Sunday, December 22, 2013

தமிழக வாட்வரி சட்ட திருத்தம் - முடங்கும் தொழில்துறை



மிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி நாளிட்டு ஒரு சட்டதிருத்தத்தை அமல் செய்தது. அந்த ஒரே ஒரு சட்ட திருத்தம் ஒட்டுமொத்த தமிழக தொழில்துறையையும் கொந்தளிப்பில் கொதிக்கவைத்துவிட்டது.     

தமிழக அரசின் வணிகவரித்துறை வெளியிட்ட அந்த சட்டத்திருத்தத்தையும்  TNVAT Act 28 of 2013, 5th Amendment   அதன் விளைவுகளையும் தமிழக தொழில்துறை ஏன் இந்த அளவுக்கு வெறுத்துப்போயிருக்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் சுருக்கமாக பார்க்கலாம்.



வாட் வரலாறு: 2006ம் ஆண்டு தமிழகத்தில் வாட் வரி முறை அமலுக்கு வந்தது. 2007 ஜனவரி 1ம் தேதியிட்டு இந்த வரிமுறை அமலானது. அதுவரை இருந்த தமிழக அரசு பொது விற்பனை வரி முறை (TNGST – Tamil Nadu General Sales Tax) நீக்கப்பட்டு நாடு முழுதும் ஒரே மாதிரியான வரி முறைக்காக வாட் வரி (TNVAT – Tamil Nadu Value Added Tax) முறை கொண்டுவரப்பட்டது. வாட் வரி முறையை முதலில் எல்லோரும் எதிர்த்தாலும் அது மிகவும் சுலபமானதாகவும் எளிமையானதாகவும் இருந்ததால் பின்னர் எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். 

வாட் வரி முறையில் நாம் கொள்முதலுக்கு (Purchase) செலுத்திய வரியை விற்பனை வரியில் (Sales Tax) கழித்துக்கொள்ளலாம். அதாவது ஒரு பொருளை வாங்கும்போது அந்த பொருளுக்குன்னு ஒரு வரியை செலுத்தியிருப்போம். மீண்டும் அதே பொருளை இன்னொருவருக்கு விற்கும்போது அதற்குன்னு தனியா இன்னொரு வரியை செலுத்தவேண்டி இருக்கும். இது தான் பழைய TNGST முறை. 

இது இரட்டை வரி விதிப்பாக கருதப்பட்டதால் வாட் வரி முறையில் செலுத்தவேண்டிய வரியில் இருந்து பர்சேசின் போது செலுத்திய வரியை கழித்துவிட்டு மீதமுள்ளதை அரசுக்கு கொடுத்தால் போதும். அதாவது நாம் வைக்கும் லாபத்துக்கு அல்லது நாம் செய்த சேவைக்கு மட்டும் வரி. The Value which has been added alone considered for Value Added Tax. 

சிம்பிளா ஒரு உதாரணம் பார்ப்போமா?  நீங்க ஒரு பெயிண்ட் கடை வெச்சிருக்கீங்கன்னு எடுத்துக்கலாம். ஒரு லிட்டர் பெயிண்ட் டப்பாவை நீங்க கம்பெனியில் இருந்து ரூ.100/-னு வாங்குறீங்க. அதுக்கு 12% வரி அவன் போட்டிருப்பான். அப்ப நீங்க கம்பெனிக்குகொடுக்கிறது ரூ.112. அந்த பெயிண்ட் டப்பாவை நீங்க உங்க கடையில் ரூ.150/-ன்னு விக்கிறீங்கன்னு வைங்க. இதுக்கு நீங்க 12% வரி போட்டீங்கன்னா ரூ.168/- தான் விற்பனை விலை.  இப்ப பழைய TNGST முறைப்படி பார்த்தா, நீங்க ரூ.12/- வரியா கம்பெனிக்கு கட்டிருக்கீங்க. அது தவிர ரூ.18/- நீங்க வரி போட்டிருக்கீங்க. ஆக மொத்தம் அந்த 1 லிட்டர் பெயிண்ட் டப்பா மூலம் அரசுக்கு கிடைக்கிற வரி ரூ.30/-. பெயிண்டின் விற்பனை விலை ரூ.168/- உங்களுக்கான லாபம் (150-112) ரூ.38/-.   

ஆனா புதிய வாட் வரி விதிப்பு முறைப்படி பார்த்தா எப்படி வரும் தெரியுமா? நீங்க கம்பெனிக்கு கொடுத்த ரூ.12/- நீங்க கழிச்சுக்கலாம். அதனால் அரசுக்கு நீங்க கட்டவேண்டியது (விற்பனை வரி ரூ.18 (-) செலுத்திய வரி ரூ.12) ஆகமொத்தம் ரூ.6 தான். இந்த முறைப்படி பார்த்தால். அரசுக்கான வரி வருவாய் 12+6 = ரூ.18 தான். நீங்க ரூ.168/- க்கே பெயிண்டை வித்தா, உங்களுக்கு லாபம் ரூ.44 (செலுத்திய வரியான ரூ.12 + நீங்க வெச்சிருக்கிற லாபமான ரூ. 32). ஒருவேளை நீங்க உங்க லாபம் அதே ரூ.32 போதும்னு நினைச்சா பெயிண்டின் விற்பனை விலை ரூ. 168 லிருந்து ரூ.156ன்னு குறைஞ்சிரும்.  கான்செப்ட் ரொம்ப சிம்பிள். ஒரு பெயிண்டுக்கு கம்பெனிக்காரன் 12 ரூபாயும் நீங்க 18 ரூபாயும் அரசுக்கு கட்டியிருந்தது மாறி. நீங்க கட்டுற 18 ரூபாய்க்குள் கம்பெனிக்காரன் கட்டின 12 ரூபாயும் இருப்பதால் 6 ரூபாய் மட்டும் வரியா கட்டினா போதும். அரசுக்கு வரி வருவய் குறையும். ஆனா உங்களுக்கு லாபம். 

இப்படி வரியை அட்ஜஸ்ட் செய்யுறதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு. அதாவது நம்ம மாநிலத்துக்குள்ளேயே வாங்கின பொருளுக்கு தான் வரியை அட்ஜஸ்ட் செய்ய முடியும். மற்ற மாநிலங்களிலிருந்து வாங்கின பொருளுக்கு வரி அட்ஜஸ்ட்மெண்ட் கிடையாது. அதே மாதிரி நம்ம மாநிலத்துக்குள்ளேயே விக்கிறதா இருந்தா அட்ஜஸ்ட் செய்துக்கலாம். வெளி மாநிலத்துக்கு விக்கிறதா இருந்தா ரெண்டு வகையான கண்டிசன் இருக்கு. வெளி மாநிலத்தில் உங்க பொருளை வாங்குறவர் பதிவு பெற்ற கடையா இருந்து அவர் உங்களுக்கு C Form கொடுக்கிறதா இருந்தா, நீங்க இங்க வரியை அட்ஜஸ்ட் செய்துக்கலாம். ஒருவேளை, வெளிமாநிலத்திலுள்ள உங்க கஸ்டமர் அந்த மாநிலத்தில் ரிஜிஸ்டர் செய்யாம இருந்திருந்தா அவருக்கு நீங்க விற்கும் பொருளுக்கான வரி அட்ஜஸ்ட்மெண்டை நீங்க செய்ய முடியாது. இது தான் கண்டிசன்  



புதிய சட்ட திருத்தம் என்ன?: தமிழக அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி வெளியிட்ட சட்ட திருத்தம் நவம்பர் 11 முதல் அமலாகும்னு சொல்லி இருக்காங்க. அந்த சட்டதிருத்தத்தின் படி, வெளிமாநில கஸ்டமர் பதிவு பெற்ற டீலரா இருந்தாலும் அவருக்கு விற்கிற பொருளுக்கான வரி அட்ஜஸ்ட்மெண்டில் இருந்து 3% வரியை தமிழக அரசுக்கு திருப்பி செலுத்தணும்னு இருக்கு. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலுமே இப்படி ஒரு முட்டாள்த்தனமான சட்டம் இல்லை. நம்ம தமிழகத்தில் மட்டும் தான் இருக்கு. 

இந்த சட்டதிருத்தத்தினால என்ன பிரச்சனைன்னா, நாம இதுவரையும் எடுத்திட்டிருந்த வரி அட்ஜஸ்ட்மெண்டில் இருந்து 3% குறையும். அரசு இந்த திருத்தத்துக்கு சொல்ற லாஜிக் சரியாக இருக்குதுன்னு நினைக்கிறேன். 

உதாரணம் பார்ப்போமா? அதே பெயிண்ட் விஷயத்தை எடுத்துக்கலாம். நீங்க கம்பெனியில் 12% வரி கட்டி வாங்கி இருக்கீங்க. அதை வெளிமாநில கஸ்டமருக்கு அனுப்புறீங்கன்னு வெச்சுக்கோங்க. அந்த கஸ்டமர் பதிவு செய்யாத டீலரா இருந்தா நீங்க 12% வரி அவர்கிட்டேயிருந்து வசூலிச்சு அரசுக்கு கட்டணும். மேலும் பதிவு செய்யாத டீலருக்கு வித்ததால் கம்பெனிக்காரங்களுக்கு கட்டின 12% வரியை அட்ஜஸ்ட் செய்ய முடியாது. ஒருவேளை, உங்க கஸ்டமர் பதிவு பெற்ற டீலரா இருந்து அவர் உங்களுக்கு C Form கொடுக்கிறதா இருந்தா, நீங்க 2% வரி மட்டும் வசூலிச்சு கட்டினா போதும். அதுவும் இல்லாம கம்பெனிக்கு கொடுத்த 12% வரியையும் நீங்க அட்ஜஸ்ட் செய்துக்கலாம். இந்த இடத்தில் தான் அரசு குதர்க்கமா யோசிக்குது. 12%ல வாங்கின ஒரு பொருளை 2% வரிக்கு வித்திட்டு, அந்த 12% வரியையும் அட்ஜஸ்ட் செய்தால், அரசு உங்களுக்கு 10%ஐ திருப்பி தரவேண்டி இருக்கு. இது அரசுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துது. அதனால் அரசு இந்த புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருக்கு. இதன் படி அரசு திருப்பி தரவேண்டிய 10% என்பது 7% என குறையும். சுருக்கமா சொன்னா வெளிமாநில விற்பனைக்கு வரி அட்ஜஸ்ட்மெண்ட் என்பதில் 3% ரிவர்ஸ் செய்யவேண்டும். 

சரி, தொழில் துறைக்கு இதில் என்ன பிரச்சனை? லாபம் குறையும். வரி கட்டும்போது நிறைய கணக்கீடுகள் செய்யவேண்டி வரும். வேலை பளு கூடும். அவ்வளவு தானே? அரசுக்கு அதிக வருவாய் வருகிற பட்சத்தில் நாமளும் அதுக்கு உதவித்தானே ஆகணும்? சரிதான். ஆனால் இதன்படி விற்பனை விலை கூடும். பிற மாநில டெண்டர்களில் நமது டெண்டர்விலை அதிகமாக காட்டும். அதனால் பிசினஸ் பாதிக்கும்னு வியாபாரிகள் சொல்றாங்க. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா எனக்கு தெரியலை.  பிரச்சனை வியாபாரிகளுக்கு இல்லை. தொழில் துறையினருக்கு தான். 

அதென்ன ரெண்டு பேருக்குமான வித்தியாசம்? வியபாரிகள் வாங்கிய பொருளை அப்படியே இன்னொருவருக்கு விற்பனை செய்பவர்கள். அதனால் எந்த பொருளுக்கு எவ்வளவு வரி கட்டியிருக்கோம்னு தெளிவா கணக்கு இருக்கும். ஆனா தொழில் துறை அப்படி இல்லை. பல பொருட்களை வாங்கி அதை அப்படியே வெச்சோ அல்லது உருமாற்றியோ புதிதாக ஒரு பொருளை செய்யுறவங்க. இவங்களுக்கு இந்த சட்டத்தில் பெரிய பிரச்சனை வரும். அது எப்படி? இது வரைக்கும் இவங்க உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும்போது அதிலுள்ள எல்லா பொருட்களுக்கான வரியையும் மொத்தமா அட்ஜஸ்ட் செய்துக்குவாங்க. ஆனா புது முறைப்படி, இவங்க உற்பத்தி செய்த பொருள் வெளிமாநிலத்துக்கு C Form மூலம் விற்பதாயிருந்தால், அந்த பொருளுக்குள் இருக்கும் உப பொருட்கள் Input materials / spares ஆகியவற்றுக்கு எவ்வளவு வரி கட்டியிருக்கோம்னு தனித்தனியா கணக்கெடுத்து அதில் 3% வரியை கணக்கிட்டு அரசுக்கு திருப்பி கொடுக்கவேண்டி வரும். இது ரொம்ப லொள்ளு பிடிச்ச விவகாரம். ஒரு பெரிய மெஷின் செய்யுற கம்பெனியின் நிலைமையை நினைச்சுப்பாருங்க. அந்த மெஷின் செய்வதற்காக வாங்கிய மொத்த பொருட்களின் லிஸ்டையும் எடுத்து அதுக்கான வரியை தனித்தனியா கணக்கிட்டு ரிவர்ஸ் செய்யணும். 


இதில் இன்னொரு சிக்கல் உருமாற்றிய பொருட்கள். உதாரணமா இரும்பு தனியாவும், ஈயம் தனியாவும் வாங்கி ஃபவுண்டரியில் ரெண்டையும் அலாயா மிக்ஸ் செஞ்சு ஒரு கருவியை உருவாக்கிற கம்பெனிகள், இந்த ரிவர்ஸ் வரிக்கான கணக்கீட்டை எப்படி செய்யுறதுன்னு தெரியாம தவிக்கிறாங்க.   

இதில் எல்லோரும் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்கு. தமிழக அரசு வெளியிட்ட சட்டத்திருத்தம் முட்டாள்த்தனமானது மட்டும் இல்லை, தெளிவாவும் இல்லை. உற்பத்தி துறையினர் இந்த ரிவர்ஸ் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யணுமா வேண்டாமான்னு தெளிவா சொல்லவேயில்லை. சில வணிகவரி துறை ஆபீஸ்ல உற்பத்தி துறை ரிவர்ஸ் செய்யணும்னும், மற்றும் சில ஆபீஸ்ல செய்யவெண்டாம்னும் குழப்பிட்டு இருக்காங்க.  

இப்போதைய நடவடிக்கை என்ன?:  இப்போதைக்கு தொழில் துறையினர் இந்த ரிவர்சல் செய்யுறதா இல்லை. CII – Confederation of Indian Industry சார்பா இந்த சட்டதிருத்தத்துக்கு விளக்கம் கேட்டு மனு செஞ்சிருக்கிறதாவும், இன்னும் சிலர் ஹைகோர்ட்டை அணுகப்்போவதாாவுுுும் நிறைய தகவல்கள் வந்துட்டு இருக்கு. தமிழக அரசு இந்த நிமிஷம் வரைக்கும் எந்த விளக்கத்தையும் கொடுக்கலை. அதைவிட சிக்கல், நவம்பர் 11ம் தேதி முதல் அமலாகுதுன்னு அறிவிச்ச அரசு அது நவ 11 வரை வாங்கிய பொருளுக்கா, நவ 11 முதல் விற்பனையாகும் பொருளுக்கான்னு தெளிவுபடுத்தலை. இப்ப வரி எந்த அடிப்படையில் கணக்கிடணும்னும் யாருக்கும் தெரியலை. ஒரே மாதத்தில் நவ 11 வரை ஒரு முறையிலும், அதுக்கு பின்னர் மற்றொரு முறையிலும் வரியை கணக்கிடவேண்டிய நிலையில் இருக்கிற வணிகர்களுக்கு மற்றுமொரு பிரச்சனை ஆன்லைன் மூலம் இந்த வரி செலுத்துவதற்கு இந்த கால வித்தியாச கணக்கீடுக்கான இரு வேறு ஃபார்ம்கள் ஆன்லைனில் இல்லை. அதே பழைய ஃபார்ம் தான். எப்படி வரியை கணக்கிடுவது, எப்படி வரியை கட்டுவதுன்னு செம்ம குழப்பத்தில் இருக்காங்க. நல்லவேளையா தமிழகத்தில் எதிர்கட்சின்னு எதுவும் இல்லாததால் அரசின் இந்த முட்டாள்த்தனத்தை யாரும் இதுவரை கேள்வி கேட்கலை. தொழில்துறையே தான் விளக்கம் கேட்டு அலைஞ்சிட்டு இருக்கு. அரசு அவங்களை கண்டுக்கறதா இல்லை. 

இப்ப சொல்லுங்க, தொழில்துறை முடங்குமா முடங்காதா? வெறுத்து போவாங்களா இல்லையா? இப்படி வரி ரிவர்ஸ் ஆனா விற்பனை விலை கூட நமக்கு கிடைச்சிட்டிருக்கிற பிசினஸ் லாஸ் ஆகுமா ஆகாதா? இது நம்ம பொருளாதாரத்தை பாதிக்குமா பாதிக்காதா? வெளிமாநிலத்துக்கான விற்பனையை மட்டுமே நம்பியிருக்கிற வணிகர்கள் முடங்குவாங்களா மாட்டாங்களா? யார் இந்த கேள்வியையெல்லாம் அரசாங்கத்துக்கிட்டே கேட்பாங்க? அட்லீஸ்ட் அதிகாரிகளாவது எடுத்து சொல்லியிருக்கவேண்டாமா? இப்படி நிறைய கேள்விகள். பதில் தான் தட்டுப்படலை.

Printfriendly