Sunday, June 30, 2013

அரசு காய்கறி கடை - பல்நோக்கு திட்டத்தின் புள்ளி!


சென்னையில் 31 மலிவு விலை காய்கறிகள் கடைகளை முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

கடந்த வாரம் இப்படி ஒரு செய்தி நாளிதழ்களில் ஃபிளாஷ் ஆனபோது அது பத்தோடு பதினொன்றாக தான் பார்க்கப்பட்டது. அதன் சரியான வீரியமும் தாக்கமும் பலரும் உணர்ந்திருக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்பு கூட கிலோ 110 ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்த சின்ன வெங்காயம் இந்த கடைகளின் வரவுக்கு பின் இரண்டே நாளில் கிலோ 55 ரூபாய்க்கு குறைந்தது. இதே கதை தான் அனைத்து காய்கறிகளுக்கும்.

இடைத்தரகர்கள் மூலமாக புனைவாக விலையேற்றி விற்கபட்ட காய்கறிகளின் விலைகளை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அரசே நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்க தொடங்கியதில், சட்டென வெளி மார்க்கெட்டிலும் இயல்பான விலைக்கு இறங்கிவிட்டது.

இது கிட்டத்தட்ட மத்திய அரசு கொண்டுவர எண்ணும், சில்லறை விற்பனையில் அந்நிய முதலீடு போன்றது தான். நேரடி கொள்முதல், நேரடி விற்பனை. ஆனால் அது தனியார் மூலம் நடைபெறும். இப்போது தமிழக அரசு கொண்டு வந்திருப்பது அரசு நிறுவனமான TUCS மூலமாக. அது தான் வித்தியாசம். அந்நிய முதலீடு மூலம் கடைகள் அமைத்தால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என பெரும்கூச்சலிட்டு போராடிய வணிகர்கள், அதை விட பன்மடங்கு தங்கள் விற்பனையை பாதிக்கும் இந்த அரசு கடைகள் பற்றி மூச்சு விடவில்லை. அதற்கான காரணம் எல்லோரும் அறிந்தது தான்!

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட உழவர் சந்தை திட்டத்துக்கு பெயர் மாற்றி ஜெ. இந்த திட்டத்தை கொண்டுவந்தார் என்கிற ஒரு அரைகுறை தகவலும் வேகமாக இணைய தளங்களில் உலா வந்தது. உழவர் சந்தை என்பது அரசு அமைத்து கொடுத்த இடம் மட்டுமே. அங்கே விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக அவர்களே கொண்டுவந்து விற்றுக்கொள்ளலாம் என்பது தான் ஏற்பாடு. ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்ததன் முக்கிய காரணம், பல விவசாயிகள் தங்கள் கைக்காசு செலவழித்து விவசாய பொருட்களை அங்கே கொண்டு செல்ல விரும்பாதது. அரசு பேருந்துகளில் இலவசமாக கொண்டு செல்லலாம் என அரசு அறிவித்திருந்தாலும், பெரும்பாலான கண்டக்டர்கள் அதை பின்பற்றவில்லை. விவசாய பொருட்களை பஸ்களில் ஏற்ற மறுத்தார்கள். இதன் பயனாக, பிற தரகர்களும் மளிகை கடைக்காரர்களுமே உழவர் சந்தையை பயன்படுத்த தொடங்கினார்கள். எனவே அது விலையில் பெரிய வித்தியாசம் ஏற்படுத்தவில்லை. அப்படியாக அந்த திட்டம் மெல்ல முடங்கியது.

ஆனால், இப்போதைய திட்டம் முற்றிலும் வேறு மாதிரி. ரிலையன்ஸ் ஃபிரஷ் நிறுவனத்தின் மாடலில் அமைந்தது. அதாவது அரசு நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, தனது கடைகள் மூலமாக விற்பனை செய்வது. ஏற்கனவே சிந்தாமணி, அமுதம் போன்ற கடைகளை நடத்தி வரும் அரசு அதன் ஒரு அங்கமாக இந்த காய்கறி கடைகளையும் தொடங்கி இருக்கிறது

சென்னையில் மட்டும் 31 கடைகள் என்பதன் மற்றும் சில பயன்களும் கவனிக்கப்படவேண்டியவை. ஏற்கனவே எனது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு குறித்த தொடரில் சொல்லியதை போல, இன்றைய தேதியில் நாட்டின் மிகப்பெரிய வரி ஏய்ப்பை செய்துகொண்டு வருவோர் ‘மளிகை கடை’யினர் தான். அதை குறைத்து அரசுக்கு வரி வருவாயை அதிகரிக்கவும் இந்த காய்கறிகடைகள் அரசுக்கு உதவும். உதாரணமாக, நீங்கள் எப்படியும் வாரத்துக்கு ரூ.500 க்கு காய்கறிகள் / மளிகை பொருட்கள் உங்கள் வீட்டுக்கு வாங்குவதாக வைத்துக்கொள்வோம். எப்படியும் உங்களின் அந்த செலவு தவிர்க்கமுடியாதது. ஆனால், அதை உங்கள் பக்கத்திலிருக்கும் மளிகை கடையில் வாங்குகையில் அதில் இருந்து சல்லிக்காசு கூட அரசுக்கு வரியாக கிடைப்பதில்லை. ஆனால், அதே செலவை அரசு கடையில் செய்தால், அரசுக்கு 10% வருவாய், அதாவது ரூ.50 வரியாக கிடைக்கும். இப்படி தமிழகம் முழுதும் ஒரு நாளில் மளிகை கடையில் வியாபாரமாகும் தொகை அதிலிருந்து அரசுக்கு கிடைக்கக்கூடிய வரியை நீங்களே குத்துமதிப்பாக கணக்கிட்டு கொள்ளலாம்.

ஒருவேளை மதுவிலக்கு கொண்டு வரும் பட்சத்தில் அந்த கடைகளையெல்லாம் மளிகை/காய்கறி கடைகளாக மாற்றுவதன் மூலம் தெருவுக்கு தெரு அரசு காய்கறி கடைகள் மூலம் மலிவான விலையில் நமக்கு அன்றாட காயகறிகள் கிடைப்பதோடு, விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும். இப்படியான மல்டிப்பிள் மாங்காய் அடிக்கும் கல் இந்த கடை.

சமீப காலமாகவே தமிழக அரசு நிறைய அட்டகாசமான அறிவிப்புக்களை வெளியிட்டு வந்திருக்கிறது. அவை மீடியாக்களால் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதோ என்கிற வருத்தம் எனக்கு உண்டு. அவற்றில் சிலவற்றை ஒரு வரி சுருக்கமாக உங்கள் கவனத்துக்கு:

Ø  குன்னூரில் தமிழ்நாடு தேயிலை கழக தோட்டத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் டான்டீ (TANTEA) யின் மேம்படுத்தப்பட்ட வகை அறிமுகம் செய்தது.

Ø  ஏகபோகமாக தனியாரிடம் இருக்கும் கிரானைட் விற்பனையை அரசின் டாமின் (TAMIN) மூலமாக அரசே விற்க முடிவெடுத்திருப்பதுடன், அதை ஏற்றுமதி செய்யவும் உத்தேசித்திருப்பது.

Ø  அரிசி விலை கட்டுக்கடங்காமல் செல்வதை தடுக்க அரசே ஒரு கிலோ அரிசி ரூ.20/-க்கு விற்பனை செய்ய முடிவெடுத்தது (இதில் அரிசி விலை கட்டுக்குள் வந்தது)

Ø  ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு மிக மிக மலிவான விலையில் உணவு பொருட்கள் கிடைக்க செய்தது. ஏற்கனவே திமுக அரசில் ரூ.20/-க்கு தான் எல்லா ஹோட்டல்களும் மதிய உணவு தரவேண்டும் என இட்ட உத்தரவை எந்த ஹோட்டலும் பின்பற்றவில்லை. இப்போது, அரசே ஹோட்டல் நடத்துவது, வேறு வழியின்றி பல தனியார் ஹோட்டலின் விலைப்பட்டியலை திருத்தி குறைக்க வழி செய்தது.

Ø  அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20/- வரை கொடுத்து வாங்குவதை தவிர்க்க அரசே ரூ.10/- க்கு தண்ணீர் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது.

Ø  மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான தினை, கேழ்வரகு, சாமை, தேன் போன்றவற்றை அரசே நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவு கடைகள் மூலம் விற்பனை செய்து அவர்களது வாழ்க்கை வருவாய்க்கு வழி செய்திருப்பது.

என பல பல திட்டங்கள் நீளமாக இருக்கிறது.

இவை எல்லாமே ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக சாதிக்க நினைப்பது இவற்றை தான்.

Ø  நுகர்வோருக்கு (மக்களுக்கு) நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்கவேண்டும் (எப்படியும் அவர்கள் செலவு செய்ய தயாராக தான் இருக்கிறார்கள். அந்த செலவை முடிந்த அளவுக்கு குறைப்பது)

Ø  உற்பத்தியாளருக்கு நியாயமான விலை கிடைக்க உதவுவது

Ø  மறைமுக இடைத்தரகு முறையை முற்றிலுமாக ஒழிப்பது

Ø  அரசுக்கான வரி வருவாயை அதிகரிப்பது

Ø  விலைவாசியை கட்டுக்குள் வைப்பது

இது ஒரு மிகச்சிறந்த அணுகுமுறை என நான் கருதுகிறேன்.

அரசின் மீது வைக்கப்படும் விமர்சனம், அரசு என்பது பிசினஸ் செய்யவேண்டிய அவசியம் என்ன? சேவை தானே அரசின் நோக்கம்? என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களும் உண்டு.

எல்லா தொழிலிலும் அரசும் ஒரு பங்குதாரராக இருப்பதை தான் தமிழக அரசு செய்கிறது. இதன் மூலம் ஏகபோகம் தடுக்கப்பட்டு, அரசின் நியாயமான விலையை ஒட்டியே எல்லோரும் விற்பனைவிலையை நிர்ணையிக்க முடியும். அரசே எல்லா தொழிலிலும் இறங்குவதென்பது, மக்களுக்கு ஒரு நம்பிக்கையையையும் உத்திரவாதத்தையும் நல்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரசின் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பவர்களை கண்டுகொள்ளாமல், அரசின் நோக்கத்துக்கு உதவும் வகையில், கூடுமானவரை நமது தேவைகளை அரசு நிறுவனங்கள் மூலமாகவே நிறைவேற்றுவதன் மூலம் நமக்கும் சிக்கனமான செலவு, அரசுக்கும் வரி வருவாய் என தமிழகத்துக்கு உதவவேண்டிய தத்தமது கடமையை உணரக்கூடியவர்கள் தானே நாமெல்லோரும்? சரி தானே?
 

No comments:

Post a Comment

Printfriendly