Tuesday, April 10, 2018

காவிரி - ஸ்கீம் - விளக்கம்

உச்சநீதிமன்றம் நேற்று கொடுத்திருக்கும் விளக்கம் என்னை (விளக்கெண்ணெய் என தப்பா படிச்சா கம்பெனி பொறுப்பல்ல 😝) மிகவும் வருத்தத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு தான் வழக்கின் சாரம்சமே. அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனி அதை அமல்ப்படுத்த வேண்டியது தான் பாக்கி.

சரி, நடுவர் மன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது? நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பு காவிரி விவகாரத்தின் முழுமையான ஆவணம். இதுவரை நடந்தது என்ன? எத்தனை பேச்சுவார்த்தை நடந்தது? ஒப்பந்தத்தை மீறி அதிகரிக்கப்பட்ட பாசன பரப்புக்கள், கூடுதல் அணைகள் என்னென்ன? ஒவ்வொரு பகுதியிலுமான சராசரி மழை அளவு. ஒவ்வொரு மாநிலத்தின் நீர் தேவை. என எல்லா விதமான ஆய்வுகளையும் விரிவாக ஆராய்ந்து பதிவுசெய்து அதன் அடிப்படையில் இனி பேச்சுவார்த்தையோ மாநிலங்களின் கட்டுப்பாட்டில் அணையோ சாத்தியமில்லை என்பதற்கு தகுந்த காரணிகளையும் பதிவு செய்திருக்கிறது.

இதற்கு தீர்வாக சொல்லப்பட்ட ஸ்கீம் பற்றியும் விரிவாக ஸ்டெப் பை ஸ்டெப் புரசீஜர்ஸ் நடுவர் மன்ற தீர்ப்பிலேயே இருக்கிறது. அதாவது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும். அதில் உரிய நபர்களை உள்ளடக்கிய ஒரு குழு (மத்திய மாநில அரசு அதிகாரிகள் & மாநில பிரதிநிதிகள்) அமைத்து அவர்களது பொறுப்பில் எல்லா அணைகளையும் கொடுக்கவேண்டும்.

மாதாமாதம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நீர் கொடுக்கவேண்டும் என நடுவர் மன்ற தீர்ப்பிலேயே இருக்கிறது. அதன் அடிப்படையில் முறையாக நீர் திறந்துவிடும் கடமை காவிரி மேலாண்மை வாரியத்தின் பொறுப்பு. அதற்கு தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் மத்திய அரசு செய்யவேண்டும்.

இது தான் அந்த ஸ்கீம். இந்த ஸ்கீமின் ஒரு பகுதி தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது.

இத்தனை விளக்கமாக நடுவர் மன்ற தீர்ப்பு இருந்தும் அதை படிக்காமல், ஸ்கீமுக்கான விளக்கம் கேட்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல.

ஆனால் அந்த நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்கமாட்டோம் என கர்னாடக அரசு பிடிவாதம் பிடித்ததால் தான் உச்சநீதிமன்றம் சென்றோம்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் விரிவாக மீண்டும் சொன்னதையே சொல்ல விரும்பாமல் சுருக்கமாக 'நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை. அந்த ஸ்கீமை செயல்படுத்த ஆறுவார காலம் மத்திய அரசுக்கு கெடு' என சிம்பிளாக முடித்து விட்டது. மத்திய அரசு என்ன செய்திருக்கவேண்டும்? நடுவர் மன்ற தீர்ப்பை எடுத்து படித்து பார்த்து அதில் சொன்னபடி செயல்பட ஆரம்பித்து இருக்கவேண்டும். ஆனால் அதை படிக்காமல் காலத்தை கடத்த விளக்கம் கேட்டு குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆறு வாரம் கழிச்சு ஸ்கீம்னா இன்னா? என ஒரு விளக்கம் கேட்டு அதற்கு நேற்று உச்சநீதிமன்றம் விளக்கமும் தந்திருக்கிறது

அதாவது CMB அமைத்து நீர் திறந்துவிடும் திட்ட அறிக்கை தயாரித்து மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமித்து அணையின் மேலாண்மை பொறுப்பை நிறைவேற்றுவது.

இதை தான் நடுவர் மன்றம் விரிவாக தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. அதை அமல்ப்படுத்த தானே ஆறுவாரம் அவகாசம்.

திரும்பவும் எல்.கே.ஜி குழந்தை போல் சந்தேகம் கேட்பதும் நடுவர் மன்ற தீர்ப்பையே மீண்டும் வாசித்து காட்டுவதும் தமிழகத்தை கேலிக்குள்ளாக்குவதும் நேரம் கடத்துவதுமே அன்றி வேறில்லை

இதில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் இன்னொன்று உள்ளது.

மத்திய அரசு தனது மனுவில் "தீர்ப்பை செயல்படுத்த தனக்குள்ள பிரச்சனைகள் இருப்பதால்.." என மேம்போக்காக சொல்லி இருக்கிறது. அது என்ன பிரச்சனை? தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மனமில்லையா? நடுவர் மன்ற தீர்ப்பை அமல்ப்படுத்தி கர்னாடக மக்களின் கோபத்துக்கு ஆளாகவேண்டாம் என நினைக்கிறதா? கர்னாடக தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறதா? என்றெல்லாம் விரிவாக சொல்லாமல் மொட்டையாக பிரச்சனைகள் என சொல்லி இருக்கிறது. இதை தான் நாம் இப்போது கேள்வி கேட்கவேண்டும். தீர்ப்பை அமல்ப்படுத்துவதில் தமிழகத்துக்கு நீதி வழங்குவதில் பாஜகவுக்கு என்ன பிரச்சனை என்பதை விளக்க சொல்லி கேட்பது தமிழகத்தின் தமிழக மக்களின் கடமையும் கூட

முன்பை விட பாஜக மீது அதீத வெறுப்பை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது இவ்விளக்கம்

1 comment:

Printfriendly