
மேலும் தட்டுப்பாட்டை போக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கும் நடவடிக்கையிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதெல்லாம் சரி, 10364 மெ.வா மின் உற்பத்தி செய்யும் திறன் உடைய தமிழக அரசு ஏன் 7000 சொச்சம் மெ.வா மட்டுமே உற்பத்தி செய்கிறது? ஏன் அது முழுமையான உற்பத்தி அளவை எட்டவில்லை? கடந்த ஆண்டு வரை முழு மின் உற்பத்தி ஆகி வந்த நிலையில் இப்போது ஏன் இந்த திடீர் உற்பத்தி குறைவு?
பல மின் நிலையங்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அவற்றை அரசு செப்பனிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது என மின்வாரிய நண்பர்கள் சொல்கிறார்கள்.
கடந்த ஆட்சி, எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 4000 மெ.வா மின் உற்பத்திக்கான புதிய மின் திட்டங்களை அமைத்து வந்தது.
இன்றைய சூழலில், தமிழக மின் உற்பத்தி நிலையங்களை சீரமைத்து, புதிய மின் திட்டங்களை விரைவுபடுத்தினாலே, 14000 மெ.வா மின் உற்பத்தி கிடைகும் (மரபு சாரா மின் உற்பத்தியான 7000 மெ.வா தனி. அது இதில் சேர்க்கப்படவில்லை!)
ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது அரசு புதிதாக அறிவித்திருப்பது தான் தமிழக சூரிய மின் சக்தி கொள்கை 2012.
சூரிய மின் சக்தி கொள்கை என்ன சொல்கிறது?


சுருக்கமாக சொல்வதானால், வரும் 2015ம் ஆண்டுக்குள்ளாக 3000 மெ.வா மின்சாரத்தை சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் எட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதை எட்டும் வகையில் தொழிற்சாலைகள், வீடுகள் உட்பட அனைத்து மின் உபயோகிப்பாளர்களும் 6% க்கு குறையாத மின் உற்பத்தியை தாங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 2013 ம் ஆண்டு டிசம்பர் வரை இது 3% என்கிற அளவிலும் அதன் பின் ஜனவரி 2014 முதல் 6% என்கிற அளவிலும் இந்த குறைந்த பட்ச உற்பத்தி அளவு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது (தமிழக சூரிய ஒளி கொள்கை – பக்கம் 8 & 9)
இதை நிறுவுவதற்கான செலவில் 30% சதவிகிதம் வரை அரசு மானியம் கிடைக்கும் என்றும், இந்த திட்டத்தை நிறுவி கொடுப்பதற்கான முகவர்கள் எல்லா மாவட்டங்களுக்கும் அமர்த்தப்படுவார்கள் எனவும், அவர்களிடம் அரசு மானியத்தை கழித்து விட்டு மீதி தொகையை செலுத்தினால் போதும் எனவும் அரசு சொல்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு 300 நாட்களுக்கு குறையாமல் சூரிய ஒளி வசதி கிடைப்பதால், ஆண்டு முழுமைக்குமான மின் தேவையை அவரவர்களே அவரவர் இல்லங்களில் ஏற்படுத்திக்கொள்ளலாம். அரசை இனி எதிர்பார்க்க தேவையில்லை. எனவே இது ஒரு நல்ல அற்புதமான திட்டம் என பல தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.
ஒரு சாதாரண குடும்பத்தினரின் வீட்டுக்கு 1 கி.வா மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சூரிய மின் உற்பத்தி அமைப்பு என்பது கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் ஆகிறது. இதில் 30% மானியம் போக மீதமுள்ள தொகைக்கு வங்கி கடனும் கிடைக்க வழி இருக்கிறது. எனவே எல்லோரும் அவரவர் வீடுகளுக்கு சூரிய மின் சக்தியை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை.
இந்த மானியத்தை மாநில அரசு வழங்குகிறதா, மத்திய அரசு வழங்குகிறதா என்பது பற்றி இன்னமும் தெளிவு இல்லை. மத்திய அரசு ‘ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய ஒளி திட்டம்’ (JNNSM-Jawaharlal Nehru National Solar Mission) மூலம் நாடு முழுவதும் ஏற்கனவே இப்படி ஒரு திட்டத்தை பல ஆண்டுகளாக அமல் செய்து வருகிறது. அதில் 30% சதவீத மானியத்தை அவர்கள் தருகிறார்கள்.
அந்த திட்டத்தை தான் தமிழக அரசு தனது திட்டம் போல அறிவித்து, மத்திய அரசிடமிருந்து மானியத்தை வாங்கி கொடுத்து தனது திட்டம் போல அறிவிக்கிறதா என்பது பற்றியும் தெளிவான விவரங்கள் இல்லை. தமிழ்க அரசு தனது கையில் இருந்து இந்த மானியத்தை வழங்க இருக்கிறதா என்பதும் புரியவில்லை. ஏனெனில் சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த நிதி நிலை அறிக்கையில் இந்த மானியத்துக்கான ஒதுக்கீடு என எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
மத்திய அரசு நேரடியாக மக்களுக்கு வழங்கி வரும் மானியத்தை இடையில் நுழைந்து தமிழ்க அரசு வாங்கி மக்களுக்கு தன் பெயரில் தர இருப்பதாக சொல்லப்படும் செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது எனவும் தெரியவில்லை.
எனது பார்வை:
மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு மிகப்பெரும் மின் நிலையங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. அங்கே பணியாற்றுவோருக்கெல்லாம் மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் மின் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பழுதடைந்திருக்கும் மின் நிலையங்களை சீராக்கி முழு மின் உற்பத்தியை எட்டினாலே தமிழ்கத்துக்கு தேவையான மின் வசதி கிடைத்து விடும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு சூரிய மின் சக்தியை வீடுகளில் அமைப்பதை கட்டாயப்படுத்துவது சரியல்ல.
நாம் வரியும் கட்டி, அதில் மின் நிலையமும் அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தையெல்லாம் பெரும் தொழிற்சாலைகளுக்கு கொடுத்துவிட்டு, மின்வெட்டால் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருப்பதும், நமக்கு மின்சாரம் தேவையென்றால் நாமே செலவு செய்து வீட்டுக்கு மின் வசதி செய்துகொள்ளவேண்டும் என்பதும், சரியான அரசு நிர்வாகமாகவோ, சிறந்த முடிவாகவோ எனக்கு தோன்றவில்லை.
இத்தனை மின் நிலையங்கள் ஊழியர்கள் கருவிகள் எல்லாம் மக்கள் பணத்தில் அமைந்திருப்பதே அந்த மக்களுக்கு முறையான மின் வசதியை செய்து கொடுப்பதற்கு தானே? தொழிற்சாலைகளுக்கு அரசு மின்சாரம் தரும், மக்களுக்கு அவர்களே மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ளவேண்டும் என்கிற முடிவு நியாயமானதாக படவில்லை.


சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய விரும்புபவர்கள் தாமாக அதை செய்து கொள்வதில் மாற்றுக்கருத்து இல்லை. 2 லட்சம் ரூபாய் செலவு செய்து சூரிய மின் உற்பத்தி வசதியை அமைத்து, அதை 5 ஆண்டுக்கொருமுறை மின்கலம் மாற்றி பராமரிக்கும் திறனுள்ளவர்கள் அதை அமைத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.
ஆனால் அரசு, தனது மின் உற்பத்தியை மேம்படுத்த முயற்சிக்காமல், மக்கள் மின் உற்பத்தியை செய்யவேண்டும் என கட்டாயப்படுத்துவது நியாயமானதாகவும் தோன்றவில்லை.
நல்லவேளையாக தமிழகத்தில் மக்கள் நலன் கருதும் கட்சிகள் இல்லாததால், நாம் அரசின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியதாகிறது.
வாருங்கள். வீட்டுக்கூரையில் சோலார் பேனல்கள் அமைத்து நமக்கு நாமே மின் உற்பத்தி செய்து கொள்வோம். கூடுதல் இணைப்பாக சாலையோர சூரிய பேனல்களின் வெயில் கூச்சொளி மூலம் வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கவும் செய்யலாம்!
 
ஆவணங்கள்:

Printfriendly