Tuesday, August 27, 2013

இந்திய பொருளாதார நெருக்கடி – பாகம் 2

முதல் பாகத்தை படிச்சவங்களுக்கு முன்னுரை தேவையில்லை. படிக்காதவங்க ஒரு நடை இங்கே படிச்சிட்டே வந்திருங்க.

இப்போ நாம ஸ்டிரெயிட்டா விஷயத்துக்கு போயிரலாம்.

2ஜி வழக்கை பொறுத்தவரைக்கும் அது ஒரு ஊகமான கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்ததுன்றது எல்லோருக்குமே தெரியும். அதாவது 2ஜி அலைக்கற்றையின் மதிப்பை மதிப்பிட நம்ம கிட்டே எந்த டெக்னாலஜியோ, முன்மாதிரியோ இல்லை. 3ஜி அலைக்கற்றையை ஏலம் விட்டப்போ கிடைச்ச தொகையை அடிப்படையா வெச்சு புரோ-ரேட்டா பேசிசில்  (Pro-rata basis) 2ஜி விலையை கணக்கிட்டிருக்காங்க ஆடிட்டருங்க. ஆனா அந்த முறை சரியா வராதுங்கறது எந்த ஒரு சாதாரண அக்கவுண்டண்டுக்கும் தெரியும்.

3ஜி டெக்னாலஜி வந்ததுமே 2ஜி அவுட்-டேட்டட் டெக்னாலஜி ஆயிருச்சு. அதனால் அதன் மதிப்பு குறைய தான் செய்யும். மேலும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 2ஜி அலைக்கற்றைகள் போக மிச்சம் மீதி இருந்த அலைக்கற்றைகளை தான் ஒதுக்கீடு செஞ்சாங்க. ஆக, கிடைச்ச ஒவ்வொரு ரூபாயும் அரசுக்கான கூடுதல் லாபம் தான். ஆடிட்டருங்க கூட அரசுக்கு நஷ்டம்னு எங்கேயும் சொல்லலை. இன்னும் கூடுதல் லாபம் கிடைச்சிருக்கும்னு தான் சொல்லி இருக்காங்க. அதுவும் எப்படி, இத்தனை பேர் ஏலத்தில் கலந்துகிட்டு, இத்தனை ரூபாய்க்கு அது ஏலம் போயிருந்தா இத்தனை லட்சம் கோடி கிடைச்சிருக்கும்னு தான் அறிக்கையே இருக்கு. மொத்தமாவே அது ஒரு ஊகமான கணக்கீடு தான். (கடைசியில் அது இப்போ 30,000 கோடின்னு வந்து நிக்குது. அதுவும் கூட தவறான கணக்கு. அந்த அளவுக்கு இருக்காதுன்னு விவாதம் நடந்துட்டு தான் இருக்கு)

இந்தியாவில் ஆடிட்டிங், தணிக்கை அறிக்கை பத்தின ஒரு பேசிக் விஷயத்தை சிம்பிளா சொல்றேன். அது உங்க புரிதலுக்கு உதவியா இருக்கும்.

உதாரணத்துக்கு, நீங்க ஒரு கம்பெனி வெச்சிருக்கீங்கன்னு எடுத்துக்குவோம். அதில் ஒரு நாளைக்கு 100 மோட்டார் (Motor) உற்பத்தி பண்றீங்கன்னு வெச்சுக்குவோம். அப்படீன்னா மாசத்துக்கு 3000 மோட்டார். சரியா? இதை ஆடிட் செய்ய ஒரு குழு வருது. அவங்க சாம்பிளிங் (Sampling) படி ஒரு நாள் உற்பத்தியான 100 மோட்டாரிலிருந்து 14 மோட்டார்களை ஆடிட்டிங்குக்கு எடுத்துக்குவாங்க. அதில் 4 மோட்டார் தரமில்லைன்னு கண்டுபிடிக்கிறாங்கன்னு வெச்சுக்கோங்க, அவங்க அறிக்கை என்னவா இருக்கும் தெரியுமா? “சோதனைக்கு எடுத்த மோட்டார்களில் 25% தரமற்றவையாக இருந்தன. இந்த வகையில் நாளொன்றுக்கு 25 மோட்டார்களும், மாதத்துக்கு 750 மோட்டார்களும் தரமற்றவையாக இருக்க ‘வாய்ப்பு இருக்கிறது” ன்னு அறிக்கை கொடுப்பாங்க. அப்படி தான் அறிக்கை கொடுக்கணும்னு சட்டம் (IGAPP – Indian General Accounting Practice and Procedures) சொல்லுது. ஆனா நிஜத்தில் அந்த மாச உற்பத்தியான 3000 மோட்டார்களில் அந்த 4 மட்டுமே தரமற்றவையாக இருக்கவும் மற்ற 2996 மோட்டார்கள் தரமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. அதை 100% முழுமையான ஆடிட்டிங்குக்கு உட்படுத்தி பார்த்தா தான் தெரியும். பெரும்பாலான ஆடிட்டிங் குழுக்கள் இப்படியான சாம்பிளிங் படி தான் அறிக்கை தருது. என் ஸ்டேட்மெண்ட் இது தான். இது சரியா தப்பான்னு நீங்க யாரை வேணும்னாலும் வெச்சு செக் பண்ணிக்கோங்க டைப்பில். யாரும் அதை ரீ-செக் செய்யமாட்டாங்கன்னு 200% நம்பிக்கை. 2ஜியிலும் அப்படி தான் நடந்தது. (இது அக்பர் பீர்பால் கிட்டே செம்மறி ஆட்டின் உடலில் எத்தனை ரோமங்கள் இருக்குன்னு கேட்ட கேள்விக்கு பீர்பால் சொன்ன அந்த அல்டிமேட் பதில் மாதிரி தோணுதில்லே?)

இப்போ நாம இந்த வங்கிகளின் வாராக்கடன் மேட்டருக்கு வருவோம்.

வாராக்கடன் 1.76 லட்சம் கோடின்னு கணக்கிட்ட ஆடிட்டருங்க, கணக்கிட்ட விதம் பற்றி தனியா ஒரு அனெக்சர் (Annexure) கொடுத்திருக்காங்க. அதன் படி ஒரு விசித்திரமான மெத்தடை அவங்க கையாண்டிருக்கிறதை புரிஞ்சுக்க முடியுது.

ஒரு உதாரணம் சொல்றேன். நீங்க ஒரு வங்கியில் 3 கடன்கள் வாங்கி இருக்கீங்கன்னு வெச்சுக்குவோம். 3ம் 1 லட்சம்னு வெச்சுக்குவோம். மொத்தம் 3 லட்சம் கடன். மாசம் ஒவ்வொரு கடனுக்கும் 2000/- கட்டணும். அப்படீன்னா மாசத்துக்கு 6000/-. நீங்க 2 கடனுக்கு கரெக்டா டியூ கட்டிட்டே வர்றீங்க, ஆனா 3வது கடனுக்கு மட்டும் ஒழுங்கா டியூ கட்டலைன்னா, நியாயமா அந்த 3வது கடன் தொகையான 1 லட்சம் (அதில் உள்ள, கட்டவேண்டிய, பாக்கி தொகை) தான் வாரா கடன். ஆனா ஆடிட்டிங் மேனுவல் படி பார்த்தா, உங்களது அனைத்து கடன்களும் வாரா கடன் தான். அதாவது நீங்க ஒழுங்கா டியூ கட்டிட்டு வர்ற அந்த 2 கடன் கணக்கும் கூட வாரா கடன்ல தான் சேர்த்திருவாங்க. இது ஒரு பக்கம் அப்படியே எடுத்து வெச்சுக்கோங்க. இன்னொரு விஷயம் கவனிங்க.

இந்த ‘வாரா கடன்’ என்பதற்கு என்ன அளவுகோல் வெச்சிருக்காங்க தெரியுமா? 90 நாட்களுக்கு மேல் ஒரு கணக்கில் எந்த பண பரிமாற்றமும் இல்லை என்றால் அது வாரா கடனாம். இதுக்கும் உதாரணம் வெச்சிருக்கேன்.

நீங்க கடைசியா உங்க கடனுக்கான டியூவை ஜூன் மாசம் கட்டியிருக்கீங்கன்னா, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூணு மாசத்தில் ஒரு நாள் கூட, ஒரு ரூபாய் கூட நீங்க அந்த கணக்கில் கட்டாம இருந்தா அது வாரா கடன். அந்த வகையில் அந்த கடன் தொகையும், உங்க பேர்ல இருக்கிற மற்ற பிற (ஒழுங்கா கட்டப்பட்டுட்டு வர்ற) கடன்களும் எல்லாமே வாரா கடன் லிஸ்ட்ல வந்திரும். ஒருவேளை உங்களுக்கு அக்டோபர் மாசம் கொஞ்சம் லம்பா அமௌண்டு கிடைச்சு மொத்த பாக்கியையும் நீங்க செட்டில் பண்ணிடுறீங்கன்னு வெச்சுக்குவோம், அப்போ என்ன ஆகும்? ஒண்ணும் ஆகாது. நீங்க செலுத்த வேண்டிய பாக்கி தொகை ஜீரோ ஆயிரும். ஆனாலும் உங்க கடன் கணக்குகள் எல்லாமே வாரா கடன்ல தான் இருக்கும். ஏன்னா, அதில் தான் ஜூன் முதல் செப்டெம்பர் வரை தொடர்ச்சியா 90 நாட்கள் பண பரிமாற்றம் நடக்கலையே? அதுக்கு பின்னாடி எல்லாத்தையும் சேர்த்து கட்டிட்டாலும் அது வாரா கடன் தான். (இந்த மாதிரியான கடன்களை வாரா கடன்னு (NPA – Non Performing Asset) கணக்கு வெக்காம தாமதமாக செயல்படும் கடன்னு (SPA – Slow Performing Asset) கணக்கு வெக்கணும்னு ஒரு விவாதம் இப்பவும் நிபுணர்களால் நடத்தப்பட்டுட்டு இருக்கு! என்னை கேட்டால், அது தான் நியாயமும் கூட.)

இந்த ரெண்டு ரீதியில் தான் (அதாவது ஒழுங்கா கட்டப்படும் கடன்களும், தாமதமா கட்டப்படுற கடன்களும்) இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் வாரா கடன் லிஸ்டில் வந்திருக்கு. இப்போ சொல்லுங்க. இது உண்மையாவே 1.76 லட்சம் கோடியா இருக்க வாய்ப்பு இருக்கான்னு? நிச்சயமா இருக்காது.

‘வாரா கடன்’ங்கறது மிக மிக சொற்பமான அமௌண்டா தான் இருக்கக்கூடும். மற்றவை எல்லாம் தாமதமாக செயல்படும் கடன் அல்லது, ஒரே நபரின் பிற ஒழுங்காக செயல்படும் கடன் தான்.

சரி, 1.76 லட்சம் கோடி வாரா கடன்னே வெச்சுக்குவோம். இதனால் வங்கிகளுக்கு என்ன நஷ்டம்? நஷ்டம் எல்லாம் ஒண்ணும் இல்லை. ஆனா வரவேண்டிய லாபம் குறைஞ்சிருச்சு.

உதாரணமா நம்ம ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை எடுத்துக்கலாம். 2013-14 நிதியாண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கை (Q1 Results for FY 2013-14) சமீபத்தில் வெளியாகி இருக்கு. அதில் இந்த வாரா கடன் எல்லாம் கழிச்சப்பறமும் (Bad debts write off) கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லாபம் 14% குறைஞ்சிருக்குன்னு சொல்லி இருக்காங்க.. சரி அப்படி எவ்வளவு லாபம்னு நினைக்கிறீங்க?

இது ஒரு பொது துறை வங்கி. சேவை மனப்பான்மையோடு, லாப நோக்கின்றி செயல்படும் வங்கி. இவங்க கணக்கு சொல்றது இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும். அதாவது வெறும் 90 நாட்களுக்கான கணக்கு. இதில் வாரா கடன் வேறே எக்கச்சக்கமா இருந்ததுன்னு சொல்றாங்க. அப்படின்னா எவ்வளவு லாபம் வந்திருக்கும்? ஒரு 10 கோடி? 20 கோடி? இல்லைங்க இல்லை. நல்லா தம் கட்டி மூச்சை இழுத்து பிடிச்சுக்கோங்க. 3,241.08 கோடி ‘நிகர’ லாபம். (நிகர லாபம் – Nett Profit – அப்படின்னா, எல்லா செலவும், வரியும், ஒதுக்கீடும் எல்லாம் போக மொத்தமா கைல நிக்கிற தொகை). ஜஸ்ட் 90 நாளைக்கு. வெறும் பொது சேவையும், மக்கள் நலனும் மட்டுமே முன்வெச்சு இயங்குற ஸ்டேட் பாங்க் நிலையே இப்படின்னா, ICICI, HDFC, KVB மாதிரியான தனியார் வங்கிகளை பத்தி நீங்களும் ஆடிட்டர் மாதிரியே குத்துமதிப்பா ஒரு கணக்கு போட்டு பார்த்துக்கோங்க.

இப்போ நான் முன்னே சொன்ன விஷயத்தை யோசிச்சு பாருங்க, ஒரு மிகப்பெரிய முரண்பாடு புரியும். அதாவது ஒழுங்கா கட்டுற கடனுக்கான பணம் வங்கிக்கு வந்திருச்சு. ஆனா, அவருடைய மற்றொரு கடன் வாரா கடனா இருக்கிறதால இந்த கடனும் வாராகடன் லிஸ்டில் இருக்கு. சுருக்கமா ஒரு கடனுக்கான தொகை லாபத்திலும், வாரா கடனிலும் என ரெண்டு இடத்திலும் இருக்கு. இந்த முரண்பாட்டை தான் நிறைய பேர் விவாதிச்சிட்டு இருக்காங்க. (நியாயமா இதை பத்தி விவாதிக்க வேண்டிய அரசாங்கம் வழக்கம்போல சைலண்டா தான் இருக்கு). அப்படி பார்த்தா 3,241.08 கோடி லாபம்ங்கறதும் தப்பு. 1.76 லட்சம் கோடி வாரா கடன்னு சொல்றதும் தப்பு.

இந்த லட்சணத்தில் தான் இருக்கு, இந்திய தணிக்கை துறை. குத்துமதிப்பா குன்சா அடிச்சு விடுறதிலயும், அப்படி அடிச்சு விட்ட தொகையை நியாயப்படுத்த சுற்றி வளைச்சு கணக்கு சொல்றதிலயும் அவ்ங்க ஜகஜ்ஜால கில்லாடிங்க. (எனக்கென்னமோ, முதல் பாகத்தில் சொன்ன மாதிரி, யூகமான, குத்துமதிப்பான ஆதாரமற்ற கணக்கீடுகளுக்கெல்லாம் ஒரு ஐடண்டிடிக்காக ‘ரூ.1.76 லட்சம் கோடி’ ங்கறதை வெச்சுக்கறாங்களோன்னு ஒரு டவுட்டு).

இணையத்தில் சமீப காலமா, அந்நிய முதலீடுக்கு எதிரா ஒரு மௌன மருகல் சப்தம் கேட்டுட்டே இருக்கு. உண்மையில் இந்த அந்நிய முதலீடுங்கறது இந்திய பொருளாதாரத்துக்கு நல்லதா, கெட்டதா? அது என்னென்ன மாதிரியான விளைவுகளை நமக்கு தரும்? ஏன் யார் எது பத்தி பேசினாலும், யாரோ ஒருத்தர் வந்து சம்மந்தமேயில்லாம அந்நிய முதலீடு பத்தி அதில் வம்பிழுக்கிறாங்க? அந்த அளவுக்கு அதில் என்ன இருக்கு? இதையெல்லாம் அடுத்த பதிவில் விரிவா பார்க்கலாம்!

1 comment:

  1. //2ஜி வழக்கை பொறுத்தவரைக்கும் அது ஒரு ஊகமான கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்ததுன்றது எல்லோருக்குமே தெரியும். அதாவது 2ஜி அலைக்கற்றையின் மதிப்பை மதிப்பிட நம்ம கிட்டே எந்த டெக்னாலஜியோ, முன்மாதிரியோ இல்லை. 3ஜி அலைக்கற்றையை ஏலம் விட்டப்போ கிடைச்ச தொகையை அடிப்படையா வெச்சு புரோ-ரேட்டா பேசிசில் (Pro-rata basis) 2ஜி விலையை கணக்கிட்டிருக்காங்க ஆடிட்டருங்க. ஆனா அந்த முறை சரியா வராதுங்கறது எந்த ஒரு சாதாரண அக்கவுண்டண்டுக்கும் தெரியும்.//
    இந்த பொய்யை எத்தனை முறை சொல்லப்போகிறீர்கள்? இது பற்றி நீங்கள் எழுதிய ஒவ்வொரு பதிவிற்கும் விளக்கம் அளித்திருக்கிறேன். அதை பொருட்படுத்தாமல் அதையே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுடன் தர்க்கம் பண்ணுவது வீண் என்பதால் இத்துடன் விலகிக்கொள்கிறேன்.

    ReplyDelete

Printfriendly