Monday, May 30, 2016

நேர் நிரை – கூவிளம்

மாராணி மிஸ். 

கோவை சித்தாபுதூர் ஸ்கூலில் இவங்க தான் என்னுடைய தமிழாசான்.. ச்சே.. தமிழாசிரியை. மிக மிக அருமையா தமிழை, தமிழ் இலக்கணத்தை யாப்பை, யாப்பின் கட்டுக்களை எளிமையா புரியமாதிரி எனக்கு சொல்லி கொடுத்தவங்க.
 
Thanks: PaddathumSuddathum.blogspot.com

யாப்பிலக்கணத்தின் அடிப்படையே சொல்லின் ஒலி குறிப்புத்தானே? நெடில் – நேர்; குறில் – நேர்; நெடில் நெடில் – நேர் நேர்; குறில் நெடில் – நிரை நேர்; நெடில் குறில் – நேர் நிரை; குறில் குறில் நிரை நிரை. அவ்வளவு தான் யாப்பு. இதில் இரட்டை & மூன்று ஒலிக்குறிப்புக்கும் இன்னொரு அடுக்கு 'கோடு வேர்டு' இருக்கு. நேர் நேர் – தேமா; நிரை நேர் – புளிமா; நேர் நிரை – கூவிளம்; நிரை நிரை – கருவிளம். இதெல்லாம் இரட்டை ஒலிக்குறிப்புக்கள். இதுக்கு அடுத்தபடியா மூணாவது சொல் நேர்னு வந்தா காய்; நிறைனு வந்தா கனி. இவ்வளவு சிம்பிளா யாப்பை சொல்லிக்கொடுத்ததோட, அவங்க சொல்ற சொல் என்ன ஒலிக்குறிப்பு அதுக்கு என்ன கோடு வேர்டுனு கேள்வி கேட்டு கேட்டு தினம் கொஞ்ச நேரம் விளையாடுவாங்க. இது மிக அற்புதமான பயிற்சியா அமைஞ்சு இன்னை வரைக்கும் யாப்பை மறக்கவிடாம செஞ்சிருக்கு.

வைரமுத்துவின் இதுவரை நான் படிச்சப்ப அவர் இதே மாதிரி யாப்பை முதல் முதலா படிச்சு புரிஞ்சுகிட்டபோது திருக்குறளின் 1330 குறளையும் பகுத்து பார்த்தார்னு எழுதி இருக்கிறதை படிச்சேன். அதனால தான் அவர் கவிப்பேரரசர். நான் அந்த அளவுக்கெல்லாம் யோசிக்கலை. தினம் அப்பா வீட்டில் வாங்கும் தினத்தந்தியின் தலைப்பு செய்திகளை பகுத்து பார்த்து அதை சின்ன தாளில் எழுதி எடுத்துட்டு போயி உமாராணி மிஸ் கிட்டே காட்டுவேன். சரியா பகுத்திருக்கேனான்னு என்னை நானே அப்ரைசல் செஞ்சுக்க.

உதாரணமா இந்த பிளாக்கின் தலைப்பை எடுத்துகோங்க. மனவுரை ம-குறில்; ன – குறில்; வு – குறில்; ரை – குறில். எல்லாமே குறில் தான். அதை சேர்த்தா.. குறில் குறில் – நிரை; நிரை நிரை – கருவிளம். சுருக்கமா மனவுரை = நிரை நிரை = கருவிளம். சொல்லி பாருங்க மூணு வார்த்தையும் ஒரே மாதிரி தான் உச்சரிக்கும்.

இது தவிர வேற்றுமை உருபு, குற்றியலுகரம், குற்றியலிகரம் அது இதுன்னு அந்த ரெண்டு வருஷத்தில் (9th & 10th) ஆல்மோஸ்ட் இலக்கணத்தில் மொத்த பேசிக்கையும் சொல்லி கொடுத்துட்டாங்க.

Thanks: Ponkarthikeyan.wordpress.com

எனது பிற்கால யாத்திரைகளில் இந்த யாப்பு ஒலிக்குறிப்பு இன்னொரு தேடலுக்கு வழி வகுத்துச்சு. அது தான்.. இதெல்லாம் என்ன காய் கனி? தேமா – தேன் மாங்கா; புளிமா – புளிமாங்கா புரிஞ்சுது.. ஆனா இந்த கூவிளம் & கருவிளம்??

எனக்கொரு மதுரைக்கார தோழி உண்டு. அவர் தான் விளம் என்பது விளாம்பழம் / விளாங்காய் என்பதை குறிக்கும்னு சொன்னார். மதுரைக்கு போயிருந்தபோது விளாங்குடி கூட்டிட்டு போனார். நான் கூட சுத்து முத்தும் விளா மரமா தோப்பு தோப்பா இருக்கும்னு ஆசையா எதிர்பார்த்து போனேன். ஆனா அது ஒரு வழக்கமான நகர பகுதியா தான் இருந்துச்சு.

******  *******

சென்னை கன்னிமாரா நூலகம் எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களில் பல வகையினர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், சொற்பொழிவாளர்கள்வைரமுத்து விழாக்களில் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சொல்லாடலை கண்டு சொக்கி போயிருந்த காலங்கள் அவை.

மெல்ல மெல்ல மனம் லக்ஷ்மி, வாஸந்தி, அகிலன், சாண்டில்யன், கல்கி, அசோகமித்த்ரன், லா.ச.ரா, ஜெயகாந்தன், பாலகுமாரன், தமிழ்வாணன் மாதிரியானவர்களிடமிருந்து விலகி தமிழ் கவிஞர்களின் அதிலும் மரபு கவிஞர்களின் படைப்புக்கள் பக்கமாக ஒதுங்க தொடங்கினேன். மாயவநாதன், சுரதா, மருதகாசி, பாரதிதாசன் மாதிரியான ஹேரிடெஜ் கவிஞர்களில் இருந்து, வைரமுத்து, முத்தையா, வாணிதாசன், பாவலர் தேவகி மாதிரியான கவிஞர்களின் படைப்புகள் வரை எல்லோரது எழுத்துக்களும் வசீகரித்தன. 

மாயவநாதன் பத்தி சொல்லும்போது அந்த வானம்பாடி படத்தின் காகித ஓடம் கடலலை மீது பாடலை சொல்லாமல் இருக்கமுடியாது. (ஏற்கனவே பலரும் பல தடவை சொன்னது தான். நானும் ஒரு தடவை சொல்லிக்கறேனே).

காகித (நேர் நிரை) ஓடம் (நேர் நேர்) கடலலை (நிரை நிரை) மேலே (நேர் நேர்).  இந்த பாடலை எழுதுநது என்னவோ கலைஞர் தான். ஆனா உண்மையிலேயே இந்த டியூன் மாயவநாதனுக்கு தான் கொடுக்கப்பட்டது. அதுவும் ஒரு கோபத்தில் மகாதேவன் கொடுத்த டியூன் அது. ரொம்ப நாளா டியூனு டியூனுனு நச்சு பண்ணிட்டு இருந்த மாயவநாதன்கிட்டே கடுப்பாகி மகாதேவன் சொன்னாராம்.. என்னய்யா டியூனு பெரிய டியூனு? மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் இதான் டியூனு முடிஞ்சா எழுதிக்கொன்னு சொன்னாராம். மாயவநாதன் அந்த டியூனுக்கு பாட்டு எதையும் எழுதலை. ஆனா விஷயத்தை கேள்விப்பட கலைஞர் அந்த 'மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்' டியூனையே அடிப்படையா வெச்சு காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்னு எழுதுனாரு. அதுமட்டுமல்ல. அந்த பாடல் முழுக்கவே இந்த ஒரே டியூன் தான்.

இதுக்கு அடிப்படையும் யாப்பு தான். அந்த மாயவநாதன்ற வார்த்தையின் ஒலிக்குறிப்பு மா(நேர்) யவ(நிரை) நா(நேர்) தன்(நேர்) – நேர் நிரை நேர் நேர். இதை பேசிக்கா வெச்சு தான் கா(நேர்) கித(நிரை) ஓ(நேர்) டம்(நேர்) னு எழுதி இருப்பார் கலைஞர். நீங்க அந்த வார்த்தைகளை சொல்லிப்பாருங்க. மாயவ நாதன், நேர்நிரை நேர்நேர், காகித ஓடம்... ஒரே மாதிரி உச்சரிப்பு வருதுல்ல?

மொத்த பாடலின் அத்தனை வரியையும் மாயவநாதன் மாயவனாதாண்ணே போட்டு பாடினாலும் கரெக்டா வரும். அத்தனை எடத்திலேயும் அதுக்கு தகுந்த மாதிரி யாப்பு தப்பாம வார்த்தைகளை போட்டு ஒரு உருக்கமான பாட்டை எழுதிருப்பாரு கலைஞர்.

“கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்”

மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்”

பாடி பாருங்க. சேம் டியூன் யூ நோ.

இந்த செய்தியை படிச்சப்பறம் திரைப்பாடல்களை கூட சந்தம் பிரிக்க ஆரம்பிச்சேன். எங்கெல்லாம் தளை தட்டுது எங்கெல்லாம் வார்த்தைகள் தப்பு தப்பா வருதுன்னு எல்லாம் ஈஸியா புரிய ஆரம்பிச்சுது. பல பல பாடல்களை கண்ணதாசனே தப்பா எழுதி இருக்காரு. ஆனா பிரபலமான கவிஞர்கள் தப்பு செஞ்சா அது தப்பு லிஸ்ட்ல வராதுன்றதால விட்டுடலாம்.

பிற்காலத்தில் பாட்டுப்போட்டி, கவிதை போட்டில எல்லாம் கலந்துக்கும்போது இந்த யாப்பு இலக்கணம் எனக்கு நிறையவே கை கொடுத்துச்சு. பாரதியார் கவிதைகளை பாடலா பாடும்போது வார்த்தைகள் தவறாமல் இருக்க இந்த எதுகை மோனையும், தாள சந்த யாப்பு மரபும் உதவின மாதிரி வேற எதுவும் உதவலை.

'காற்று வெளியிடை கண்ணம்மா' என்னுடைய ரொம்ப ரொம்ப பேவரைட் பாட்டு. பல தருணங்களில் அதை பாடி இருக்கேன். நீயெனதின்னுயிர் கண்ணம்மா வரிக்கு அடுத்த வரி திக்கும்போதெல்லாம் யெ எதுகை தான் கை கொடுத்து, போயின போயின துன்பங்கள்... வாயினிலே அமுதூறுதே... தீயினிலே வரும் ஜோதியே... னு அடுத்தடுத்த வரிகளை நிஜாபகப்படுத்திட்டே இருக்கும். எல்லாமே அந்த யெ, யி எதுகையை வெச்சும், நேர் நிரை நேர் நிரை தாள சந்தமும் தான் கை கொடுத்துச்சு.

யாப்பு படிக்காம கவிதை எழுதரவங்க ஒரு பக்கம் அதை புதுக்கவிதைன்னு எழுதிட்டு இருந்தாலும், அது என்னவோ ஸ்பிலிட் செஞ்சு உடைச்சு போட்ட உரைநடை மாதிரி தான் தோணுது.

இப்போதைக்கு பேஸ்புக்கில் நிறைய மரபு கவிஞர்களை பார்க்க முடியுது. சந்தோஷம். நா.சொக்கன் எல்லாம் மகான். ரொம்ப ரொம்ப கேசுவலான விஷயத்துக்கு எல்லாம் அசால்டா வெண்பா எழுதுராறு. அலட்டிக்கறதே இல்லை. தூய சங்ககால செந்தமிழ் தான் வேணும்னு இல்லை.. பேச்சு மொழி, பிற மொழி சொல்லை கூட அழகா பொருத்தி அட்டகாசமான வெண்பாவை ஜஸ்ட் லைக் தத் அடிச்சு விட்டு அசர வைக்கிறாரு. மிகப்பெரிய ஆச்சரிய போதை இருந்தும் அவரை சந்துச்சு பேசிய அந்த அபூர்வமான அற்புதமான அரை மணி நேரத்தில் எதையும் சொல்ல தோணாமல் அவரை சந்திச்ச ஆச்சரிய பிரமிப்பிலேயே கழிஞ்சு போனது.

இனி வரும் தலைமுறைக்கு தமிழையும் தமிழ் இலக்கணத்தையும் யாப்பின் அடிப்படையையும் தெளிவா சொல்லிக்கொடுத்து தமிழை வளர்க்க எல்லோரும் உதவலாம். ஆனா அதுக்கு நமக்கு முதலில் யாப்பு தெரிஞ்சிருக்கணும். யாப்பு தெரிஞ்சா நாமே தமிழை அவ்வளவு ஈடுபாட்டோட ரசிக்க ஆரம்பிச்சிருவோம்.

மெல்ல தமிழ் இனி சாகும்னு இனியும் பிரகடன படுத்திட்டு இருக்காம, யாப்பிலக்கணத்தை ஜஸ்ட் 10 மார்க் விஷயமா மட்டும் பார்த்து சாய்ஸில் விடாம, தமிழ் பாடத்தில் கட்டாய பகுதியா அது இருக்கணும்ன்றது என்னுடைய ஆசை.

நாமெல்லாம் ஆசை மட்டும் தான் பட முடியும்.


Sunday, May 29, 2016

தமிழக தேர்தல் – 2016

ரு வழியா தமிழக தேர்தல் திருவிழா பரபரப்பா நடந்து முடிஞ்சிருச்சு. எதிர்பார்த்தமாதிரியே அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலை பிடிச்சிருச்சு. அதென்ன எதிர்பார்த்த மாதிரியே?? எல்லா மீடியாவும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும்னு அடிச்சு சொல்லிச்சே? நேரு இண்டோர் ஸ்டேடியத்தை கூட பதவி ஏற்பு விழாவுக்கு ரெடிபண்ணினாங்களேன்னு எல்லாம் அடுக்கடுக்கா கேள்வி கேட்கப்படாது.  சுருக்கமா ஒரு ரிவைண்ட் பார்த்திரலாம்.

Thanks: www.india.com

மீடியா சொன்னதெல்லாம் சரிதான். திமுக தான் ஆட்சியை பிடிக்கும்ன்ற நிலைமை. ஆனா அதே சமயத்தில் வேறொரு ஆங்கிள்ல சில கணக்குகளையும் சிலர் சொன்னாங்க. பொதுவா தமிழக மக்கள் திமுக அதிமுக ரெண்டு கட்சியையுமே வெறுத்திட்டாங்க. ஒரு மாற்றம் வரணும்னு நினைக்கிறாங்க. அதனால் மூணாவது அணிக்கு(!) கணிசமான வாக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஒருவேளை அந்த கணிசம்’, போதுமான அளவுக்கான கணிசமா இல்லைனா கணிசமான வாக்குகள் அதிமுகவுக்கு எதிரா விழுந்தாலும் அது ரெண்டா பிரிஞ்சு திமுக, மூணாவது அணின்னு ஸ்பிலிட் ஆகி அதிமுகவே ஜெயிச்சிரும்னு வித்தியாசமா சிந்திக்கிற சில புத்திசாலிகள் சொன்னாங்க. அதிலும் இன்னும் ஒரு படி மேலே போய், புதிய வாக்காளர்கள் இந்த முறை அதிகம். அவங்களுக்கு திமுக அதிமுகவை விட மூணாவது அணிக்கு தான் ஆதரவு கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. சொல்றதுக்கில்லை. விஜயகாந்தே கூட முதலமைச்சரா ஆனாலும் ஆயிடுவாருன்னு கூட நம்பிக்கையா சொன்னாங்க.

ஆனா மே 14 ஆம் தேதி காட்சி மாறிடிச்சு. 14 – சனி, 15 – ஞாயிறு, 16 – திங்கள் (ஓட்டு பதிவு லீவு) இப்படி தொடர்ந்து மூணு நாள் லீவு கிடைச்சதும், தமிழகத்தை நல்லாக்குற இணைய போராட்டத்தையெல்லாம் தற்காலிகமா மூட்டை கட்டிட்டு கர்நாடகா நோக்கி சாரி சாரியா டூர் கிளம்பிட்டாங்க, தட் சோ கால்டு புதிய வாக்காளர்கள் அலையாஸ் தமிழகத்தை மாற்றத்துக்கு இட்டு செல்லும் புரட்சியாளர்கள்.

சீன் இப்ப கிளியர்.

www.facebook.com/satheeshkumarm
சிட்டி பேஸ்டு புதிய வாக்காளர்கள் இல்லாததால் மூணாவது அணிக்கான வாய்ப்பு பணால். ரூரல் வாக்காளர்கள் திமுக (அ) அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க. மேற்கு தெற்கு தமிழகம் அதிமுகவின் சொத்து. என்னதான் அட்டகாசமான தேர்தல் அறிக்கை கொடுத்து இருந்தாலும் திமுகவுக்கு ஓட்டு போடணுமா வேண்டாமான்றதை தேர்தல் அன்னைக்கு ஓட்டு பெட்டி முன்னாடி நின்னு யோசிக்கும்போது என்ன தோணுமோ அதை தான் மக்கள் செய்வாங்கன்றது தமிழகத்தின் பண்பாடு. அதிமுக கட்சிக்காரங்க உசுரே போனாலும் அதிமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவாங்க. மத்த கட்சிங்க (திமுக உட்பட) எந்த கட்சிக்கு வேணும்னாலும் ஓட்டு போடுவாங்க. தமிழகத்தில் அதிக உறுப்பினர் உள்ள கட்சி அதிமுக. என்னதான் அதிருப்தி இருந்தாலும் ஜெ. நம்ம மக்களை பொருத்தவரைக்கும் கொஞ்சம் பாசம் ஜாஸ்த்தி. எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் லைட்டா லீடிங்க்ல அதிமுக தான் மீண்டும் வரும் அதுக்கு காரணமா முன் திட்டமிட்ட தேர்தல் தேதியான மே-16 ன்ற மந்திர நாள் அமையும்னு எல்லோருக்கும் தெளிவாயிருச்சு.

தேர்தல் முடிவு வந்தப்புரம் தான் தமிழகத்தில் பரபரப்பு.

திமுகவுடன் இணைஞ்சு பணியாற்ற விரும்புவதா ஜெ. சொல்வதும், அவர் எனது மூத்த சகோதரின்னு ஸ்டாலின் சொல்றதும் பொது இடங்களில் ஒருத்தொருக்கொருத்தர் வணக்கம் சொல்லிக்கறதும்.. அப்பப்பா.. ஜெ. மாறிட்டாங்களான்னு உலகமே உச்சு கொட்டி ஆச்சரியமா பாத்துது. ஆனா இதெல்லாம் வழக்கமானது தான்றதும், ஏற்கனவே திமுகவை அப்பப்போ அவமானப்படுத்திட்டு அசால்டா அசராம அறிக்கைவிட்டு சமாளிக்கறதும் மாண்புமிகு அம்மாவின் வழக்கம்ன்றது தமிழக அரசியலை தெரிஞ்சவங்க புரிஞ்சுருப்பாங்க.  ஆனா இந்த திடீர் பாசத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு.

ஜூன் 11 ஆம் தேதி ராஜ்யசபா எலக்சன். தமிழகத்துல 6 சீட் காலியாவுது. நியாயமா பார்த்தா இப்போதைய எம்.எல்.ஏ கவுண்ட் பிரகாரம் அதிமுகவுக்கு 3 சீட், திமுகவுக்கு 2 சீட் எந்த சிக்கலும் இல்லாம கிடைச்சிரும். பாக்கி ஒரு சீட்டுக்கு அதிமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் திமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் மிச்சம் இருக்காங்க. இவங்க ஒண்ணா சேந்து ஓட்டளிச்சா தான் ஒரு எம்.பி கிடைக்கும். மிச்சம் இருக்கும் எம்.எல்.ஏக்களில் அதிமுகவை விட திமுகவுக்கு தான் அதிகம். சோ, லாஜிக்கா பார்த்தா திமுக 3 வதா ஒரு வேட்பாளரை அறிவிக்கணும் அதிமுக அதை ஆதரிக்கணும். ஆக அதிமுக 3, திமுக 3 எம்பிக்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பும். ஆனா அதிமுக 4 பேரையும் திமுக 2 பேரையும் வேட்பாளரா அறிவிச்சிருக்காங்க. அதான் ஆச்சரியம்.!!

அதிமுக 4 வது வேட்பாளரை அறிவிச்சது வழக்கமான வீம்புக்காகன்னு  தான் நினைச்சேன். ஆனா திமுக 3 வேட்பாளரை அறிவிக்கிறதுக்கு பதிலா 2 வேட்பாளரை அறிவிச்சப்ப தான் அந்த பாசமழைக்கான அர்த்தம் லைட்டா புரிய ஆரம்பிச்சது. ஒருமித்த மனதோடு அதிமுக வேட்பாளருக்கு திமுக ஆதரவு தெரிவிச்சிருப்பதும், அது ட்டா மாறி அதிமுகவின் 4 வது வேட்பாளர் எம்.பி ஆகி டெல்லி போயி பதவி ஏத்துக்க வரைக்கும் திமுகவை தாஜா பண்ணியே ஆகவேண்டிய இக்கட்டில் அதிமுக இருப்பதும்..... ஆனானப்பட்ட ஜெ.வையே இறங்கி வரவெச்சிருக்கு.

இன்னொரு பிரச்சனை தமிழக அசம்பிளி.

மூனுல ரெண்டு பங்கு பலம் இருந்தா தான் ஜெ. தான் விரும்புன படி அசெம்பிளியை நடத்த முடியும். எதிர்கட்சி எல்லாரையும் பத்தி விட்டுட்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை எல்லாம் வெச்சுக்கிட்டு விதி 110 இன் கீழ்  எதை வேணும்னாலும் வாசிச்சிட்டு போகலாம். யாரும் எதுவும் கேக்க முடியாது. போன தடவை 151 எம்.எல்.ஏ தான் அதிமுகவுக்கு இருந்துச்சு. மூனுல ரெண்டு பங்குன்னா.. (234/3 x 2) 156 எம்.எல்.ஏ வேணும். அதனால் தேமுதிகவை உடைச்சு எட்டு பேரை இழுத்து அந்த மெஜாரிட்டியை செயற்கையா ஏற்படுத்திக்கிட்டாங்க. ஆனா இப்ப சிச்சுவேஷனே வேறே.

அதிமுக 132 தான். அதாவது பெரும்பான்மைக்கான 118 சீட்டை விட ஜஸ்ட் 14 எம்.எல்.ஏ தான் அதிகம். அதே சமயம் திமுக 89 + காங் 8. அதனால் முன்ன மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு சபையை நடத்த முடியாது. எந்த ஒரு பில் பாஸ் ஆகணும்னாலும் போராடவேண்டி இருக்கும். அது மட்டும் இல்லாம தன்னுடைய எம்.எல்.ஏக்களை தக்கவெச்சுக்கவும் வேணும்.  இப்படி மல்டி பாயிண்டில் ஜெ.வுக்கு சங்கடங்களும் சிக்கல்களுமா அமைஞ்சிருக்கு தேர்தல் முடிவு.

ஒரு நண்பர் பேஸ்புக்குல சொன்னமாதிரி, இப்போதைக்கு ஆட்சி ஜெயலலிதாவினுடையது தான். ஆனால் அதை நடத்தப்போவது ஸ்டாலின் தான். அவரது அனுமதி இன்றி இனி எதுவும் தமிழகத்தில் அசையாது. எஜ்ஜாட்லி அது தான் சூழ்நிலை இப்போ.

இனியாவது சட்டசபை சத்தசபையா இல்லாம, மேஜை தட்டல்கள் இல்லாம, கவுரவமா ஆக்கப்பூர்வமா மாநில வளர்ச்சிக்கு உரியதா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

எந்த கட்சி உடைஞ்சாலும் திமுக தான் உடைச்சுது திமுகதான் உடைச்சுதுன்னு சில கத்துக்குட்டிகள் கதறும்போது சிரிப்பா வரும். ஆனா அது உண்மையா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு இப்ப எனக்கு தோணுது. அப்படி ஒரு பழக்கம் திமுகவுக்கு இருந்திருந்தா.. ஆகப்பெரும் நடவடிக்கையா அதிமுகவிலிருந்து 25 பேரை இழுக்கறது தான் முதல் வேலையா இருந்திருக்கும். ஆட்சியே கவிழ்ந்து திமுக அரியணை ஏறவும் சான்ஸ் இருக்கு. நல்லவேளையா கட்சியை உடைக்கறது, பதவிக்கு அலையறதுனு எல்லாம் இன்னும் திமுக இறங்கலை. அப்படி உடைக்கறதுன்னு இறங்கினா பைசா பெறாத கட்சிகளை உடைக்கமாட்டாங்க, இது மாதிரி ஆதாயம் தர்ற மாதிரியான உடைப்புல தான் லாஜிக்கலா ஈடுபடுவாங்கன்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாம பலரும் விவாதிக்கறதை பார்க்கும் பொது தான், நம்முடைய கல்வி தரம் எந்த அளவுக்கு சிந்திக்கும் திறனை மழுங்கடிச்சிருக்குன்றதே புரியுது.

இந்த தேர்தல் நமக்கு கொடுத்திருக்கும் பாடங்களில் முக்கியமானதுன்னா இவை தான்.

தமிழகம், திமுக & அதிமுக தவிர வேறு கட்சிகளுக்கானது அல்ல.

காங்கிரசுக்குன்னு எந்த செல்வாக்கும் இல்லை. ஜெயிக்கக்கூடிய வாய்புள்ள கூட்டணியில் இருந்தும்கூட காங்கிரஸ் மட்டும் செமையா தோத்திருக்கு.

சென்னை மக்கள் வெள்ள பாதிப்பை மறக்கலை. அதிமுகவுக்கு சென்னைல பலத்த அடி விழுந்திருக்கு.

மதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, கம்யூனிஸ்டுகள் என யாரையும் தனியாக தமிழக மக்கள் ஆதரிக்க தயாரா இல்லை. அவர்களுக்கான ஆதரவு என்பது அவர்கள் திமுக / அதிமுக யார் கூட இணைஞ்சு இருக்காங்கன்றதை பொறுத்ததுனு புரிய வெச்சிருக்காங்க.

தமிழகம் தழைக்குமா? மீண்டும் ஜெ. தன் சுய ரூபத்தை காட்டுவாரா? மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதெல்லாம் ஒரு ஆறு மாசம் கழிஞ்சப்பறம் தான் தெரியும்.




Wednesday, May 4, 2016

பிரச்சாரத்தில் சொதப்பும் ஜெ; தேர்தலில் சரியும் அதிமுக

தேர்தல் களம் 2016 பல பல அதிசய திருப்புமுனைகளை கண்டு வருகிறது. 

தேர்தல் அறிவிக்கப்படும் நாளில் தமிழகத்தின் அசைக்கமுடியாத மாபெரும் இயக்கமாக அதிமுக தான் இருந்தது. ஆனால் இப்போது இந்த மூன்று வாரங்களில் அதிமுகவின் நிலை மிக மிக பரிதாபகரமானதாக மாறிவிட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் எனக்கு தெரிந்து இரண்டே பேர்தான். ஒன்று சரியாக திட்டமிடாத, சுதாரிப்பற்ற ஜெ. இரண்டு கள நிலவரமோ மக்கள் மனநிலையோ புரிந்துகொள்ளாமல் ஜெவுக்கு பிரச்சார உரை எழுதி தரும் அந்த புலவர் பிரகஸ்பதி.

ஜெயலலிதா தமிழக அரசியலில் முன்னிலைக்கு வந்ததே அவரது சாதுரியமான பேச்சாற்றலால் தான். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தமிழகம் முழுவதும் கிராமம் கிராமாக சென்று கொடியேற்றி உரை நிகழ்த்தி தான் தனது தனிப்பட்ட செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கையில் சிறந்த பார்லிமெண்டேரியன் என்று விருதுகள் வாங்கி தனது பேச்சாற்றலால் இந்திரா காந்தி மட்டுமல்லாமல் பல தேசிய தலைவர்களின் அபிமானத்தையும் பெற்றார்.

அப்படிபட்ட ஜெ. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இந்த அளவுக்கு சொதப்புவார் என அவரது இயக்க ரத்தத்தின் ரத்தங்கள் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.

தேர்தல் அறிவிக்கப்பட்டபொழுது எதை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என்பதில் எந்த கட்சிக்கும் தெளிவான கண்ணோட்டம் இல்லை. ஆட்சி மீது அப்போதைய நிலையில் சொல்லிக்கொள்ளும் படியான பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை. திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின் நடத்திய தமிழக சுற்றுப்பயணத்தில் தனக்கு மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து, தொகுதி வாரியாக உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்போம் என்கிற வாக்குறுதியை கொடுத்து தான் களம் இறங்கியது. அதிமுகவை பொறுத்தவரை தனது தனிப்பட்ட செல்வாக்கு, ஆட்சியின் மேன்மையை மட்டுமே நம்பி களம் இறங்கியது. ஆனால் சென்னையில் நடந்த முதல் பிரச்சார கூட்டத்திலேயே ஜெ. சொதப்பிய சொதப்பல் எதிர்க்கட்சிகளுக்கு மணி மணியாக பாயிண்ட்ஸ் எடுத்து கொடுத்து பிரச்சார களத்தை சூடு பிடிக்க வைத்தது.

சென்னை பிரச்சார கூட்டத்தில் தனது ஆட்சியின் சாதனையாக ஜெ. சொன்னது, சென்னை வெள்ள நிவாரணம், தொழில் முதலீடு, சென்னை மெட்ரோ ரயில் ஆகியவை தான். இதையே பிள்ளையார் சுழி ஆக்கி ஒவ்வொன்றாக பதிலளிக்க தொடங்கியது திமுக. வெள்ள நிவாரணம் பற்றி ஜெ பேசியதற்கு வெள்ள சேதம் எதனால் ஏற்பட்டது என்பதை பற்றி விலாவாரியாக விளக்க தொடங்கியது எதிர்கட்சி பிரச்சாரங்கள். தொழில் வளர்ச்சி பற்றி ஜெ. சொன்னதற்கு தொழில் துறையை முடக்கி வைத்ததை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் புட்டு புட்டு வைக்கிறார்கள் மற்றவர்கள். சென்னை மெட்ரோ ரயில் தனது சாதனை என ஜெ. சொன்னதற்கு ஜெ. அந்த திட்டத்தை எப்படி எல்லாம் முடக்கி வைத்தார் அதன் பின் நீதிமன்றம் தலையிட்டு தான் அந்த திட்டத்தை செயல்படுத்தியது என்பதை செய்திகளோடு விளக்கியது எதிர்கட்சி முகாம்.

சென்னை பிரச்சாரம் சொதப்பியபோதே கொஞ்சம் சுதாரித்திருக்கலாம் ஜெ. ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு கூட்டத்திலும் கூடுதல் சொதப்பல்களை அள்ளி தெளித்ததன் பயனாக அதற்கான பதிலடிகளை ஆதாரபூர்வமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் மத்தியில் எடுத்து எடுத்து வைக்க வைக்க, அதிமுக மீதான பிரம்மாண்ட பிம்பம் மெல்ல மெல்ல மக்கள் மனதிலிருந்து சரிய தொடங்கியது.

ஜெ.வுக்கு பிரச்சாரம் எழுதி கொடுப்பவராவது மக்கள் மனநிலையை புரிந்து கொண்டிருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஜெ. பேசவிருக்கும் பகுதியின் உண்மையான பிரச்சனைகளை பற்றியாவது தெரிந்து வைத்திருக்கவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் எண்ணற்ற தகவல்களை தினசரி அறிந்து வருவதால் அதிகமாக பொய்மொழிகள் இல்லாத வகையிலாவது ஜெ. பிரச்சார உரையை தயாரித்திருக்கவேண்டும். ஆனால் ஏதோ ஒரு கனவு லோகத்தில் இருக்கும் அதிமுகவினர் தமிழகம் பொற்காலமாக இருப்பது போன்ற ஒரு மாயையில் இருந்து இன்னமும் மீளாததால் யதார்த்தத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத பிரச்சார உரையை எழுதி கொடுத்து, அதை ஜெ.வை படிக்க வைத்து, உள்ள கொஞ்ச நஞ்ச அபிமானத்தையும் மக்கள் மத்தியில் இருந்து நீக்கி கொண்டார்கள்.


இப்படித்தான் கோவை பொதுக்கூட்டமும் அமைந்தது. ஏற்கனவே சேலம் பிரச்சார கூட்டத்தில் சேலம் மாவட்ட மக்களுக்கு கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த (!) ஜெ. மீண்டும் ஒரு முறை கோவை மாவட்ட மக்களுக்கு கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். (குறைந்த பட்சம் எங்கே பேசுகிறோம், யாரை பற்றி பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்கிற சிந்தனையாவது இருந்திருந்தால் இப்படியான சமந்தா சம்மந்தம் இல்லாத ஊர்களில் சம்மந்தமற்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசும் காமெடியை தவிர்த்திருக்கலாம்)

அதிமுக இதுவரை தேர்தல் அறிக்கை எதையும் வெளியிடவில்லை. திமுக, பாமக, ம.ந.கூ ஆகியவை தங்களது செயல் விளக்கங்களை தேர்தல் அறிக்கையாக வெளியீட்டு இருக்கிறார்கள். அதிமுகவோ மக்களின் குறைகள் என்ன? தமிழகத்துக்கு என்ன திட்டங்கள் தேவை என்பதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள கூட முயற்சிக்காததால் இன்று வரை தேர்தல் அறிக்கையோ செயல் திட்டங்களோ வெளியிடவில்லை. பொத்தாம் பொதுவாக, நான் உங்களுக்கு தேவையானதை செய்வேன், நீங்கள் கனவிலும் நினைக்காததையும் செய்வேன், நான் சொல்லாததையும் செய்வேன் என சொல்கிறாரே தவிர இன்னின்ன பிரச்சனைகளை இன்னின்ன வகையில் தீர்ப்பேன், இன்னின்ன திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்துவேன் என சொல்லவே இல்லை. நிறைவேற்றுகிறாரோ இல்லையோ, இதை இதை செய்வேன் என்கிற வாக்குறுதியாவது கொடுத்திருக்கலாம். ஆனால் அதை கூட அவரால் செய்ய முடியவில்லை. எனது அதிமுக நண்பர்களை கேட்டால் ரொம்ப வருத்தப்பட்டு சொல்கிறார்கள். அம்மாவுக்கு எங்கே என்ன பிரச்சனை இருக்கிறது, என்ன வாக்கு கொடுக்கவேண்டும் என்று கூட யாரும் எடுத்து சொல்வதில்லை என. இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாரையும் வளர்த்தாமல் இருப்பதன் பலனை இப்போது அனுபவிக்கிறது அதிமுக.

கோவை பொதுக்கூட்டத்திலும் அது தான் நடந்தது. தொழில் துறையில் மிகப்பெரிய சாதனைகள் நடத்தி இருப்பதாகவும், 4,509 புதிய தொழிற்சாலைகளை தொடங்கி இருப்பதாகவும்(!), தொழிலாளர்கள் எல்லோரும் தனது ஆட்சியில் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பெருமிதத்தோடு அவர் பேசியதை கேட்ட எனது அதிமுக நண்பர்களே ஆடித்தான் போய் விட்டார்களாம்.  அதில் பலரும் சொந்தமாக தொழிற்சாலைகள் வைத்து நடத்தி நசிந்து கொண்டு இருப்பவர்கள். தொழில் வளர்ச்சி முடங்கி போய் வேறு மாநிலங்களுக்கு செல்லலாமா என யோசித்து கொண்டிருப்பவரும் அதில் அடக்கம். இப்படியான நிலையை அறிந்து தான் கர்நாடக முதல்வர் கூட கோவையிலே கூட்டம் நடத்தி ஏன் தமிழகத்தில் இருந்து இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகருக்கு வாருங்கள். உங்களுக்கு தொழில் நடத்த எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன் என பகிரங்கமாக வந்து அழைப்பு விடுத்து போனார். சில தொழிற்சாலைகளும் கோவையிலிருந்து கர்நாடகம் சென்று விட்டது. அப்படியான சூழல் தான் கோவையிலே நிலவி வருகிறது என்பதை கூட தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெ. அறிந்திருக்கவில்லை.

கோவை என்றாலே டெக்ஸ்டைல் சிட்டி, தொழில் நகரம் என்பதெல்லாம் பழங்கதை. ஒரு காலத்தில் ஓஹோவென ஓடிக்கொண்டிருந்த மில்களும், மோல்டிங் கம்பெனிகளும், மோட்டோர் கம்பெனிகளும், நெசவு தறி இயக்குவோரும், பம்பு செட், கிரைண்டர் உற்பத்தியாளர்களும் தொழில்கள் நசிந்து, இப்போது, கிடைத்த கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு அவலமான நிலை தான் கோவையிலே இருக்கிறது. இந்த யதார்த்தத்தை கூட புரிந்து கொள்ளாமல் வெற்று பெருமித பேச்சுக்களை எழுதிக்கொடுத்து அதை அப்படியே பேசி சொந்த கட்சிக்காரர்களும் மக்களும் கேலி செய்யும் அளவுக்கு ஜெ.ஆளானது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான். ஜெ. அப்படி பட்ட ஆள் எல்லாம் இல்லை. பொய்யாகவாவது நசிந்து கிடக்கும் மில்களை புனரமைத்து இயங்க செய்வேன், நெசவாளர்களுக்கு சலுகைகள் வழங்குவேன், பம்ப், மோட்டோர் தொழிற்பூங்கா அமைப்பேன் என பொய் வாக்குறுதியாவது கொடுத்து செல்வது தான் அவரது வழக்கம். இப்படி அப்பட்டமாக தனக்கு யதார்த்த நிலை எதுவுமே தெரியாது என மக்கள் உணரும் வகையில் அப்பட்டமாக பிரச்சாரம் செய்து சென்றிருக்கமாட்டார்.


கோவை மாவட்டம் அதிமுகவின் அசைக்கமுடியாத பெரும் கோட்டை என்பது எல்லாம் மே 1 ஆம் தேதி ஜெ பிரச்சாரம் செய்தது வரைக்கும் தான். இப்போது சொந்த கட்சிக்காரர்களும், மக்களும் (அவர்களிலும் தொழிலாளிகளும், கூலி வேலைகாரர்களும், சிறு/குறு தொழில் முனைவோரும் இருக்கிறார்களே?) எல்லோருமே அதிமுகவை விமர்சிக்க தொடங்கி இருப்பதை ஜெ சீரியசாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. இந்த தேர்தலில் கோவை பகுதி அதிமுகவுக்கு மிகப்பெரிய பதிலடியை கொடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் அங்குள்ளவர்களின் பேச்சில் தெரிகிறது.

மக்களால் நெருங்கமுடியாத ஜெ. இப்போது வேட்பாளர்களாலும் நெருங்கமுடியாதவராக மாறி போனதை அதிமுகவினரே ரசிக்கவில்லை. தனித்தனி மேடை அமைத்து அங்கே ஜெ உட்கார்ந்திருக்கிறார் என்கிற உருவாக்கத்தை மட்டுமே மக்களுக்கு கொடுத்து, பிரச்சார உரையை வாசித்து செல்லும் வழக்கத்தை ஜெ கை கொண்டிருப்பது அவரை மக்களிடம் இருந்தும், தொண்டர்களிடம் இருந்தும், ஏன் வேட்பாளர்களிடம் இருந்துமே வெகு தூரம் விலக்கி வைத்திருக்கிறது.

மக்களுக்காக நான், மக்களால் நான் என ஒரு பஞ்ச் டயலாக்கை எல்லா பொதுக்கூட்டத்திலும் பேசும் ஜெ ஒருபோதும் மக்களோடு நான் என சொல்லியதில்லை. அதனால் தானோ என்னவோ மக்களுக்காக நான் (எதையும் செய்யமாட்டேன்); மக்களால் நான் (எல்லா வளங்களையும் அனுபவிப்பேன்) என்கிற ரீதியிலேயே அவரது அந்த பஞ்ச் டயலாக் பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது.

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் அதிமுகவினரே அதிக அளவில் பணம் பதுக்கி வைத்திருப்பது வெளியாவதும், யதார்த்தம் சிறிதும் இல்லாத பிரச்சார உத்தியும், மக்கள் பிரச்சனைகளை பற்றிய எந்த உணர்வும் இல்லாத ஜெ. பேச்சும், அதிமுகவின் வெற்றி சதவிகிதத்தை குறைத்து வருவதை அவர் உணர்ந்து கொள்வது நல்லது.

முறையாக பிரச்சாரம் செய்து, பொய்யாகவேனும் மக்களின் பிரச்சனைகளை அறிந்துவைத்து அதை தீர்த்து வைப்பதாக பொய் வாக்குறுதியேனும் கொடுத்து இருந்தால் அதிமுக மீதான மக்களின் நம்பிக்கை அப்படியே இருந்திருக்கும். தனது பிரச்சார சொதப்பல்களால் தனது எதிர்காலத்தையும் கட்சியின் எதிர்காலத்தையும் ஒரு சேர கெடுத்துக்கொண்டு வருகிறார் மாண்புமிகு அம்மா. இது தமிழகத்துக்கு நல்லதா கெட்டதா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.


Printfriendly